Thursday, July 11, 2019

200 ரூபாய் கடனை அடைப்பதற்காக 30 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த கென்ய நாட்டு எம்.பி!

Image
தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்பி ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் நியாரிபரி சாசே தொகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்பவர் கடந்த 1985 - 1989 வரை மஹாராஸ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மேலாண்மை படிப்பு படித்துவந்தார்.
அப்போது மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்த நிலையில் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த காசிநாத் காலி என்பவரிடம் பொருட்கள் வாங்கி வந்துள்ளார்.
பின்னர் படிப்பு முடிந்து நாடு திரும்பும் வேளையில் மளிகைக்கடையில் அவர் வைத்திருந்த 200 ரூபாய் கடனை அடைக்க முடியாததால் மனவேதனையோடு நாடு திரும்பினார். அதன்பின்னர் அவர் கடுமையாக உழைத்து முன்னேறி தற்போது கென்ய நாட்டின் எம்பியாக உள்ளார். இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக தான் வசித்து வந்த அவுரங்காபாத் நகருக்கு திரும்பினார்.
இது குறித்து பேசிய காலி, என்னை சந்திக்க வேண்டும் என்று ரிச்சர்ட், திங்கட்கிழமை சொன்ன போது என்னால் நம்பமுடியவில்லை. அவரை நேரில் பார்த்த போது நான் பார்ப்பது நிஜம்தானா என்று நம்பமுடியவில்லை என்று தெரிவித்தார்.
தான் வறுமையில் வாடிய போது உதவி செய்தவரை பார்ப்பதற்காக தன் மனைவி மிச்செல்லுடன் இந்தியா வந்த ரிச்சர்ட் கூறுகையில், “நான் இங்கே படித்துக் கொண்டிருந்த போது மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த சூழலில் இவர்கள்தான் எனக்கு உதவினார்கள்; எனக்கு உதவும் இவர்களுக்கு திரும்ப ஏதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்; வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டேன்; காசி நாத் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

மேலும், காசிநாத் குடும்பத்தினர் உணவு உண்பதற்காக உணவகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தனர். ஆனால், நான் அவர்கள் வீட்டிலேயே உணவை உண்டேன் என்று தெரிவித்தார். அதோடு, காசிநாத் குடும்பத்தினர் கென்யா வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
courtesylNews7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval