Thursday, October 25, 2018

நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான்.

No automatic alt text available.
ஒரு  ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு பசு மாடுகள் மட்டும் இருந்தன.
அதனால் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையைச் சொன்னான்.
அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.
அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது.
இரண்டு மாடுகள் நாலாகி, நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.
சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.
திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை. ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.
தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.
இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.
அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.
அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையைக் கணவனிடம் தெரிவித்தாள்.
அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாகச் சொல்லி அனுப்பினான்.
ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!
இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழையபடி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உன்னிடம் இருக்கும் " என்று சபித்துவிட்டு வேகமாகச் சென்று விட்டார்.
அவர் பேசியதெல்லாம் அவன் காதில்விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான். ஆனால் அவர் எங்கு போனார் எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்தபடியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழையபடி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.
அந்நேரத்தில், அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".
அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய? இதைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எனக்குத் தெரியாதே " என்றான்.
மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். "சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்.
நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.
மனது கனக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.
விவசாயிக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.
"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் ".போய்ப் பார்த்தான்.
அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள். கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.
மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.
அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? ".
அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.
அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப்பெரிய பணக்காரன் ஆனான்.
நீதி :
சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.
வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வைத் தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாகப் பார்க்காதீர்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப்போவது இல்லை.
குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடீஸ்வரர்கள்தான்..!.
பெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்....
அன்புடன்
ஜி.முருகேஷ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval