Friday, February 28, 2014

தும்மல் வராமல் தடுக்க..


பனிக்காலம் ஆரம்பித்து விட்டது! ஆளாளுக்கு "ஹாச்ச்ச்ச்..." போட ஆரம்பித்துவிடுவர். அப்புறம் என்ன, சர்ர்ர்ர்...என்று மூக்கை சிந்தியபடி இருப்பதும், கோவைப்பழம் போல மூக்கு சிவந்துவிடுவதும், சிலரை பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கும்.

எல்லாவற்றுக்கும் காரணம், பனி தான் என்றாலும், அதில் தலைதூக்கும் ஜல தோஷ வைரஸ் கிருமி தான் மூல காரணம். எப்படி வருது: பனியின் பாதிப்பால், மூக்கின் மேல் பகுதியில் உள்ள தசைச்சுவர்களை கிருமி தாக்குகிறது. அப்படி தாக்கும் போது, மூக்கில் எரிச்சல் வருகிறது; மூக்கடைப்பு ஏற்படுகிறது; மூக்கை சிந்த வேண்டும் போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. அடுத்தடுத்து ஹாச்ச்ச்...போடும் போது,
கண்களில் இருந்தும் தண்ணீர் வந்துவிடுகிறது. தலை வலிப்பது போல உணர்வு ஏற்படும்.

மூளையின் கட்டளை: இதெல்லாம் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மூக்கில் கிருமி பாதித்த அடுத்த நொடி, மூளையில் உள்ள கட்டளை மையத்துக்கு தகவல் போகிறது. முகுளத்தில் உள்ள கட்டளை மையத்தில் இருந்து கட்டளை கிடைத்தவுடன், மூக்கில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொண்டை கட்டினால்: இப்படி பனியில், ஜலதோஷ கிருமி தொற்றியவுடன், மூக்கில் நுழைந்துள்ள அந்த கிருமி, நுரையீரல், மார்பில் ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகளை சுருங்கச்செய்கிறது. இதற்கான கட்டளை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது.

அப்படி கட்டளை வந்தவுடன், கிருமியின் பாதிப்பால் ஏற்படும் தும்மல் மூலம் மற்ற பகுதிகளை கிருமி பாதிக்காமல் இருக்கவே இந்த கட்டளை வருகிறது. இதனால், வாய் வழியாக தும்மல் வெளியேறுகிறது.

நல்லது தான்: எல்லா வழிகளும் அடைக்கப்படுவதால், தும்மல் போட்டபடி இருப்பார் பாதிக்கப்பட்டவர். அதன் மூலம் கிருமி, வாய் வழியாக வெளியேறும். தும்மல் போடும் போது வாய் வழியாகவும், உதடு வழியாகவும் சளி வெளியேறும். மூக்கில் இருந்து வெளிவரும்.

இப்படி தும்மல் போடுவதால், கிருமி பாதிப்பு குறைவதுடன், அதிக பாதிப்பும் தடுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு அடுத்த சில நாளில் ஜலதோஷம் போய்விடும்.

மணிக்கு 140 கி.மீ.,: ஏதோ கார், பைக் வேகம் என்று நினைக்க வேண்டாம் இதை. நாம் போடும் "ஹாச்ச்ச்" வேகம் தான் இது. ஒரு முறை ஹாச்ச்ச்...போட்டால், மூன்று நொடிகளில் 5,000 பாக்டீரியா கிருமிகள், நீர்த்துளியா‘க காற்றில் கரைந்து விடும். இதனால் தான், கர்சீப் வைத்துக்கொண்டு, ஹாச்ச்ச்...போட வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கின்றனர். அப்படி வைத்து வாயை மூடிக்கொண்டால், மற்றவர்களுக்கு
கிருமி பரவாது.

தும்மல் தான் ஆரம்பம்: சிலருக்கு எப்போதும் ஹாச்ச்ச்... இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பனிக்காலத்தில், பனிபாதிப்பு மூலம் ஜலதோஷம் ஏற்படும் போது, அதன் முதல் படியே ஹாச்ச்ச்...தான். அடுத்து ஜலதோஷம் வருகிறது என்பது பொருள். இருமல் வருவதும் ஒரு வகை பாதுகாப்பு கவசம் தான். நுரையீரலில் சளி சேராமல் இருக்கவும், சுவாசக்குழாய் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும் தான் அடிக்கடி
இருமல் வருகிறது. அப்போது கிருமி பரவாது; சளி, பெரிய அளவில் பாதிக்காது.

சுவாசம் பாதிக்காமல்: சுவாசத்துக்கு முக்கிய உறுப்பு நுரையீரல். அதில் கிருமி பாதித்தால், சுவாசம் பாதிக்கப்படும். ஆனால், சளி, ஜலதோஷம் பாதிக்காமல் இருக்க, நுரையீரலில் பாதுகாப்பு முறைகள் உள்ளன. மூளையில் உள்ள முகுளத்தில் இருந்து கட்டளை வந்தவுடன், நுரையீரலில் சளி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதனால் தான் அடிக்கடி இருமல் வந்து, சளியை வெளியேற்றி
விடுகிறது. இப்படி இதயத்திலும் சளியால் பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இருமல் வரும் போதும், சளி அகற்றப்பட்டு, இரு உறுப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன.

சளி பிடித்தால் ஏழு நாள்... விடாது என்பர். அது உண்மை தான். அமெரிக்க வர்ஜீனியா மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒரு வார கால அட்டவணை போட்டுள்ளனர்.

முதல் நாள்: தொண்டை சொறசொறப்பாகும். மூக்கடைப்பு லேசாக ஆரம்பிக்கும். சிலருக்கு லேசான காய்ச்சலும் ஆரம்பிக்கும்.

இரண்டாம் நாள்: ஹாச்ச்...குறைய ஆரம்பிக்கும். மூக்கில் சளி அடைத்திருப்பது போல உணருவீர்கள். அடிக்கடி கர்ர்ர்... புர்ர்ர்...என்று மூக்கை உறிஞ்சியபடி இருப்பீர்கள்.

மூன்றாம் நாள்: மூக்கடைப்பு லேசாக நீங்கி, அதற்கு பதிலாக மூக்கு ஒழுக ஆரம்பிக்கும். கர்சீப்பால் மூக்கை தேய்த்து ஒரு வழி பண்ணிவிடுவர் சிலர். மூக்கோ, கோவைப்பழமாகி விடும்.

நான்காம் நாள்: நடக்கும் போது இந்த மூன்று நாள் இருந்த மூச்சுத்திணறல் குறையும். மூக்கில் சுவாசப்பாதை பழையபடி சீராகி விடும்.

ஐந்தாம் நாள்: தொண்டை கரகரப்பு போய்விடும்.

ஆறாம் நாள்: இருமல் குறைந்து விடும்.

ஏழாம் நாள்: அறவே போய்விடும் ஹாச்...! ஆனால், மீண்டும் மீண்டும் பனியால் இந்த ஏழு நாள் பாதிப்பு நீடிக்கலாம். அதனால் டாக்டரிடம் போவதே சரி.

Thank you :http://www.koodal.com

      தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
        அதிரை 

    No comments:

    Post a Comment

    கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

    கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

    Your comment will be published after approval