Thursday, November 3, 2016

சிவகிரி அருகே வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் வேப்பமரத்தின்மீது மோதிய மர்மபொருள் பறக்கும் தட்டு விழுந்ததாக பரபரப்பு


சிவகிரி அருகே வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் வேப்பமரத்தின் மீது மர்ம பொருள் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிசய நிகழ்வு

வானத்தில் இருந்து சிலசமயங்களில் அபூர்வ நிகழ்வுகள் நடப்பது உண்டு. இரவுநேரங்களில் வானத்தில் இருந்து சிலநேரங்களில் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி வரும் தோற்றத்தை பார்த்து இருக்கிறோம். விண்கற்கள் பூமியில் எரிகல் போல விழுவதையும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இதுபோல் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கரூர் மாவட்ட எல்லையில் அதிசய நிகழ்வு ஒன்று நேற்று நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:–

பயங்கர சத்தம்

சிவகிரி அருகே உள்ளது கொளந்தபாளையம் கிராமம். இந்த ஊர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நேற்று காலை 10.30 மணிக்கு இந்த கிராம மக்கள் வழக்கமான இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். வானத்தில் ஏதோ விமான விபத்து நடத்து விட்டதோ? என்று எண்ணினார்கள்.

மர்மபொருள்

பயங்கர சத்தத்தை கேட்டதும் ஆங்காங்கே டீக்கடை மற்றும் கடைகள் முன்பு நின்று கொண்டு இருந்த ஊர்ப்பொதுமக்களும் திரண்டனர். ஆனால் விமானம் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வானத்தில் இருந்து ஏதோ மர்ம பொருள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டே இருந்தது. அது பார்ப்பதற்கு வட்ட வடிவத்தில் இரும்புபொருள் போல் தெரிந்தது.

வானில் இருந்து வேகமாக வந்த வட்ட வடிவபொருள் கொளந்தபாளையம் கிராமத்தில் குழந்தைவேல் என்பவரது வீட்டு வாசலின் முன்பு உள்ள ஒரு வேப்பமரத்தின்மீது மோதியது. பின்னர் அந்த மர்ம பொருள் கிளைகளை உடைத்தபடி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அந்த மர்ம பொருள் பம்பரம் போன்று சிறிது நேரம் வேகமாக சுழன்றபடி நின்றது.

பரபரப்பு

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் அந்த மர்ம பொருள் அருகில் சென்று பார்த்தனர். பார்ப்பதற்கு சுமார் 10 கிலோ எடையில் வட்ட வடிவிலான இரும்பு போன்ற தோற்றம் உடைய பொருளாக இருந்தது.

இதுபற்றிய செய்தி காட்டுத்தீ போல அந்தப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் சிவகிரி, கொளந்தாபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அதிசயத்துடன் மர்ம பொருளை பார்த்துச்சென்றனர். விழுந்தது பறக்கும் தட்டாக இருக்குமோ? அல்லது ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் உடைந்த பாகமாக இருக்குமோ? என சிலர் பேசிக்கொண்டனர்.

இந்த மர்ம பொருளால் ஈரோடு மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
c

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval