Friday, September 6, 2013

உண்மையை உணர மறுக்கும் உலகம்


உண்மையை உணர மறுக்கும் உலகம் 
மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)

 இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன. ( அல்குர் ஆன் 98 : 2,3) 

சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.

 பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும், இருக்க இருக்க இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள்தான் 99சதவீதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் இந்த உண்மையை ஆட்சியாளர்களும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும் உணர மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை.

 பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குரிய காரணங்களை தற்போதுதான் மிகமிக தாமதமாக காலம் கடந்துவிட்ட பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு தரப்பினராக உணரத்துவங்கியுள்ளனர். 

இந்திய நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் பர்தா அணிய மதுரை ஆதினம் வேண்டுகோள் :

 கடந்த 29.12.12 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மதுரை ஆதினமாக உள்ள அருணகிரி நாதர் ஒரு பேட்டியளித்தார். அவர் அந்த பேட்டியில், “இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப வேண்டுமென்றால் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும். அப்பொழுதுதான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்

 பெண்களது அரைகுறையான கவர்ச்சி ஆடைகள்தான் ஆண்களை தவறு செய்யத்தூண்டுகின்றது என்ற உண்மையை மதுரை ஆதினம் கூறி அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வுதான் சரியானது என்று கூறியதுதான் தாமதம். உடனடியாக ஆதினம் கூறிய இந்தக் கருத்தைக் கண்டித்து மதுரையில் கடந்த 30.12.12 அன்று மதுரை ஆதின மடத்தை பெண்கள் அமைப்புகள் முற்றுகையிட்டு அந்த அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கைதாகியுள்ளனர்.

 நான் சொன்னது சரிதான் : மதுரை ஆதினம்

 தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும், "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 மூலக்காரணியை களைவதுதான் மூளையுள்ள மனிதனின் செயல்: 

ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு மூலக்காரணி என்ன என்று ஆராய்ந்து அந்த மூலக்காரணியை களைவதுதான் அந்தப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இதுதான் அறிவுடையோர் செய்யக்கூடிய செயல். அதைவிட்டுவிட்டு அந்த பிரச்சனைக்குரிய காரணங்களை களையாமல், பிரச்சனையை வளர்க்கக் கூடிய வேலைகளைச் செய்துவிட்டு அந்த பிரச்சனையும் தீர வேண்டும் என்று எந்த ஒரு அறிவாளியும் சொல்லமாட்டான். இதுபோலத்தான் இவர்களது நிலை தற்போது உள்ளது.

 பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர்கள் அந்த கொடுமைகள் நிகழத் தூண்டுகோலாக இருக்கக்கூடிய பெண்களின் கவர்ச்சியான ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காமல், நாங்கள் எங்கள் விருப்பப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு மானங்கெட்டு, வெட்கங்கெட்டு திரிவோம். அதை நீ ஏன் பார்க்கிறாய்? என்று கேட்பார்களேயானால், ஓடும் ரயிலிலும், பேருந்திலும் நடக்கும் கற்பழிப்புக் கொடுமைகளும், பாலியல் வன்முறைகளும் தொடரத்தான் செய்யும். 

ஆடை கட்டுப்பாடு என்பது பெண்களுக்கு எதிரானதா?:

 பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியம் என்று இஸ்லாம் கூறுவதை பெண்களுக்கு எதிரான சுதந்திரத்தில் தலையிடுவதாக பெண் அமைப்புகள் நினைப்பதுதான் இதுபோன்ற போராட்டங்களுக்குக் காரணம். ஆனால் இவ்வாறு தங்களது உடலை மறைத்து ஆடைகளை அணிந்து பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்று நாம் பெண்களிடத்தில் சொல்வது அவர்களது சுதந்திரத்தை பறித்ததாக ஆகாது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றார்கள். 

ஓடும் ரயிலில் பெட்ரோல் கொண்டு சென்றால் என்னவாகும்?

ஓடும் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது; அவ்வாறு மீறி கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புச் செய்துள்ளது. இது எனது உரிமையையும், சுதந்திரத்தையும் பறிப்பதாக உள்ளது. நான் என் விருப்பத்திற்கு 10 லிட்டர் பெட்ரோலை கேனில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆனால் எனது சுதந்திரத்தை ரயில்வே நிர்வாகம் பறிக்கப்பார்க்கிறது என்று சொல்லி ரயில்வே துறையை எவனாவது முற்றுகையிட்டால் அவனை நாம் என்ன சொல்வோம்? இப்படி ஒரு வாதத்தை மூளையுள்ள எந்த ஓர் அறிவாளியாவது வைப்பானா?

 நாம் ரயிலில் பயணிக்கும் போது பெட்ரோலை கொண்டு சென்று தீப்பிடித்து எரியுமானால் அதில் நாம் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுவோம்; அதை தவிர்க்க வேண்டும்; நம் உயிரும் உடமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சொல்லப்படும் வழிகாட்டுதல்தான் அது என்று அந்த அறிவிப்பை நாம் எப்படி எடுத்துக் கொள்கின்றோமோ அதுபோல இந்த விஷயத்தை பெண் அமைப்புகளும், பெண் சுதந்திரம் பேசக்கூடியவர்களும் எடுத்துக்கொண்டு சிந்திக்க மறுப்பதுதான் பிரச்சனைக்கு காரணம்.

 ஓடும் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது; அவ்வாறு மீறி கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சொல்வது எப்படி நமது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டாக எழாதோ, அதுபோல பெண்கள் தங்களது கற்பை காத்துக் கொள்வதற்காக தங்கள் உடலை மறைக்கச் சொல்லி சொல்வதும் அவர்களது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாது என்ற உண்மையை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

 ஆபாச உடையணிந்து யாரேனும் சாலையில் சென்றால் ரோட்டில் செல்லக்கூடியவர்களது கண்கள் எல்லாம் எங்கு மேய்கின்றன என்பது மாதர் சங்கங்களுக்குத் தெரியாமல் இல்லை. அதனால்தான் ஆபாச சினிமா பட போஸ்டர்களில் தொப்புள் தெரிவது போல உள்ள பெண்களின் போட்டோக்களை இந்த மாதர் சங்கப் பெண்மணிகள் தார் பூசி அழிக்கும் வேலையை ஆங்காங்கே செய்து வருகின்றார்கள்.

 இந்த மாதர் சங்க பெண்களிடம் சில கேள்விகளை முன் வைக்கின்றோம்: ?

?கண்ட மாதிரி பெண்கள் ஆடை அணிந்து செல்வது தவறல்ல; அது அவர்களது சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நீங்கள் ஆபாச சினிமா பட போஸ்டர்களை தார் பூசி அழிப்பது ஏன்?

 ?பெண்கள் தங்களது உடலை தங்கள் இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு திரிவதுதான் பெண் சுதந்திரம் என்றால், நீங்கள் சொல்லக்கூடிய அந்த ஒரிஜினல்(?) சுதந்திரத்தை அந்த ஆபாசப் படங்களில் நடித்த பெண்மணிகளுக்கு நீங்கள் வழங்கமாட்டீர்களா? 

?பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சொன்னதற்காக மதுரை ஆதின மடத்தை முற்றுகையிடுகின்றீர்களே! அப்படியானால் இஷ்டத்திற்கு பெண்கள் தங்கள் உடலை திறந்து போட்டு அலைய வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா? 

?அப்படி இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு பெண்கள் அலையலாம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களது மகளையோ, அல்லது உங்களது வீட்டுப் பெண்களையோ அப்படி அரைகுறை ஆடையோடு ஊரில் அலையவிட்டு ஊரில் உள்ள ஆண்களெல்லாம் அவர்களை ரசிப்பதற்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா? 

மேற்கண்ட கேள்விகளுக்கு மாதர் சங்கங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். பெண்களது அரைகுறை ஆடைகள்தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனுடைய வெளிப்பாடுதான் மதுரை ஆதினத்தின் பேச்சு.

 உண்மையை எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் அது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். பெண்கள் தங்களையும், தங்களது கற்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தங்களது உடல் அழகை பிற அந்நிய ஆண்களிடமிருந்து மூடி மறைக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அந்த உண்மை தற்போது மதுரை ஆதினம் போன்றவர்களின்வாயிலிருந்து வெளிப்படுகின்றது என்பதுதான் மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. மாதர் சங்க நிர்வாகிகளே இதில் பாதிக்கப்படுவார்களேயானால் அவர்களும் மதுரை ஆதினம் போன்று இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வையே தாங்களும் தங்களது கருத்தாக அப்போது வலியுறுத்துவார்கள். கூடிய விரைவில் அவர்களும் இஸ்லாம் கூறும் இந்தக் கருத்தை வலியுறுத்தக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை.

 From: www.onlinepj.com , 
தகவல் : N .K .M .புரோஜ்கான்   அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval