Saturday, September 12, 2015

இந்தியர்களை பலி வாங்குவதில் ரத்த அழுத்தம் நீரிழிவுக்கு முதலிடம் :அதிர்ச்சி தகவல்

Doctor-testing-blood-pressure-of-patientஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் பிற நோய்களால் இறப்பவர்களை விட ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் மாசு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த பத்து ஆண்டு காலத்தில் இதுபோன்ற உடல்நல பாதிப்புகளால்தான் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையான ‘லான்செட்’ பத்திரிகை கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்தியாவில் உள்ள பொது சுகாதார அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு உலகம் முழுவதும் உள்ள நோய் குறித்த ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவின் நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் ரத்த அழுத்தம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பது வருத்தமான விஷயம். மது குடிப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1990ம் ஆண்டு சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 8.97 லட்சம் பேர் இறந்தனர்.
ஆனால் ஆய்வின் முடிவில் இந்தியாவில் முதல் பத்து இடங்களில் உள்ள நோய்களின் பட்டியலில் இந்த ஊட்டச்சத்து குறைபாடு என்பது இடம்பெறவில்லை. மாறாக ரத்த அழுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு 79 லட்சம் பேர் இறந்துள்ளனர். ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் சதவீதம் 2013ம் ஆண்டில் 106 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக சுமார் 30 லட்சம் குறைபிரசவ உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றுமொரு முக்கிய காரணியாக சுகாதாரமற்ற நீர்நிலைகள் மற்றும் புகையிலை பயன்படுத்துதலும் இடம்பிடித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இறப்பது என்பது 1990ம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுவிட்டது. மாறாக உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, மோசமான உணவு பழக்க வழக்கம், மது குடித்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த கால்நூற்றாண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று பொது சுகாதார அமைப்பின் பேராசிரியரான லலித் டான்டோனா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் அதிகரிக்கப்படவேண்டும். இவ்வாறு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval