Thursday, March 13, 2014

எனக்காக தொகுதியை விட்டு கொடுத்தவர் பழனிமாணிக்கம் என டி.ஆர்.பாலு புகழாரம்

தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனிமாணிக்கத்தை, தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். பின்னர் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எனக்காக தொகுதியை விட்டு கொடுத்தவர் பழனிமாணிக்கம் என டி.ஆர்.பாலு கூறினார்.

               
                        

ஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளார். இவர் இந்த முறை தஞ்சை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் தி.மு.க. மேலிடம் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவை தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்த மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை, பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசினர்.

அதன் பின்னர் தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. பொதுக்குழு, மற்றும் செயற்குழு, ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு, பழனிமாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தினார். பதிலுக்கு பழனிமாணிக்கமும் பொன்னாடை போர்த்தினார்.

அதைத்தொடர்ந்து டி.ஆர். பாலு பேசியதாவது:-

தஞ்சை தொகுதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஈன்றெடுத்த தொகுதி. என்னையும், எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தையும் உருவாக்கிய முரசொலி மாறன் பிறந்தது இந்த சோழமண்டலத்தில் தான். நான் இந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக பழனிமாணிக்கம், இந்த தொகுதியை எனக்கு விட்டுக்கொடுத்துள்ளார். மிகப்பெரிய வெற்றியை தேடித் தர உள்ளார்.

நானும், பழனி மாணிக்கமும் ஒரே பட்டறையில் உருவானவர்கள். ஒரே குருவிடம் பயின்றவர்கள். முரசொலி மாறனின் தயாரிப்பு. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது பெரிது அல்ல. யார் வெற்றி பெற்றாலும் மாறனால் உருவாக்கப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு, பிணக்குகள் ஏற்பட்டு இருந்தாலும் நாங்கள் 2 பேரும் ஒரே புள்ளியில் சேருவோம்.
இங்கு கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசியல் வித்தகர்கள், விழிப்புணர்வு பெற்றவர்கள் உள்ள சபையில் உங்களின் ஒருவனாக நான் நிற்கிறேன். எனக்காக நீங்கள் பணியை ஆற்ற வேண்டும். எனக்கு உங்கள் உழைப்பை தந்தால் நன்றியுடன் பணியாற்றுவேன். பழனிமாணிக்கம் தேர்தல் பொறுப்பை ஏற்பது, பணியை தொடங்கி வைப்பது வழக்கமானதுதான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் பழனிமாணிக்கம் வழி நடத்தும் தேர்தல் பணி. இந்த களம் வெற்றிக்களமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், "தேர்தல் பணிகளை இன்றிலிருந்து தொடங்குங்கள். மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு 20-ந்தேதி வருகை தர உள்ளார்" என்றார்.
கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கோவிந்தராஜ், துணை செயலாளர்கள் மீராஜெயகாந்த், சோம.செந்தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: மாலைமலர்


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval