Tuesday, January 26, 2021

*நான் என்ற திமிர் வேண்டாம்* படித்ததில் பிடித்தது

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா  

வாழ்ந்து கெட்டவர்கள்,வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விடயம் எதுவுமில்லை.

 


கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை அடக்கமாகஇரு"*

என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.

1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன் 
என் வீட்டிற்கு 
ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

2 )ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். 
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..! 
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
 படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! 
எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

3) என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. 
ஒரு நடிகை. 
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா அரசி.  
 என்னைப் பார்க்க வந்தவர், 
'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்.

4)சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.
ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.
'ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில் நிலையத்தில் அவர் ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன் அந்தப் பழைய நிகழ்வுகளை:-

1)கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

2)என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4)எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களை விடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், 'நான்’ இல்லாமல் வாழப்பயின்றேன்.!

எதுவும் மரணம் வரைதான். இதுதான் மனிதவாழ்க்கை.

இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தை விடக் கொடூரமானது. சமயங்களில் மரணம்தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.. 

ஆம் வாழ்ந்தவனின் நினைவுகள்போதும் அவனை வறுமையில் கொல்ல ..

 இருக்கும் வரை
பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்

 *முடிந்தவரை உதவி செய்யுங்கள்* 

 *முதியவர்களிடம் கனிவு காட்டுங்கள்* 

இன்று நாம் செய்வது நாளை நமக்கு கிடைக்கும்
மனதில் கொள்ளுங்கள்


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval