Monday, December 8, 2014

ஒரு முறையேனும்.. [ லண்டன் வானொலியில் வாசகரின் பாராட்டை பெற்ற கவிதை ! ]


ஒருமுறையேனும்
திருமுகம் பார்த்து
திருமணம் செய்தல்
உறவுக்கு நலமே

பலமுறை பார்த்தும்
ஒருமுறையேனும்
பாராது போனால்
நட்புக்குக் கேடே

சில முறையேனும்
உதவிகள் செய்தால்
சினம் கொண்ட பகையும்
சேர்ந்திடும் இனிதே

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஒருமுறை மட்டும்
உறவினை அமைத்து
வாழ்வது மகிழ்வே

தனக்கென வாழ்தல்
தரங்கெட்ட வாழ்வே
ஒருமுறையேனும்
பிறரையும் நினைத்தால்
பிறந்திடும் உயர்வே

மனிதனாய் பிறந்து
மரணிக்கும் முன்னே
ஒருமுறையேனும்
புனிதனாய் வாழ்தல்
படைத்தவன் கணக்கில்
போற்றிடும் சிறப்பே

கனிதரும் மரமும்
ஒருமுறையேனும்
காய்வது இயல்பே

பினிவருமுன்னே
புரிந்திட நடந்து
பேணிடல் முறையே

இனிவரும் காலம்
ஏற்றமாய் இருக்க
ஒருமுறையேனும்
உணர்வது நலமே

இனியொரு பிறவி
இகத்தினில் இல்லை
ஒருமுறையேனும்
உயர்வுடன் வாழு

ஒருமுறை பிறப்பும்
ஒருமுறை இறப்பும்
இயற்கையின் நியதி

அறிந்திட்டு உணர்ந்து
திருந்திட்ட வாழ்வு
பிறப்புக்குச் சிறப்பு
அதிரை மெய்சா
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 27-11-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 4 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval