Monday, October 5, 2015

ஆண்டவனே ஆள்பவனே !!!

Dua Al-Faraj and As-Sahar
விண்ணையும் மண்ணையும் படைத்திட்டு
விதியையும் மதியையும் கொடுத்திட்டு
தன்னிலை உணர்ந்திட சோதனைகள்
தரமான வாழ்வுக்குப் போதனைகள்
தந்திட்ட ஆண்டவன் சிறப்பன்றோ
தரமாக்கி வாழ்தல் நலமன்றோ



அகிலம் முழுதாளும் ஆண்டவனே
அகம் முழுதும் நிறைந்திருக்கும் தூயவனே
மகத்துவம் மிக்க உன் கருணை
மானிடர்க்குக் கிடைத்திடனும் எந்நாளும்

ஆண்டவனே நாங்களென்றும் உன்னடிமை
அயராது போற்றிடுவோம் உன்புகழை
தீமைகள் யாதுமே தீண்டாது
தீர்க்கமாய்த் தடுத்திடு நாயனே

நன்மக்கள் கூட்டத்தில் நாளைமறுமையில்
நலமாய் எங்களைச் சேர்த்திடுவாய்
நாயன் உன் புகழை நாள்முழுதும்
நாவினால் உரைக்கச் செய்திடுவாய்

எத்தனை துன்பம் வந்தபோதும்
அத்தனையும் இன்பம் உனை நினைத்தால்
பித்தனைக் கூட தெளியவைக்கும்
நித்தமும் உன்னை வணங்கி வந்தால்

ஓரிறைக் கொள்கை நிலையன்றோ
ஒவ்வாதோர் வாழ்வில் குறையன்றோ
மாறாக மனிதனை வணங்குதலோ
மடமைக்கு வழிவகுக்கும் செயலன்றோ

இறையோன் உந்தன் கருணையிலே
இயங்குதே இவ்வுலகு இயல்பாக
இயலாத காலம்வரை இறையோனை
இறையச்சம் கொண்டு வணங்கிடுவோம்

மறையோனைக் காண மனதார
மஸ்ஜிதில் வணங்குவோம் பயத்தோடு
மடிநிறைய மறுமைக்கு நன்மை சேர்த்து
மகிழ்வோடு செல்வோம் மஹ்சர் நோக்கி

ஆண்டவன் கட்டளையில் அசைகிறதே
ஆதிக்கம் செய்யும் அனைத்துயிரும்
மாண்டபிறகு இறையோனின் மகத்துவத்தை
மறுமை நாளில் நாம்காண்போமே.!

                                                              அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval