Wednesday, November 11, 2015

கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம்! மின்சாரம், போக்குவரத்து 2வது நாளாக துண்டிப்பு!

22_n
கடலுார் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலுார் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலுார் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மின்சாரம் துண்டிப்பு
கன மழையுடன், 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன; மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாததால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. கிராமங்களில், குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்ட தலைநகரான கடலுார், செம்மண்டலம் பகுதியில், நேற்று மாலை தான் மின்சாரம் வழங்கப்பட்டது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
கன மழையால், மின் வாரியத்திற்கு மட்டும், 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடலுாரில் மின் வினியோகத்தை சரி செய்யும் பணியில், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, 2,039 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடலுாரில், 2,000 மின் கம்பங்கள்; 64 டிரான்ஸ்பார்மர்; 226 கீ.மீ., நீள மின் கம்பியும் சேதம் அடைந்துள்ளது. 1,118 கிராமங்களில், 700 கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், மற்ற கிராமங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயிர்கள் சேதம்
சம்பா நெல், 50 ஆயிரம் ஏக்கர்; கரும்பு, 1,250; சோளம், 250; உளுந்து, 2,500; வாழை, 1,125; தோட்டக்கலை பயிர்கள், 75 ஆயிரம் ஏக்கர் என, மொத்தம், 1.30 லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. அதாவது கடலுார் மாவட்டத்தில், மழை சேதத்தின் அளவு, 1,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
சேத்தியாத்தோப்பு: வடலுார் பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சென்னை – கும்பகோணம் சாலை அடித்து செல்லப்பட்டதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. இவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள், வடலுார், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கரைமேடு அருகே சாலை துண்டிக்கப்பட்டதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. கடலுார் – சிதம்பரம் சாலை உள்ளிட்ட இடங்களில், மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது, வெள்ளநீர் வடிந்து வருவதால், நேற்று மதியம் முதல் போக்குவரத்து துவங்கியது.
39 மருத்துவ குழுக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவுவதை தடுக்க, 39 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர் என, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.
சேதம் விவரம்
ஒரு மின் வழித்தடம் அமைக்க, 20 லட்சம்; ஒரு மின் கம்பத்திற்கு, 7,200; டிரான்ஸ்பார்மருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவாகிறது.கடலுாரில், 240 மின் வழித்தடம், அவற்றில் உள்ள, 3,600 கம்பம், 1,200 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. எனவே, சேதம் மதிப்பு, 110 கோடி ரூபாய் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் குழு
கடலுார் விரைவு கடலுார் மாவட்டத்தில், மழை நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதால், ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு, கடலுாருக்கு விரைந்து உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 440 மி.மீ., மழை பெய்யும். வங்கக் கடலில் உருவான, தீவிர காற்றழுத்த மண்டலம் காரணமாக, மூன்று நாட்களில், 300 மி.மீ., மழை பெய்துள்ளது.
கடலுார் மாவட்டத்தின் சராசரி மழை அளவு, 697 மி.மீ., தற்போது வரை, 500 மி.மீ., மழை பெய்துள்ளது. பெருமழை காரணமாக, அங்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் தேதிகளில் மட்டும், 266 மி.மீ., மழை பெய்துள்ளது. மிக அதிக மழை பெய்ததால், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி, அங்கு அனுப்பப்பட்டு, நிவாரணப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட, 29 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. இப்பணிகளை ஒருங்கிணைக்க, தலா, இரண்டு சப் – கலெக்டர்கள் தலைமையிலான ஐந்து குழுக்கள் உள்ளன.
நான்கு சப் – கலெக்டர்கள், 23 சார்நிலை அலுவலர்கள் அடங்கிய குழுவினர், கடலுார் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு, நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெருமழை காரணமாக, 2,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. 2,000 மின் ஊழியர்கள் அனுப்பப்பட்டு, மின் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 683 கிராம ஊராட்சிகளில், 430ல், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டு உள்ளது. சீர் செய்யப்படாத ஊராட்சிகளில், லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையில், தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே அறிவித்த நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்தில் இருந்து, 100 வல்லம், கெடிலம் ஆற்று வெள்ளத்தால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன. கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் இரண்டு நாட்களாக, வான்வழி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இரண்டு இடங்களில், 40 வல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்தில், 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன், தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதைய வெள்ளத்தில், இம்மாவட்டத்தில், 27 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை இழப்பு மற்றும் குடிசை சேதத்திற்கும், நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஜெயபால், உதயகுமார் ஆகியோரை அனுப்பி உள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வீராணம் ஏரி நீர் வெளியேற்றம் ஏன்?
கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, 1.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ராட்சத குழாய்கள் அமைத்து, இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் மூலம் வினாடிக்கு, 80 கனஅடி தண்ணீர் வெளியேற்ற முடியும். தற்போது வீராணம் ஏரியில், 0.75 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஆனால், ஏரியில் இருந்து வினாடிக்கு, 1,826 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு, வினாடிக்கு, 1,810 கனஅடி நீர்வரத்து உள்ளது.
ஏரி நிரம்பாத நிலையில், கூடுதல் நீரை வெளியேற்றுவது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது: கடலுார் மாவட்ட மழையால், வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. மேட்டூர் அணையின் டெல்டா பாசன திட்டம் மூலம் கொள்ளிடம் ஆற்றின் வழியாகவும், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று மணி நேரம் தண்ணீர் திறப்பை நிறுத்தினால் ஏரி நிரம்பிவிடும்.
அதன்பின், நீர்வரத்து அதிகரித்தால், ஒரே நேரத்தில் வினாடிக்கு, 7,000 கன அடி உபரி நீரை திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால், பொதுமக்களுக்கும், பயிர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே தான், சீரான அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நிலைமை சீரானவுடன், ஏரியில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மண் மேடான கிராமம்
காட்டாற்று வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட செம்மண், குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில், 5 அடி உயரத்திற்கு படிந்துள்ளதால், விசூர் கிராம மக்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர். முந்திரி காடுகளில் பெய்த பெருமழையால், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து, காட்டுக்கூடலுார் அடுத்த விசூர் கிராமத்தின் வழியாக ஓடி, உளுந்துார்பேட்டை தாலுகா சிவாபட்டினம் கிராமத்தின் கெடிலம் ஆற்றில் கலந்தது. முந்திரி காடுகளில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம், விசூர் கிராமத்தின் வழியே ஓடியதில், 5 முதல், 10 அடி உயரத்திற்கு மண் மேடுகளை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தின் பல இடங்களில், 3 அடி முதல், 10 அடி ஆழத்திற்கு பள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளப் பெருக்கின் வேகத்தில், அஸ்திவாரம் பெயர்ந்து, கான்கிரிட் வீடுகள், அந்தரத்தில் தொங்குகின்றன. பல வீடுகளின் சுவர் இடிந்து, 5 அடி உயரத்திற்கு வீட்டுக்குள் மண் குவிந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிராக்டர் இன்ஜின் முழுவதும் செம்மண்ணால் மூடப்பட்டுள்ளது. 700 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மரவள்ளி முழுவதும் நாசமாகின.
கோட்டை விட்ட வாரியம்
கடலோர மாவட்டங்களில், ‘கேபிள்’ மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், தற்போது, கடலுார் மாவட்டத்தில் மின் வினியோகம் பாதித்திருக்காது.

தமிழ்நாடு மின் வாரியம், சென்னையில் தரைக்கு அடியில் கேபிள் அமைத்தும்; மற்ற இடங்களில் மின் கம்பம் மூலமும் மின் வினியோகம் செய்கிறது. கடலோர மாவட்டங்களில் மழை, புயலின் போது, மின் கம்பம் சேதம் அடைவதுடன், மின் கம்பி அறுந்து விழுவதாலும் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக, 2011ல், ‘தானே’ புயலால், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மின் வினியோகம் முற்றிலும் முடங்கியது; மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மழையின் போது மின்தடை ஏற்படாமல் இருக்க, கடலோர மாவட்டங்களில், தரைக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்க, 2013ல், மின் வாரியம் முடிவு செய்தது. முதல் கட்டமாக, கடலுாரில், 260 கோடி ரூபாய்; நாகையில், 80 கோடி ரூபாய் செலவில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. இதை செயல்படுத்தி இருந்தால், தற்போது கடலுாரில் மின் வினியோகம் பாதித்திருக்காது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval