Thursday, February 4, 2016

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தில் வசித்து வருபவர் முத்து. பிரபல நகைச்சுவையாளரான இவர், 'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.


கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் இன்று காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

கார், திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம் அடைந்தார். வையம்மாள் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துவிற்கு மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார் .  
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval