Friday, March 25, 2016

ஜம்மு காஷ்மீர் முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா- ஆளுநருடன் இன்று சந்திப்பு!

PDP to meet governor today on govt formationஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்க உள்ள மெகபூபா முப்தி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக பதவி வகித்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது சையது ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அவரது மகள் மெகபூபா முப்தி அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு அதிகாரங்களை வழங்கும் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுவதாக உறுதியளிக்க வேண்டும் என்று மெகபூபா நிபந்தனை விதித்தார். இந்த சூழலால் உடனடியாக அம்மாநிலத்தில் புதிய அரசு அமையவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக இடையே தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியையும் மெகபூபா சந்தித்து பேசினார். இதன் பின்னர் மெகபூபாவை மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டசபை தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் இன்று ஆளுநர் என்.என். வோராவை நேரில் சந்தித்து மெகபூபா ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மெகபூபா முதல்வராக பதவியேற்கும் நிலையில் பாஜகவின் சட்டசபை தலைவரான நிர்மல்சிங் மீண்டும் துணை முதல்வராக உள்ளார்.
courtesy.one india

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval