Monday, March 14, 2016

இந்தியா வர வாய்ப்பு இல்லை என்கிறார் விஜய் மல்லையா!


லண்டன்: இந்தியாவில் எனக்கு எதிரான சூழல் நிலவுவதால், தற்போதைக்கு வர வாய்ப்பு இல்லை என்று வங்கிக் கடன் மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா கூறி உள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தத்  தொழில் நிறுவனங்களுக்காக அவர் இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்.


குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரு வங்கிகளிடம் அதிக தொகையை அவர் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடனை விஜய் மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதைத் தொடர்ந்து ''வேண்டும் என்றே கடனை திருப்பித் தராதவர்' என்று இந்த வங்கிகளால் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு கடன் கொடுத்த 13 வங்கிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், விஜய் மல்லையா வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு விஜய் மல்லையா கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது ட்வீட்டில், ''நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறுவது முட்டாள்தனமானது.

நான் ஒரு சர்வதேச பிசினேஸ்மேன். வர்த்தகம் தொடர்பாக  அடிக்கடி இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவன். நான் நாட்டை விட்டு தப்பியும் ஓடவில்லை. தலைமறைவும் ஆகவில்லை. நான் ஒரு இந்திய எம்.பி. எனது தாய்நாட்டின் சட்டத்திட்டங்களை மதிப்பவன். அதற்கு இணங்குபவன்" என்று கூறி இருந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ள நிலையில், விஜய் மல்லையா வரும் 18-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிலுள்ள விஜய் மால்யா, ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் ஒரு கிரிமினலாக சித்தரிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், ''பெரியதொழில் ஆனாலும், சிறியதொழில் ஆனாலும் வியாபாரங்களில் சவால்களும், சரிவும் இருப்பது சகஜமானது. வங்கிகளும் இதை எல்லாம் தெரிந்தே கடன் தொகைகளை வழங்கியுள்ளது.

சிறந்த நோக்கங்களை கொண்ட என்னை வில்லனாக சித்தரிக்க வேண்டாம்" என்று கூறியுள்ள மல்லையா, இங்கிலாந்து செல்லும்போது தாம் 7 பிரம்மாண்ட பைகளை கொண்டு சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், பயணத்தின்போது இப்படி அதிக பொருட்களை எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval