Saturday, March 26, 2016

முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை!

 தமிழர் உணவில் தொன்றுதொட்டு இடம்பெறும் முக்கியமான கீரைகளுள் முருங்கைக் கீரையும் ஒன்று. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. முக்கியமாக, முருங்கைக் கீரையும் முருங்கைக்காயும் தனித்துவம் வாய்ந்தவை.

 1.முருங்கைக் கீரையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. குறைந்த கலோரி மட்டுமே கொண்டது. எனினும், இதனை அளவாகவே உட்கொள்ள வேண்டும். பல்வேறு அமினோ அமிலங்கள் நிறைந்து இருப்பதால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைச் சீர்செய்யும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலும்புகள் பலப்படும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.

 2.முருங்கைக் கீரையைக் கடைந்தோ, பொரியலாகவோ, வதக்கியோ சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சீரான இடைவெளியில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் தீரும். முருங்கைக் கீரையை நெய்யில் வறுத்து, வளரும் குழந்தைகளுக்கு உணவுக்கு முன் கொடுத்துவந்தால், ரத்த சோகையைத் தடுக்கலாம்.

 3.வைட்டமின் - ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். முருங்கைக் கீரையை அரைத்து, சாறு பிழிந்து கண்ணில்விட்டால், கண் வலி நீங்கும். தேனுடன் சேர்த்துக் கண் இமைகளில் தடவிவந்தால், கண் நோய்கள் குணமாகும். 

 4.முருங்கை இலையுடன் மிளகை சம அளவு எடுத்து, நசுக்கிச் சாறு பிழிந்து, தலையில் வலி உள்ள இடத்தில் பற்று போட, தலைவலி குணமாகும்.

 5.கீரையை அரைத்து வீக்கமுள்ள பகுதிகளில் பற்று போடலாம். பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு இவற்றுடன் முருங்கை இலை சேர்த்து, அம்மியில் நசுக்கிச் சாப்பிட்டால், நாய்க்கடி நஞ்சு நீங்கும். இதையே நாய் கடித்த புண்ணில் பற்று இட்டால், விரைவில் குணமாகும். 

 6.பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை தடுக்கப்படும். முடி வளர்ச்சிக்கும் உதவும்.

 7.மூட்டு வலி  இருப்பவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

 8.ஆஸ்துமா, மார்புச்சளியால் அவதிப்படுபவர்களுக்கு, முருங்கைக் கீரை சூப் செய்துகொடுக்கலாம். ரத்த விருத்தி அதிகரிக்கும்.

 9.முருங்கைக் கீரை செரிமானமாவது கடினம். எனவே, இரவு வேளைகளில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம்.  
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval