Thursday, June 25, 2015

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்


இராமநாதபுர மாவட்டத்தில் எனது ஊருக்கு அருகில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர். முஸ்லிம் பெருமக்களால் "தேவர் மகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.
காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார். அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார். ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸார்(சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.
நடு இரவில் ஒரு வில்லு வண்டியில் நீண்ட ஜிப்பா, அடர்ந்த தாடி, தலையில் சிவப்பு துருக்கிக் குல்லாவுடன் ஒருவர் வந்து இறங்கி ஆயிஷாபீவியின் உடலைப் பார்த்துவிட்டு மறுகணமே அடுத்த வில்லு வண்டியில் ஏறித் தலைமறைவானார். முஸ்லிம் பெரியவர் வேடத்தில் வந்தவர் தேவரய்யாதான் என அவர் தப்பிச் சென்ற பின்புதான் புலனாய்வுத் துறை போலிஸாருக்குத் தெரியவந்தது.
தமக்குப் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பீவீக்கு, தமக்கு ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும் தேவர் மகன் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வந்து மரியாதை செலுத்தினார் என்ற வரலாற்றை நான் அந்த விழாவில் உணர்ச்சி ததும்ப எடுத்துச் சொன்னதும், தேவர் இன மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தேவரய்யாவைப் பற்றி எங்களுக்கே இன்று வரை தெரியாத வரலாற்றைச் சொன்னதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்து
என்னைக் கட்டித் தழுவினார்கள்.
"சரித்திரச் சாலையின் சந்திப்புகள்' என்ற நூலில் ஆசிரியர்
"முஸ்லிம் குரல்' ஹாஜி.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval