Saturday, July 26, 2014

டாக்டர்களுக்கு கமிஷன் தரும் ஸ்கேன் சென்டர்கள்

1047599டில்லியில் உள்ள சில டாக்டர்கள், ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் இருந்து 30 முதல் 50 சதவீத கமிஷன் பெறும் விஷயம், தனியார் ‘டிவி’யின் ‘ஸ்டிங்’ நடவடிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில் நடந்த இது குறித்த விவாதத்தில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறி உள்ளார்.
சமீப ஆண்டுகளாக, மருத்துவத் தொழில் வியாபாரமாகி விட்டது என்றும், சில டாக்டர்கள், ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் சென்டர்கள் தரும் கமிஷன் தொகைகளுக்கு ஆசைப்பட்டு, இல்லாத வியாதிகளுக்கு எல்லாம் டெஸ்ட் எடுக்க சொல்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த புகார்களை மெய்ப்பிக்கும் வகையில், டில்லியில் உள்ள சில டாக்டர்கள், கமிஷன் வாங்கும் போது தனியார் ‘டிவி’யின் கேமராவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
டில்லியில், ஸ்கேன் சென்டர்களில் இருந்து கமிஷன் வாங்கும் சில டாக்டர்களின் நடவடிக்கையை ஒரு தனியார் டிவி, யாருக்கும் தெரியாமல் படம்பிடித்துள்ளது. இதில், டாக்டர்கள், ஸ்கேன் சென்டர்களிடம் இருந்து 30 முதல் 50 சதவீதம் வரை கமிஷன் வாங்குவது அம்பலமாகி உள்ளது. மிகவும் அதிர்ச்சியளித்த இப்பிரச்னை பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இது குறித்து பேசிய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ‘டாக்டர்களுக்கு கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் தரும் வேலையில் சில ஸ்கேன் சென்டர்கள் இறங்கி உள்ளன. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,’ என்றார்.
மேலும் இப்பிரச்னை குறித்து பேசிய அவர், ‘ஸ்கேன் சென்டர்களின் இதுபோன்ற செயல்களால், நோயாளிகள் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை பாதிக்கிறது,’ என்று தெரிவித்துள்ளார். சில ஸ்கேன் சென்டர்கள், தங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக எம்.ஆர்.ஐ., போன்ற ஸ்கேன்களுக்கு சிபாரிசு செய்யும் டாக்டர்களுக்கு 50 சதவீத கமிஷனை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது என்று ஹர்ஷவர்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி., சாந்தாராம் நாயக், ‘மருத்துவமனைகள் தேவையில்லாமல் நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை அரசு இனிமேலும் அனுமதிக்க கூடாது. மருத்துவமனைகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம்,’ என்று வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ‘மருத்துவமனைகளில் மருத்துவ செலவு அதிகரிக்கும் விஷயத்தில் அரசு மிக விரைவில் ஒரு முடிவெடுக்கும்,’ என, உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval