Sunday, September 28, 2014

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வு!!

FMNதமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும்.
அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை திரும்பினர்.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பிக்கள், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்., அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம்,முறைப்படி அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து புதிய முதல்வர் தேர்வுக்கான கடிதத்தைக் கொடுக்கிறது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார்.
கடந்த 2001-2002ஆம் ஆண்டு காலத்தில் இடைக்கால முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். நாளை ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கும் போது அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval