Friday, June 2, 2017

மகளுடன் எரிந்த பெற்றோர்: தற்கொலை என்கிறது போலீஸ்: கேட்க யாரும் இல்லாத நிலையில் விடை கிடைக்குமா?

நின்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்தது. இதனை பார்த்த சிலர் ஓடி வருகின்றனர். ஏய்... உள்ள ஆள் இருக்காங்க. ஆள் இருக்காங்களா... கண்ணாடிய உடைச்சுருலாமா... உடைச்சுடு என சொல்லிக்கொண்டே கண்ணாடியை உடைக்கின்றனர். அப்போது உள்ளே ஏற்கனவே தலை தொங்கியப்படியே ஒருவர் இருந்தது தெரிய வருகிறது.

 அதனைப் பார்த்ததும். அய்யய்யோ... செத்துட்டார்டா... என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணாடி உடைந்த இடத்தில் தீ மளமள வென வெளியே வந்தது. போலீசுக்கு போன் பன்றா, போலீசுக்கு போன் பன்றா... என்கிறார் ஒருவர். கார் பற்றி எரியும்போது கார் சிறிது அளவுகூட அசையவில்லை. கண்ணாடியை உடைக்கும்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஒரு குரல் கூட வரவில்லை. இந்த பரபரப்பான வீடியோ கடந்த 27ஆம் தேதி இரவு வெளியானது. வீடியோவை பார்த்தவர்களால் பதட்டத்தில் இருந்து மீள முடியவில்லை. 


கடந்த 27.05.2017 தேதி சனிகிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் மாமல்லபுரம் அடுத்த மூன்றாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமை கிராமத்தில் சென்னை - மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் இடதுபுறத்தில் தனியார் ரியல் எஸ்டேட் பிளாட்டில்தான் அந்த கார் எரிந்தது. சிறிது நேரத்தில் கார் வெடிக்க ஆரம்பித்ததால் யாரும் நெருங்கமுடியவில்லை. போலீஸ்சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தார்கள். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர் மாமல்லபுரம் போலீசார். வழக்கை விசாரணை செய்துவரும் திருப்போரூர் காவல்ஆய்வாளர் சுரேஷ் "முதலில் கார் ஏசியில் ஏற்பட்ட கசிவால் தீ பற்றியிருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்ததால் பல சந்தேகங்கள் எழுந்தது.

பின்னர் காரில் மூன்று பேர் எரிந்தநிலையில் இறந்து கிடந்தார்கள். பிணத்தை கைபற்றி விசாரணை தொடங்கினோம். வாகன சேஸ் நம்பரை வைத்து காரின் உரிமையாளர் சென்னை  குரோம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஆடிட்டர் ஜெயதேவன் அவரது மனைவி ரமாதேவி மற்றும் அவர்களின் ஒரே மகள் ஆன திவ்யாஸ்ரீ என்பதும், திவ்யாஸ்ரீக்கும் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சரத்சரண் என்ற ராணுவ கேப்டனுக்கும் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் முடிந்து இருவரும் பஞ்சாப் மாநிலம் பாதாண்கேர்ட்டு ராணுவகுடியிருப்பில் இல்லர வாழ்கையை தொடங்கியுள்ளார்கள். 



இந்தநிலையில் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதன் காரணமாக கருத்து வேறுபாடுகள் நிலவிவந்த வேலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்குமிடையே மோதல் அதிகரித்ததால் திவ்யாஸ்ரீயின் அப்பா ஜெயதேவன் கடந்த 22.05.2016ஆம் தேதி சென்னைக்கு அழைத்துவந்துள்ளார். இந்த நிலையில் சரத்சரண் கொடுத்த பதிவுதபால் புகாரின்  பெயரில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நசிமாபேகம் இருதரப்பினரையும் கடந்த 27 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துள்ளார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டு பேசியும் அன்று திவ்யாஸ்ரீ பெற்றோர்கள் கண்டுகொள்ளவேயில்லை, விசாரணைக்கு வராமல் ஒரே பெண்ணின் வாழ்க்கை இதுபோல ஆனதால் மனமுடைந்த ஜெயதேவன் குடும்பத்துடன் இப்படி சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது முதற்கட்டவிசாரணை தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

சாதாரண சண்டைக்காகவா குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் அப்படியே செய்துகொண்டாலும் வீட்டில் வைத்தே தற்கொலை செய்து கொண்டிருக்கலாமே. ஒரு வேலை கொலையாக இருக்குமோ என்ற பல சந்தேகங்கள்.

பல சந்தேகங்களுக்கு விடை காண நக்கீரன் களம் இறங்கியது..!

ஜெயதேவன் பூர்வீகம் கேரள மாநிலம் பாலகாடு. இவருடைய ஒரே மகள் திவ்யாஸ்ரீ. அளவான குடும்பமான இவர்கள் பத்து வருடத்திற்க்கு முன் குரோம்பேட்டையில் குடிபுகுந்துள்ளனர். மற்றபடி சுற்றுபுறத்தில் யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள் (ரிசர்வ் டைப்). கடந்த 2016 டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராணுவ வீரர் சரத்சரனுக்கும் திவ்யாஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ஆரம்பத்தில் இருந்தே கணவர் வீட்டாருடன்  பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு முதன்முதலில் போகும்போதே சரத்சரன் வீட்டு நாய் கடித்துள்ளது. அப்போதே அந்த நாய்யை வீட்டில் இருந்து துரத்துமாறு திவ்யாஸ்ரீ பல முறை கூறியும் அதையாரும் பொருட்படுத்தவில்லை. சரத்சரன் தம்பி சஜித் "எங்க வீட்டு நாய்க்கே உன்னை பிடிக்கவில்லை. அதனால் தான் கடித்துவிட்டது'' என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் எல்லோரும் திவ்யாஸ்ரீயை எதிரிபோல நடத்தி வந்ததும், அவர்கள் திவ்யாஸ்ரீயின் அம்மா, அப்பாவையும் தவறாகவும் கீழ்தரமாகவும் பேச மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த தகவல்களை தன் பெற்றோர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். 

திவ்யாஸ்ரீ போலீசில் புகார் கொடுத்தால் தன் வேலையை இழக்க நேரிடும் என்று பலமுறை சரத்சரன் முந்திகொண்டு புகார் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த நிலையில் ஜெயதேவன் இருந்தார். தன் ஒரே மகள் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்ற நிலையில், பஞ்சாப் பதாண்கோட்டிலும் இருவருக்கும் பிரச்சனைகள் தோன்றி தன் மகளுடன் இனிவாழவேமாட்டேன் என்று சரத்சரன் சொல்ல, திவ்யாஸ்ரீயே "நான் சென்னை சென்று உன்மீது வரதட்சணை கொடுமை வழக்கு கொடுத்து உன்னை ஜெயிலில் தள்ளி வேலையில்லாமல் செய்கிறேன் என்று சபதமிட்டார். அதற்கு சரத்சரன், "நீ எங்கு போனாலும் நான் பணத்தை கொடுத்து சமாளித்துவிடுவேன் என்று சொல்லி, அதே போல சரத்தும் விரைவு பதிவு தபால் மூலம் தாம்பரம் உதவி ஆணையருக்கு புகார் மனு கொடுக்க, அந்த மனு தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டது. மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நசிமாபேகம் கடந்த மே 27ஆம் தேதி இருதரப்பையும் அழைத்துள்ளார்.

இந்தநிலையில் அன்று சரத்சரன் குடும்பத்தார் மட்டும் ஆஜராகியுள்ளார்கள். திவ்யாஸ்ரீ தரப்பில் யாரும் வராத நிலையில் போன் செய்துள்ளார்கள். அதற்கு ஜெயதேவன் தான் வருவதாக சொல்லிவிட்டு, பின்னர் மனைவி, மகளுடன் வீட்டை விட்டு சரியாக மாலை 6.30 மணிக்கு தன் காரில் கிளம்பியவர், 6.36 மணிக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிறப்பிவிட்டு வெளியே பதட்டத்துடன் நடந்துகொண்டே எதையோ யோசனை செய்து கொண்டிருந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் உத்தன்டி வழியாக ஈ.சி.ஆரில் பயணித்து வந்து மணமை கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொண்டு காரின் உள்ளே லாக் செய்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். கார் எரிந்து கொண்டிருந்தபோது சில பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்டு கல்லை போட்டு கார் ஜன்னலை உடைத்தப்போது மேலும் வேகமாக எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

எரிந்த காருக்கு அருகே மிராண்டா பாட்டிலை கண்டுபிடித்த போலீசார், அதனை சோதித்தபோது பெட்ரோல் நாற்றம் வந்தததாகவும், அதை பயன்படுத்தி அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். 

போலீசார் கூறிய தகவலில் பல சந்தேக கேள்விகள் எழுகின்றன. 

ஜெயதேவன் காரில் பெட்ரோல் நிரப்பிய பெட்ரோல் பங்க் ஷெல். இந்த ஷெல் பெட்ரோல் பங்க்கில் பாட்டிலில் பெட்ரோல் தரப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

3 பேரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது போலீசாரின் சந்தேகம். கார் பற்றி எரியும்போது, கார் அசையவே இல்லை. காரில் இருந்து ஆ... அய்யோ... என எந்த சத்தமும் வரவில்லை. இதனை வீடியோ பதிவிலேயே காணலாம். உள்ளே இருவர் இருக்கும்போது, வெளியே ஜெயதேவன் மட்டும் வந்து காரில் தீ வைத்துவிட்டு உள்ளே சென்று கதவினை லாக் செய்து கொண்டாரா. அப்படியானால் என்னதான் தாங்களே தீப் பற்ற வைத்தாலும், உடலில் தீ படும்போது அவர்கள் அலறி துடிக்க மாட்டார்களா? அப்படி அலறி துடித்திருந்தால் கார் அசைந்திருக்க வேண்டுமே.

கார் எரிவதை பார்த்த சிலர் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது முன்னால் அமர்ந்திருந்த ஜெயதேவன், ஸ்டேரிங்கில் தலையை சாய்த்து வைத்திருந்தார். அப்படியானால் இவர்கள் 3 பேரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டார்களா?

போலீசார் தெரிவித்ததுபோக ஜெயதேவன் உறவினர்கள் சிலர், கடந்த 2011ம் ஆண்டு ஜெயதேவன் மனைவி, மகளுடன் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். அதுபற்றியும் போலீசார் தெளிவு படுத்துவார்களா? 

ஒரு குடும்பத்தில் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பல கேள்விகளையும், கேட்க யாரும் இல்லாத நிலையில் இதற்கு விடை கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் உண்டாக்கியுள்ளது. 

அரவிந்த்
courtesy;Nakeeran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval