Wednesday, July 9, 2014

நாம் காணும் உலகம் [ ஒரு பார்வை ]

இவ்வுலகில் மனித இனம்தோன்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதன் நாகரீகத்தாலும் அடிப்படைதேவைகளாலும் மற்ற அனைத்திலும் பின்தங்கியே வாழ்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் இன்றைய இயந்திரம் செய்யும் வேலைகளுக்குச் சமமாக கடின உடல் உழைப்பிலேயே தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறார்கள்..

உதாரணமாக சொல்லப்போனால் கைக்குத்தல் அரிசியில் உணவு,கால்நடைப் பயணம்,விறகுத் தீமூட்டி சமையல்,மண்பாண்டத்திலான பாத்திரம்,மாசுபடியாக்காற்று, வீரவிளையாட்டு இப்படி அனைத்திலுமே இயற்கையைத் தழுவி வாழ்ந்து வந்தார்கள்.

அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து இருந்தாலும் உடல் வலிமை குறையாது நல்ல ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்து மனிதர்களோ வாழ்க்கைத்தரத்தில் வானுயர உயர்ந்திருந்தாலும் உடல் வலிமையால் குறைந்தும், பலவித புதுப்புது நோயாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியும் போய்விட்டனர் என்றே சொல்லலாம். .

உதாரணத்திற்குச் சொல்வதானால் பண்டைய காலத்து மனிதனின் உடல் உழைப்பால் வியக்கத்தக்க எகிப்து பிரமிடு முதல் இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் எண்ணிலடங்கா பல நினைவுச்சின்னங்களை எவ்வித இயந்திர உதயுமின்றி மனிதர்களே உருவாக்கி இருக்கிறார்கள்.ஆனால் இன்றைய நிலையோ பத்து செங்கல்லை தூக்குவற்க்குக் கூட மனிதனுக்கு இயந்திரத்தின் உதவி தேவைப்படுகிறது.

அடுத்து பார்ப்போமேயானால் மகப்பேறு மருத்துவர்,மகப்பேறு மருத்துவமனை என்று எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவமாக பத்துப் பதினாறு குழந்தைகளை ஈன்றெடுத்தும் இளமை குன்றாது நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் அக்காலத்தவர்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் இன்றைய நிலையோ இரண்டு குழந்தையை அதுவும் அதிகப்படியாக அறுவை சிகிச்சை மூலமாக பெற்றுக் கொண்டு ஆரோக்கியம் குறைவதுடன் இளமையிலேயே முதுமைத் தோற்றம் அடைந்து விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல ஒருகாலத்தில் சரியான நேரகாலத்தில் தட்பவெட்ப நிலையில் மாற்றமில்லாமல் கோடையும் குளிரும் பனியும், பருவமழையும் மாறிமாறி வந்து கொண்டிருந்ததது. அதை நம்பி மனிதன் விவசாயம்,வணிகம்,பயணம் என தனது வாழ்க்கைக்குத் தேவையானதை அந்தந்தப் பருவகாலங்களைப் பயன்படுத்தி பயன்பெற்றுக் கொண்டு வந்தனர்.

ஆனால் இன்றைய நிலையோ தட்பவெட்பநிலை மாறி சுற்றுச்சூழல் மாசுபட்டு பசுமைகள் அழிந்துபருவமழையும் பொய்த்துப் போய் ஒசானிலும் ஓட்டைவிழுந்து விட்டது.

இந்த மாற்றத்திற்க்குக் காரணம் மனிதன் இயற்கைப் பழக்கத்திலிருந்து செயற்கைக்கு மாறிக்கொண்டிருப்பதனால் அல்லவா.? நவீனக் கண்டுபிடிப்புக்களின் ஆக்கிரமிப்பும் அதையொட்டிய போலிகளின் நடமாட்டமும் தான் மனிதனின் ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்தையும் குறைத்து விட்டது என்று தான் சொல்லமுடியும்.

நாம் உண்ணும் உணவிலிருந்து உட்கொள்ளும் மருந்து வரை அனைத்திலும் நவீனங்களும் செயற்க்கைத்தன்மையும் ஆட்கொண்டு விட்டது.அதுவே நமக்கு இலகுவாக தெரிவதால் விரும்பி ஏற்றுக் கொண்டு தனது ஆயுட்காலத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறோம்.

இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ நமக்குத் தெரிந்த உதாரணங்கள் அடுக்கடுக்காக ஆயிரம் சொல்லலாம். அப்படியானால் இதற்க்கெல்லாம் அடிப்படைக் காரணம் தான் என்ன .? சற்று ஆராய்ந்து பார்த்தால் உலகம் நவீனத்தின்பால் நகர்ந்து போய்க் கொண்டு இருப்பதால் தான் என்பது நமக்கு நன்குபுரிகிறது.

ஒருவகையில் விஞ்ஞானம் வளர்ச்சியுற்று நவீனங்கள் தலைதூக்கி புதுப்புது கண்டுபிடிப்புக்கள் அறிமுகம் ஆகாமல் போய் இருந்தால் இன்னும் இவ்வுலகம் பின்தங்கியே தான் இருந்திருக்கும். புதுப்புது கண்டுபிடிப்புக்கள் மனிதனது வாழ்க்கை முறையை எவ்வளவோ மாற்றியிருக்கிறது என்பதில் எந்த விதமாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனாலும் இன்னொருபக்கம் சிந்தித்தோமேயானால் நவீனங்கள் மனிதனை சோம்பேறியாக்கி வலிமை இழந்தவனாகசொற்ப்ப ஆயுளில் மரணத்தை அணைக்கும்படி ஆக்கிவிட்டது என்பதும் உண்மைதானே.!.

ஆகவே ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும் என்று சொல்லிற்க்கேற்ப இன்றைய கால மனிதர்கள் அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து தன் வாழ்க்கைத் தரத்தை மென்மேலும் உயர்த்திக்கொண்டு போனாலும் விஞ்ஞானம் வளரவளர தனது உடல் வலிமையையும், ஆயுட்க்காலத்தையும் குறைத்துக்கொண்டு செல்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும்.
அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval