Sunday, September 20, 2015

குழந்தைகளுக்கு முன்னால் யோசிச்சு பேசுங்க..!

c
உங்கள் இல்லத்தில் குழந்தைகள் இருக்கிறதா? ஆம் எனில், மிகவும் கவனமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குட்டீஸ் புரிந்துகொள்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் முன்னரே தெரிவித்திருந்தார்கள். பெரும்பாலானோர் சிறு குழந்தைகளுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லும்போது ஒற்றை வார்த்தையாக அல்லது சுலபமான ஓரிரு வார்த்தைகளைப் பயன்படுத்துவர். ஆனால், குழந்தைகளின் புரிந்துகொள்ளும் திறன் அவர்களது பெற்றோர் எண்ணுவதைவிட அதிகமாம். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுதா அருணாச்சலம் தலைமையில் நடத்திய சமீபத்திய ஆய்வில், ’இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை, இருமுறை ஒரு வினைச்சொல்லை சொன்னாலே அதைப் புரிந்துகொள்கிறது’ என தற்போது உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ’ஆறு மாதமே ஆன குழந்தைகள்கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன’ என்று கூறினார்கள். அதுவும் குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளை பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது. குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா? என்று யோசிக்காமல் அவர்கள்முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பதே ஆய்வாளர்கள் கூறும் தகவல்.
’குழந்தைகளுக்கு ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர்’ என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனரே தவிர, அர்த்தங்களை அல்ல- என்றும் எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஓர் ஆய்வுக்குத் தலைமைவகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள்பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத்திரும்ப கேட்கும்போது அதை நோக்கி குழந்தையின் பார்வை திரும்புகிறது’என்றார்கள்.
அப்போது நடந்த ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ’அவர்களுக்கு முன்னால் கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதைநோக்கி குழந்தைகள் பார்வையைத் திருப்பின. ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள் மற்ற படங்களைவிட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின்மீதே தங்கள் பார்வையை நிலைக்கச் செய்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது’ என்றார்கள் ஆய்வாளர்கள்.
“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப்போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளை, குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறுவகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஆய்வாளர் ஸ்விங்லி.
ஒரு சம்பவத்தை, ஒரு தொடராக இருமுறை சொன்னாலே, குழந்தைகள் அவற்றை அர்த்தம்படப் புரிந்துகொள்கின்றனர் என சமீபத்திய ஆய்வின்வழியாகத் தெரியவந்துள்ளது.
காட்சியாகவோ, நூதனமான வார்த்தைகளைப் பேசும்போதோ சரியாகப் புரிந்துகொண்டுவிடும் ஆற்றலுடன் அவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற குழந்தைகளால் விரைவில் கோர்வையாகப் பேசவும் முடியும் என்று லேட்டஸ்ட் ஆய்வு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval