Wednesday, March 5, 2014

ஜப்பான் அணு உலை வெடிப்பு உலகிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை..||||

Burning Platform of Japan, an alarm for World Nations

நானே மரணமாகிறேன். உலகங்களை அழிப்பவனாகிறேன்'. உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியபோது அதை உருவாக்கிய அமெரிக்கக் குழுவின் தலைவர் ராபர்ட் ஜே.ஓபன்ஹேமர் பயன்படுத்திய வாசகம் இது. பகவத் கீதையின் வாசகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட இந்த வாசகம் அணு தொழில்நுட்பம் அத்தனைக்கும் பொருந்தும் என்பதைத் துயரமான வழியில் உணர்த்தியிருக்கிறது ஜப்பானின் புகுசிமா அணு உலை
விபத்து. இந்தப் பூவுலகம் அணு குண்டுகளால் அழிக்கப்படாவிட்டால் அணு உலைகளால் அழிக்கப்படும் என்று மீண்டும் ஒரு முறை மனித குலத்தை எச்சரித்திருக்கிறது இயற்கை. கண்டத் தட்டுகளையே புரட்டிப் போட முடிகிற ஒரு பூகம்பத்திற்கு மனிதன் உருவாக்கிய மின் இணைப்புகளும் மாற்று மின் இணைப்புகளும் எம்மாத்திரம்? அணுவைப் பிளந்து, அதில் உருவாகிற வெப்பத்தை வைத்து நீரை ஆவியாக்கி,

Click to view the larger image 

விசைப்பொறிகளை (turbine) சுழலச் செய்ய அதைப் பயன்படுத்தி மின்சாரம் செய்ய நினைக்கிறான் மனிதன். அதை நிகழ்த்துகிற அணு உலையைக் குளிர்விக்கும் கருவிகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் போது அதே அணு உலை, ஒரு அணுகுண்டாகி அவ்வுலகத்தை அழிக்கக் கிளம்பிவிடுகிறது. இது வெறுமனே அணு உலைகளுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. கதிரியக்கம் கொண்ட அணுக் கழிவுகளைத்
திருட்டுத்தனமாக ஆழ்கடல் பகுதிகளிலோ, பூமியின் அடி ஆழத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைத்தோ கொட்டுகிறார்கள். ஒரு சுனாமி கடலின் அடி ஆழத்திலிருந்து அழிவின் கடவுளை மறு அவதாரம் எடுக்கச் செய்கிறது. ஒரு பூகம்பம் மனிதனின் முடிவை அவனின் கரங்களாலேயே முடித்து வைக்கிறது.

அணுகுண்டு எதிர்ப்பு என்ற சித்தாந்த நிலைப்பாட்டை ஜப்பானிய மக்கள் அரை நூற்றாண்டிற்கும் மேலாக விட்டுக்கொடுக்காவிட்டாலும் அவர்களின் மிகப் பெரிய பொருளாதாரத்தை உந்தித்தள்ள அணு மின்சாரம் தேவை என்ற வாதத்திற்கு அந்த சமூகத்தின் ஒரு பிரிவினர் பலியானார்கள். அதன் விளைவாக ஹிரோசிமா, நாகசாகியை அடுத்து மீண்டும் ஒரு அணு வெடிப்பின் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்த
முறை அவர்கள் தங்களைத் தாங்களேதான் நொந்துகொள்ள வேண்டும். உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான, ஒழுக்கமும் விழிப்புணர்வும் மிக்க சமூகத்தைக் கொண்ட ஜப்பான் இவ்வாறு ஒரு தவறான நடவடிக்கையின் பின்விளைவுடன் போராடி வருகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும், விழிப்புணர்வற்ற சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு விலையேதும் இல்லை, போபால் விச வாயுக் கசிவு போல. உலகின்
ஒவ்வொரு அணு உலையின் கொடிய விபத்திற்கும் அடுத்து சொல்லும் அதே சமாளிப்புகள் இப்போது இந்தியாவிலும் ஒலிக்கத் தொடங்கியிருப்பதே நமது சமூக-அரசியலின் அவலத்திற்கு சாட்சி. இந்தியாவின் அணு உலைகளின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். "ஜப்பானில் நேர்ந்தது போன்ற மிக மோசமான இயற்கைப் பேரழிவையும் எதிர்கொள்ளும் சக்தி இந்திய
அணு மின்நிலையங்களில் உள்ளன" என்று அந்த மறு ஆய்வுகள் முடியும் முன்பே சான்றிதழ் கொடுக்கிறார் அணுசக்தி கமிசனின் தலைவர் சிறிகுமார் பானர்ஜி. இயற்கைப் பேரழிவுகளின் எல்லா சாத்தியங்களையும் கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது யாருக்கும் சாத்தியமல்ல என்பதால் இதுபோன்ற சமாளிப்புகள் ஆபத்தானவை. வேறு எந்த அசம்பாவிதத்தைப் போலன்றி கதிரியக்கம் எந்த
சீர்படுத்தலும் சாத்தியமற்றது. 1986ல் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தின் கதிரியக்கம் இன்னும்கூட அடங்கவில்லை. அந்த அணு உலை இன்னமும்கூட வெப்பத்தை கக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதில் அணு மின் நிலையத்தை மூடி 25 ஆண்டுகள் கழித்தும்கூட அந்த அணு உலையின் வெப்பத்தையும் அதன் விளைவாக ஏற்படும் கதிரியக்க அச்சுறுத்தலையும் தடுக்க குளிர்விப்பான்களைப் பயன்படுத்த
வேண்டியிருக்கிறது.

1980கள் 90களில் உலகம் முழுவதுமே அடங்கியிருந்த அணுசக்தி மோகம் இப்போது மீண்டும் தலை தூக்குகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதை முதலில் பரிசோதனை பார்க்கின்றனர் பகாசுர அணுசக்தி கார்ப்பரேட்கள். "அணு சக்திதான் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் புதிய பசுமை எரிபொருள்" என்ற புதுமையான வியூகத்துடன் மீண்டும் உலகைக் கபளீகரம் செய்ய நினைக்கின்றன அணுசக்தி
தனியார் நிறுவனங்கள். கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் உஷ்ணமடைந்து வருவதையும் அதன் விளைவாக ஏற்பட்டு வரும் கால நிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களையும் பயன்படுத்திக்கொண்டு இழந்த சந்தையை மீட்க நினைக்கின்றன இந்த நிறுவனங்கள். 1979ல் அமெரிக்காவின் நியூ மைல் ஐலேண்ட் அணு உலை விபத்திற்குப் பிறகு எழுந்த தீவிரமான சுற்றுச்சூழல் இயக்கங்களும் பொதுமக்களின்
எதிர்ப்பும் அந்நாட்டில் அணு மின் நிலையங்களுக்கு சாவு மணி அடித்தது. விண்வெளியிலும் அணுகுண்டுகளிலும் திளைத்த அமெரிக்க அதிபர் ஜான்கென்னடி இல்லாததும் நல்லவிதமாக அமைந்தது. 1980க்குப் பிறகு அங்கு ஒரு அணு மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. அணு மின் நிலையங்கள் அமைக்க தடை விதிக்கப்படவில்லை என்றாலும் அணு மின்நிலையங்களின் பாதுகாப்பிற்குக் கடும் கெடுபிடிகள்
விதிக்கப்பட்டன. அந்தக் கெடுபிடிகளுக்கு உட்பட்டு அணு மின் நிலையங்கள் அமைப்பது தனியார் நிறுவனங்களுக்கு 'கட்டுப்படி'யாகாத காரியமாக மாறியதால் அமெரிக்காவின் அணுசக்தி தனியார் முதலைகள் உலகின் பிற பகுதிகளில் கடை பரப்பத் தொடங்கின. இன்று பெட்ரோல், நிலக்கரி முதலிய எரி பொருள் ஆதாரங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அமெரிக்காவில் காலடி
பதிக்க முயல்கின்றன அணு நிறுவனங்கள். அணு மின்சார உற்பத்தியின்போது கரியமில வாயு எதுவும் வெளிப்படுவதில்லை என்பதால் இதுதான் அதிகரித்து வரும் உலக ஜனத்தொகையின் மின்சாரத் தேவையை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி எட்ட உதவும் என்ற தந்திரமான வாதத்தை முன்வைக்கின்றனர் அணு தனியார் நிறுவன மாஃபியாக்கள். அதற்கான முதல் சோதனைக் களமாக இந்தியா போன்ற நாடுகள்
பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவுடனும், பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் இந்தியா செய்துகொண்டிருக்கும் 'சிவில்' அணுசக்தி ஒப்பந்தம் உண்மையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி அணு ஆயுதம் தயாரிப்பதற்கு செய்யப்படும் உதவி என்று சொல்கிறார் நோம் சோம்ஸ்கி. 1974ல் இந்தியா முதல் முறையாக நடத்திய அணுகுண்டு சோதனைக்குப் பிறகு அணு பரவல் தடை ஒப்பந்த நாடுகள் (என்.பி.டி)
சார்பில் இந்தியாவின் மீது தடை விதிக்கப்பட்டது. அதனால் இவ்வளவு காலமாக இந்தியாவுக்கு உலக நாடுகளிலிருந்து அணு மூலப் பொருட்கள் கிடைக்கவில்லை. அணுகுண்டு தயாரிக்கும் நுட்பத்தை அறிந்திருந்தாலும் இந்தியாவினால் பெரிய அளவில் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் தங்குதடையின்றி அணு மூலப்பொருட்கள் கிடைப்பதால் அதில் ஒரு பகுதியை
அணுகுண்டுகள் தயாரிக்க இந்தியா பயன்படுத்தலாம். என்.பி.டி.யின் தடையால் இந்தியாவுடன் அணு வர்த்தகம் செய்ய முடியாமலிருந்த தனியார் அணு நிறுவனங்கள் விட்டதைப் பிடிக்க அகோரப் பசியுடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. அணு பரவல் சித்தாந்தத்தைக் குப்பைக் கூடையில் வீசி ரொனால்ட் ரீகன் பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பத்தைக் கொடுத்தார். உலகின் அமைதியைக் கெடுக்கும்
விதத்தில் இஸ்ரேலின் அணுகுண்டு உருவாக்கத்திற்கும் பெரிதளவில் உதவி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளை அணு தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது அமெரிக்கா. இப்போது ஒபாமாவின் நிர்வாகம் சாவின் விளிம்பிலிருந்த அணு பரவல் சித்தாந்தத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. சீனாவுடனும் இந்தியாவுடனும் அமெரிக்காசிவில் அணுசக்தி
ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. பொருளாதாரச்சரிவின் பிடியிலிருந்து மீளப் போராடும் அமெரிக்கா தனது தேசத்தைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களுக்கு இதன் மூலம் பொருளாதார வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.

இன்று உலகின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் சக்தியாக எண்ணெய் அரசியல் உருவாகியிருப்பது அணுசக்தி நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை பல்வேறு காரணங்களால் உயர்ந்துகொண்டே போகிறது. கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் இறக்குமதி செய்து வருகின்றன. இதனால்
அன்னியச் செலாவணி கடுமையாக வெளியேறி பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்திற்கு சவாலை உண்டாக்குகிறது. இந்தியாவில் எரிபொருளுக்குக் கடுமையாக வரி விதிப்பதால் விலையேற்றத்துடன் அரசு கஜானாவுக்கும் பலன் கிடைக்கிறது. அமெரிக்காவில் எரிபொருள் விலைக்கான வரிகள் குறைவு. அதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பது அந்த தேசத்தின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுக்குள்
தள்ளுகிறது. அணுசக்தியை கச்சா எண்ணெய்க்கான மாற்றாகப் பயன்படுத்தும் போது இந்தப் பிரச்சினைகள் இல்லை என கணக்குப் போடப்படுகிறது. அதனால் அணுசக்திக்கு எதிரான இயக்கங்கள், வீரியம் கொண்டிருக்கும் அமெரிக்காவின் "Nuclear energy is the new green energy" என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற உள்நோக்கம் கொண்ட சக்திகள். இந்தியா போன்ற முட்டாள் தேசங்கள் அதை இருகரம் கூப்பி வரவேற்கின்றன.
இதுவரை வெறும் 3 சதவீதம் மட்டுமே அணுசக்தி உற்பத்தியைக் கொண்டே இந்தியா தனது தேவைகளைச் சமாளித்து வந்திருக்கிறது. காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. இந்தியாவில் நீக்கமற நிறைந்திருக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை மலிவாக்கும் நோக்கத்தில் அதிக செலவு கொண்ட ஆராய்ச்சிகள்
எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. ஆனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் 25 சதவீதத்தை அணுசக்தி மூலம் எட்டுவது என்ற வெறித்தனத்தை அடைவதற்காக ஏற்கனவே இருக்கும் 20 அணு மின்நிலையங்களுடன் கூடுதலாக அரை டஜன் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அணுசக்தி மலிவானது என்ற பொய்யை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சூரிய ஒளியில் ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிப்பதைவிட அணுசக்தி மூலம் தயாரிப்பது மலிவானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அணு உலைகள் அமைப்பதற்காகவும் அதன் கழிவுகளைப் பாதுகாப்பதற்கும் செலவிடப்படும் பல ஆயிரம் கோடிகளை சூரிய ஒளி போன்ற மாற்று சக்திகளைக் கண்டறிவதற்காகச் செலவிட்டால்
நிச்சயம் மாற்று வழிகளே சிறந்தவை என்பது உணரப்படும். அணுக் கதிர் வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் செலவுகளையும் உடல்-மனஉளைச்சலையும் உற்றார் உறவினர்களுக்கு ஏற்படும் இழப்பையும் கணக்கிடும்போது அணுசக்தியின் பலன்களைவிட பாதிப்புகளே அதிகம். ஆனால் அணுசக்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் சூரிய ஒளி மின்சாரம் வெல்ல அனுமதிக்கப் போவதில்லை.
அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி செர்னோபில், த்ரி மைல் ஐலேண்ட், டொக்காய் மொரா (ஜப்பான்), இப்போது புகுரிமா என பெரிய அணு விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 1992ல் தாராப்பூர் அணு உலையில் கனநீர்க் கசிவு ஏற்பட்டது. 1999ல் கல்பாக்கம் அணு மின் நிலையத்திலும் கனநீர்க் கசிவு ஏற்பட்டது. அதிகாரிகள் இடையிலான மோதலால் கதிரியக்கம் கொண்ட கல்பாக்கம் அணு மின்
நிலையத்தின் பொருள் ஒன்று கூவத்தில் வீசப்பட்டது. 2009ல் கர்நாடகாவிலுள்ள கைகா அணு மின் நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டது. எண்ணற்ற சிறு விபத்துகள் வெளியுலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் இந்திய அணு சக்தித் துறையின் செயல்பாடுகள் எதிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததில்லை. பன்னாட்டு அணு ஒப்பந்தத்திற்குப் பிறகு ஏராளமான தனியார் நிறுவனங்கள்
இந்திய அணுசக்தி நிலையங்களில் காலடி பதித்திருப்பதால் இந்த சர்வாதிகாரத்துடன் முதலாளித்துவத்தின் திருட்டுத்தனங்களும் சேர்ந்துகொள்ளப் போகிறது.

தங்கள் உயிருக்கான அச்சுறுத்தலைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் செயல்களுக்கு நடுவில் மௌனம் காப்பவர்கள் உயிர் வாழ எந்த உரிமையும் அற்றவர்களாகவே கருதப்படுவார்கள். மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில் பிரான்சின் இதுவரை பரிசோதிக்கப்படாத அணு உலை ஒன்றை அமைப்பதை உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் கிளம்பிய எதிர்ப்பு
அளவுக்கு தமிழகத்தின் தென் கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பை சந்திக்கவில்லை. கூடன்குளத்திலிருந்து 240 கி.மீ. தொலைவிலிருக்கும் இலங்கையில் இதன் அச்சுறுத்தல் பற்றி பத்திரிகைகளில் எழுதப்படும் அளவுக்குக்கூட தமிழகத்தில் பத்திரிகைகளில் எழுதப்படவில்லை. கூடன்குளம் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது
என்பது குறித்து சட்டப்படி செய்ய வேண்டிய எந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமலே இந்திய அரசு அதைச் செயலுக்கு கொண்டு வர நினைக்கிறது. அணுக் கதிர்வீச்சு கசியும் பட்சத்தில் அது எவ்வாறு வெண் மேகக் கூட்டங்களாகவும் தூசு துகள்களாகவும் பரவும் என்றோ, காற்று உள்சுழற்சி செய்யப்பட்ட ஏ.சி. வசதியைக் கொண்ட காருக்குளேயேகூட சில நிமிடங்களில் கதிரியக்கம் ஊடுருவும் என்றோ
அந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவை குறித்த அடிப்படையே தெரிந்து கொள்ளாத, தெரிந்துகொள்ள ஈடுபாடு காட்டாத அந்தப் பகுதியின் பிரதான சாதிகளான பிள்ளை சமூகமும் நாடார் சமூகமும் கூடன்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை 'வளர்ச்சி'க்கு எதிரான வேண்டாத வேலையாகத்தான் சமீப காலம் வரை கருதி வந்தன. ஆனால் போபால் விசவாயு விபத்து குறித்து சமீபத்திய
அம்பலங்களுக்குப் பிறகு இந்தியாவில் கொடிய விபத்துகள் எவ்வளவு அலட்சியமாக உருவாக்கப்படுகின்றன என அவர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசான ஜப்பானின் உயர் தொழில்நுட்பத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அங்கு விபத்து நடக்க முடியும் என்றால் அலட்சியம் மிகுந்த இந்திய அமைப்பு முறையின்கீழ் என்ன
நடக்கும் என்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அணு உலைகளில் எடுபிடி வேலைகளுக்குச் செல்கிறவர்கள் ஏன் குறுகிய காலத்தில் வேலையை விட்டு அனுப்பப்பட்டு விடுகிறார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்ப வேண்டும். கல்பாக்கம் அணு உலை அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் ஏன் பல குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன, புற்றுநோய்கள் அதிகம்
தாக்குகின்றன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சூரிய ஒளி போன்ற நீடித்த மாற்று எரிசக்தியை சிறப்பாகப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் காண பெரிய முதலீடுகளும், அலட்சியமும் விரயமும் மிகுந்த எரிசக்தி உபயோகத்தை சுய ஒழுக்கத்தின் மூலம் குறைக்கச் செய்வதும் மட்டுமே மனிதர்களை மனிதர்களின் கோணல் சிந்தனையிலிருந்து காப்பாற்றும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி ஜெர்மனி அப்படி ஒன்றைச் செய்து வருவதாக அஞ்சியதால்,
அமெரிக்கா அணுகுண்டை உருவாக்க வேண்டும் என்று அதிபர் ரூஸ்வெல்டிற்குக் கடிதம் எழுதியதற்காகப் பிற்பாடு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வருந்த நேர்ந்தது. அவரது இ=எம்.சி2 என்ற சூஸ்திரம் உண்மையில் இந்தப் பூவுலகு மீண்டும் நெருப்புக் கோளமாக மாறும் நிலை குறித்த கற்பனைக் கணக்கு என்பதை உணராவிட்டால், பிறகு வருந்துவதற்கு ஐன்ஸ்டைனின் வம்சத்திலும் யாரும் மிஞ்ச மாட்டார்கள்.

நன்றி: உயிர்மை
தகவல் ;N.K .M .புரோஜ்கான் 
அதிரை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval