Monday, May 15, 2017

காதல் மனைவியை கூறுபோட்ட கொடூர கணவன்!

Mumbai 700
காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டு அப்பாவி நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்த அவன் குடும்பமும் இப்போது சிறையில் இருக்கிறது.
நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடலை போலீசார் கைப்பற்றினர். தலை இல்லாமல் மீட்கப்பட்ட உடலால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீட்கப்பட்ட பெண்ணின் தோள் பட்டையில் குத்தப்பட்டிருந்த கணபதி மற்றும் ஓம் என்ற டாட்டூவை வைத்து, அந்தப் பெண்ணை அடையாளம் கண்டனர்.
இதில், அந்த பெண் வொர்லியை சேர்ந்த பிரியங்கா (வயது24) என்பதும், அவரது கணவர் சித்தேஷ் குரவ் (25) என்பதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டது பிரியங்கா தான் என்பதை அவரது சகோதரி கவிதா (32)வும் உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
கொலை சம்பவத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு தான் பிரியங்கா, காதலர் சித்தேஷ் குரவ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இன்டர்வியூ ஒன்றுக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி சித்தேஷ் குரவ் வொர்லி போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் செய்தார். இந்தநிலையில் தான் தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார் பிரியங்கா.
போலீசார், பிரியங்காவின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கால்களை தேடிவந்தனர். பிரியங்காவின் சகோதரி கவிதா, சகோதரி கொலையில் சித்தேஷ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூற, போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்பாவியாக நடித்த சித்தேஷின் ஃபோனை நோண்டினர் போலீசார். அப்போது ஒரே எண்ணுக்கு அவர் அதிக முறை பேசியிருப்பது தெரிய வந்தது. அது அவர் நண்பர் துர்கேஷின் எண் என்பது தெரியவர, அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சித்தேஷின் அப்பா மனோகர், அம்மா மாதுரியிடம் விசாரணை நடத்த, மனசு தாங்காமல் கதறிவிட்டார் சித்தேஷின் அப்பா. ’ஆமா, நாங்கதான் கொன்னோம்’ என்று ஒப்புக்கொண்டார். இவர் ஒப்புக்கொண்டது தெரியாமல், சித்தேஷ், அப்பாவியாக மறுத்துக்கொண்டே இருக்க, துர்கேஷை அவர் முன் நிறுத்தினர் போலீசார். இப்போது சித்தேஷ், கப் சிப்.
பிரியங்காவும் சித்தேஷும் காதலித்து வந்தனர். உடனே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாராம் பிரியங்கா. திருமணம் நடந்தது. பின்னர் தினமும் இருவருக்குள்ளும் தகராறு. இந்தச் சண்டையில் மாமியாரும் சேர்ந்துகொண்டார். பிரியங்காவின் நடத்தையில் சித்தேஷூக்கு சந்தேகம் வர, கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாம். நண்பர் துர்கேஷிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். கொலைக்கு அட்வான்ஸாக ரூ.40 ஆயிரம் கொடுத்தார் சித்தேஷ். பிறகு இரவு, சித்தேஷ் வீட்டுக்கு வந்த துர்கேஷ், தலையணையால் அமுக்கி பிரியங்காவை கொன்றுவிட்டு, பாத்ரூமில் வைத்து தலை, உடல், கால்கள் என துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பையில் போட்டு, ஒவ்வொரு இடத்தில் வீசியிருக்கிறார். கால்களை, கோனி என்ற கிராமத்தில் வைத்து எரித்திருக்கிறார். இப்போது போலீசார் உடல் பாகத்தை கைப்பற்றியுள்ளனர். தலையை தேடி வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது போலீஸ்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval