Friday, October 4, 2013

குர்ஆன்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது
“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது. 

மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.

திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.
கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.
இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.
தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது

ஒவ்வொருவரும் திருக் குர்ஆனைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் ஓதி முடிப்பதற்கேற்றவாறு, திருக் குர்ஆனிலுள்ள வசனங்கள்யாவையும் ஏறத்தாழ சமமான முப்பது “ஜுஸ்வு” (பாகங்)களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.
திருக் குர்ஆன் அருளப் பெற்று 23 ஆண்டுகளில், பெருமானார் அவர்கள், முதல் பதிமூன்று ஆண்டுகள் மக்காவிலும், பிந்திய பத்தாண்டுகளில் மதீனாவிலும் வாழ்ந்திருந்தார்கள். தவிர, திருக் குர்ஆனின் பிற்பகுதியில் உள்ள 35 அத்தியாயங்களைத் தவிர, மற்ற அத்தியாயங்களை- தொழுகையின் சாதாரண ஒரு ரகாஅத்தில் ஓதக்கூடிய ஒரு மத்தியதர அளவில் - பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு “ருகூவு” (அதாவது, “மாயுக்ரவு பிர்ரகஅதி” ஒரு “ரகாஅத்”தில் ஓதக் கூடியது) என்று பெயர். இந்தப் பிரிவைக் குறிக்க ஆங்காங்கே “அய்ன்” அடையாளமிடப்பட்டிருக்கிறது. அந்த “அய்ன்” உடன் குறிக்கப்பட்டிருக்கும் எண், அந்த அத்தியாயத்தில் அது எத்தனையாவது ருகூவு என்பதை குறிக்கும்.ஒவ்வொரு பாகத்திற்கும், “ஸயகூல்”, “தில்கர்ருஸுலு” போன்ற அந்தந்தப் பாகத்தின் தலைப்பிலுள்ள சொற்களையே பெயராகக் கூறப்பெறுகின்றது.  எனினும், “அல்ஹம்து” (தோற்றுவாய்) என்னும் முதல் அத்தியாயம், திருக் குர்ஆனிலுள்ள 30 பாகங்களுக்குமே ஒரு முன்னுரையைப் போன்று அமைந்திருப்பதனால், முந்திய பாகத்திற்கு, “அல்ஹம்து ஜுஸ்வு” என்று பெயர் கூறாமல், இரண்டாம் அத்தியாயத்தின், முதல் வாக்கியமாகிய “அலிஃப் லாம் மீம்” என்பதையே பெயராகக் கூறப்பெறுகிறது.

அவர்கள் மக்காவில் வாழ்ந்திருந்த 13 ஆண்டு காலத்தில் மக்காவிலும், அதையடுத்து அவர்கள் சென்றிருந்த மற்றைய இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மக்கீ” (மக்காவில் அருளப் பெற்றவை) என்றும், அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 10-ஆண்டு காலத்தில் மதீனாவிலும், அதையடுத்து அவர்கள் சென்ற மற்ற இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மதனீ” (மதீனாவில் அருளப் பெற்றவை) என்றும் கூறப்பெறும்.

திருக் குர்ஆனில் உள்ள மொத்த அத்தியாயங்களில் 86 “மக்கீ” அத்தியாயங்களும், 28 “மதனீ” அத்தியாயங்களும் இருக்கின்றன. இவ்வாறு பொதுவே அத்தியாயங்களை “மக்கீ” “மதனீ” என்று பிரித்து குறிப்பிட்ட போதிலும், “மக்கீ” அத்தியாயங்கள் சிலவற்றில், “மதனீ” காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே “மதனீ” அத்தியாயங்கள் சிலவற்றில் மக்கா காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன. 
திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது (-சிரம் பணிந்து வணங்க வேண்டுமென்பது) நம் மார்க்க விதி. இவ்வாறு சிரம் பணிய வேண்டிய வசனங்கள் 14 இருக்கின்றன.

.Thanks to ;Tamilil quran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval