Monday, June 15, 2015

சிறுநீரக நோய்களுக்கு ஏற்ற உணவுகள்!

kidney-disease-foodsநம் உடம்பின் சிறுநீரகங்கள் மிக அற்புதமான இயற்கையின் படைப்பு. கிட்ட்த்தட்ட 10லட்சம் நெஃப்ரான்களை(பில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கிய அந்த உறுப்பினுள் ஒரு நாளைக்கு 50,000மிலி தண்ணீரை உள்செல்கிறது. 1500 மிலி தண்ணீரைச் சிறுநீராக தினசரி வெளியேற்றுகிறது.
கூடவே தேவைக்கு அதிகமான உப்புக்கள், உடலுக்குள் வந்துவிட்ட நச்சுக்கள், தேவைக்கு மீந்துவிட்ட மருந்துக் கூறுகள் எல்லாவற்றையும் தினசரி வெளித்தள்ளும் அதன் பணி மகத்தானது.
கழிவு வெளியேற்றுவது மட்டுமல்ல, விட்டமின் ’டி’ தயாரிப்பு, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ’எரித்ரோபாய்டின்’ உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தத்தைக் கூடாது காக்க, ’ரெனின்’ சுரப்பைத் தருவது என இதன் பணிகள் இன்னும் ஏராளம். மொத்தத்தில், இதயத்திற்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம் எனலாம்..
தற்போது சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அடிக்கடி செய்திகள் படித்து வருகிறோம். அதில் தொடரும் இன்னொரு ஆபத்து, நாட்பட்ட சிறுநீரக நோய்கள்.
நீரிழிவு நோயை எப்போதும் கட்டுப்பாடில் வைத்திருக்கத் தவறும் பட்சத்தில் பின்னாட்களில் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
சர்க்கரை அல்லாது, இன்னும் பல காரணங்களால் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்கள் ஏற்படக் கூடும். அடிக்கடி வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், எந்த மருந்தெனினும் மருத்துவர் பரிந்துரையின்றி சுய வைத்தியம் செய்து கொள்ளுதலில் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.
பாரம்பரியமாக குடும்பத்தில் இத்தொல்லை இருப்பினும் நாம் கவனமாக இருப்பதும் அவசியம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் மிகுந்த கவனம் தேவை. கட்டுப்பாடுகளும் கொஞ்சம் அதிகம். இதில் கவனம் தவறுவதும் அலட்சியமாக இருப்பதும் சிறுநீரக முழுச்செயலிழப்பையும், உயிருக்கே ஆபத்தையும் கொடுத்துவிடும்.
சிறு நீரகத்தை ஆரம்பம் முதல் நோயின்றி பாதுகாப்பதுதான் மிக முக்கியம். நமக்கு எந்த நோய் இருக்கிறதோ இல்லையோ, சிறுநீரகத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த விஷயத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக அவசியம். பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான்.
அடுத்து உணவில், சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் வாழைத் தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களேனும் சாப்பிடுவது மிக அவசியம். நாற்பதுகளைத் தொடும்போதே அதிக உப்பு தவிர்ப்பது மிக அவசியம் ஆகிவிடுகிறது. அதிக உப்பு சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும் ஒன்று. இனியாவது தயிர்சாதத்திற்கு ஊறுகாய் இல்லைனா எப்படி? என அடம் பிடிக்காதீர்.
சரி, ஏதோ மருத்துவ காரணத்தில் லேசான சிறுநீரக செயலிழப்பு தெரிய ஆரம்பித்து விடுகிறது என்றால், பதட்டப்பட வேண்டாம். எந்த அளவிற்கு உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உள்ளதோ அந்த அளவில் நோயினை தள்ளிப்போட கண்டிப்பாக முடியும். இன்றளவில் சிறுநீரகச் செயலிழப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்த எந்த மருத்துவத் துறையிலும் மருந்துகள் இல்லை. முடிந்தவரை நோயின் தீவிரநிலையை தள்ளிப்போடத் தான் முடிகிறது. ஆதலால், உணவுத் தேர்வு மிக மிக முக்கியமானது.
உணவில் நீர், புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்கள், இரும்புச்சத்து இவற்றைச் சீர்படுத்துவது சிறுநீரக நோய்களில் ரொம்ப முக்கியமானது. எந்த அளவிற்கு சிறுநீர் வெளியேறுகிறதோ அதைப் பொறுத்து நீர் அருந்தும் அளவை உங்கள் மருத்துவர் நிர்ணயிப்பார். அதனை அப்படியே பின்பற்றுவது மிக முக்கியம். இரத்தத்தில், மற்றும் வெளியேறும் சிறுநீரில் உள்ள உப்பைப் பொறுத்தே உள்ளே சேர்க்கும் உப்பின் அளவும் இருந்திட வேண்டும்.
புரத உணவைப் பொறுத்த மட்டில் காய்கறிப் புரதம் சிறந்தது. சிக்கனில் கிடைக்கும் புரதத்தை காட்டிலும் பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது. ஏனெனில், சிக்கனில் புரதத்துடன் உப்புக்களும் கூடுதல் அளவில் உள் வந்துவிடும். பயறுப்புரதத்தில் அந்த பயம் இல்லை. சிறுநீரக நோயினருக்கு இரத்த்த்தில் மெல்ல மெல்ல பொட்டாசியம் சேரும் வாய்ப்பு வந்து விடுவதால், அது இதயத்தை அதன் துடிப்பின் ரிதத்தை மாற்றிடவும், திடீர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. சோடியமும் பொட்டாசியமும் குறைந்த அளவில் உள்ள பழங்களையே எடுக்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியை தவிர்ப்பது நல்லது. இவை நிறைய பொட்டசியச் சத்து உடையன. பைனாப்பிள், பப்பாளி, கொய்யா முதலிய பழங்கள் குறைந்த அளவிலான பொட்டாசியச்சத்து உடையன. கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவை சோடியம் அதிகம் உள்ளவை. இதனையும் உணவில் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டும் நன்கு வேகவைத்தும், பின் அந்த நீரை வடித்து விட்டு சாப்பிட வேண்டும். இம்முறையில் சமைப்பது உப்புக்கள் அதிகஅளவில் உணவில் தங்காமல் பார்த்துக் கொள்ளும்.
பொங்கல் சமயத்தில் வாசக்காலில் சாங்கியத்திற்கு கட்டுவோமே, வெண்ணிற பூக்களாலான அந்த சிறுகண்பீளை, வயலோரங்களில் களைச்செடியாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி செடி, காய்ந்த வரப்புகளில் நடக்கும் போது காலில் குத்தும் நெருஞ்சிமுள், பூனை மீசை எனும் செடி இவற்றை சரியாக அடையாளம் தெரிந்து தேர்ந்தெடுத்து, தேநீராக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறுநீரக நோயாளிகட்கு ஒரு functional food ஆகப் பயன்தரும்.. மருத்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையுமே சாப்பிடுவது சரியல்ல.
சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், மருத்துவரின் அறிவுரைப்படி சரியான சிகிச்சை, தேர்ந்தெடுத்த சரியான உணவு இவை மட்டுமே சிறுநீரக நோயைக் கட்டுப்பாடில் வைத்திருக்க உதவும். தேவையெல்லாம், அலட்சியமில்லாத, அக்கறையும் கூடுதல் மெனக்கிடலும் தான்.
சிறு நீரக செயலிழப்பு :
(RENAL FAILURE)
சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?
இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிநீரகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இனங்கள் எவை?விசேஷமானவை இரண்டு வகை.
#. சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு – இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
#. நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு – இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு யாருக்கு வரக்கூடும்?
சிறு பராயம் முதல் முதிர் வயது வரை எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு.
சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் என்ன?
பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரகச் செயலிழப்பை நீர் எப்படி அடையாளம் காண்பீர்?
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்திலே நோயாளியிடத்தில் குறிப்பாகக் கொள்ளக்கூடிய எதுவித அறிகுறிகளும் இராது. சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தம் சிறுநீர் ஆகியவற்றை பரிசோதித்தே திட்டமாக அறியமுடியும். சிறுநீரகச் செயலிழப்பில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.
#.கடுமையான பசியின்மை, பிரட்டு, சத்தி, விக்கல், வாந்தி.
#.மூச்சு விடுவதில் கஸ்டம்
#.முகம் கால், வயிற்றுப் பகுதியில் வீக்கம்.
#.சிறுநீர் குறைவாகக் கழித்தல், (சடுதியான சிறுநீரகச் செயலுழப்பு) அல்லது கூடுதலான சிறுநீர் கழித்தல் (நாள் கடந்த சிறுநீரக செயலிழப்பில்)
#.இரத்தச் சோகை (Anaemia) (நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு)
சிறுநீரக செயலிழப்பபை நீர் எப்படி உறுதிப்படுத்துவீர்?
யூரியா (Blood urea) சீரம் கிறியற்றினின் (Serum creatinine) என்பவற்றைப் பரிசோதித்து சிறுநீரக செயலிழப்பை உறுதிப்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பில் யூரியாவும், சீரம் கிறியற்றினினும் கூடுகின்றன. 24 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக சிறுநீரைச் சேர்த்து அதிலே கிறியற்ரினி்ன் கிளியறன்ஸ்(Creatinine clearance) பரிசோதனையை நடத்தினால், அது சிறுநீரகச் செயலிழப்பு என்பதை வைத்தியர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள உதவும். சிறுநீரகச் செயலிழப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இப்பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாக இருப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள , அல்றா சவுண்ட் ஸ்கான் (Ultra sound scan) னும் வைத்தியருக்கு உதவுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் எவை?
#.உணவு தரப்படுத்தல்./ மாற்றல்.
#.மருந்துச் சிகிச்சை(Druy therapy)
#.டயலைசிஸ் (Dialysis)
#.சிறுநீரக மாற்றுச் சிகிச்சை.
உணவு மாற்றம் – உணவிலே புரதச்சத்து, பொட்டாசியம், உப்பு நீர் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவது சாதாரண வழக்கம். புரதச்சத்து அடங்கியுள்ள இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை நாள் வீதம் ஒரு அளவிற்குக் குறைக்க வேண்டும். இளநீர் பழவகைகள், பொரித்த உருழைக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் இருப்பதால் இவை தவிர்க்கப்பட வேண்டும். கூடுதலான இரத்த அமுக்கம், உடல் வீக்கம், மூச்சு விடக் கஸ்டம் இவை இருந்தால் உப்பு குறைக்கப்பட வேண்டும். பாவிக்க கூடிய தண்ணீரின் அளவை உமது வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
#. மருந்துச் சிகிச்சை(Drug therapy) – நோயாளியின் சிறுநீர் செயலிழப்பு நிலையைப் பொறுத்து பல வித மருந்துகள் தேவைப்படும்
#. பின்வருவனவற்றில் அடங்கும்
1) உடலின் வீக்கத்தைக்குறைக்க – டையூறற்ரிக்ஸ் (Diuretics) (உ+ம்வ்றுஸெமைட் (frusemide)
2) இரத்த அமுக்கத்தைக் குறைக்க – அன்றிஹைபரென்சிவ்ஸ் (Antihypertensives) (உ+ம்: மீதைல்டோபா methyilopa)
3) வாந்தி சத்தியைக் குறைக்க –அன்ரிஎமெற்றிக்ஸ் (Antiemetics) உ+ம் மெற்ரோகுளோபிறமைட் (Metoclopramide)
4) இரத்தக் குறைவுக்கு –இரத்தம் ஏற்றல், எரித்திரோபொயிற்ரின், இது விலை கூடிய மருந்து.
5) சிறுநீர்த் தொற்றைப் பராமரிக்க—அன்றிபையொற்றிக் (உ+ம் :அமொக்சிலின்)
#. டயலைஸிஸ் – சிறுநீரகச் செயலிழப்பில் மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் யூரியா, பொட்டாசியம் எனும் உப்புக்கள் ஆபத்தான நிலைக்கு கூடிவிடும். இந்நிலையில் நோயாளி மரிக்கவும் கூடும். உடலிலுள்ள அழுக்குகளாகிய யூரியா, பொட்டாசியம் என்பவற்றை வெளியேற்றும் முறையே டையலைசிஸ் எனப்படுகிறது. டையலைசிஸ் பற்றிய தலையங்கம் வேறோர் துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. சிறுநீரக மாற்றுச் சிகிச்சைஎதுவித மாற்றமும் எற்படாத நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு திரும்பத் திரும்ப டையலைசிஸ் சிகிச்சை அளித்தல் , ஆபத்தானதும் செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோயாளருக்கு சிறுநீரகம் மாற்றம் செய்வது நல்லது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சுகதேகி ஒருவரின் (இருப்பவரோ,இறந்தவரோ) சிறுநீரகம் நோயாளிக்கு மாற்றப்படுகிறது. சிறுநீரக மாற்று பற்றிய தலையங்கம் வேறொரு பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியுமா?
ஆம். ஒரு அளவிற்கு. இந்நோய் வர காரணமாக இருக்கும் பாம்புக்கடியை தவிர்ப்பதும். நீரிழிவிற்கு நேரத்தோடு சிகிச்சை பெறுவதும், கூடிய இரத்த அமுக்கம் வராது தடுப்பதும், சிறுநீரக அழர்ச்சி ஏற்படாது பார்ப்பதும், புரஸ்ரேட் பிரச்சினையை தவிர்ப்பதும், சிறுநீரக தொற்று ஏற்படாது பார்ப்பதும் இந்நோயை தடுக்கக் கூடிய வழிகளாகும் .அனேக நோயாளிகள் போதிய பராமரிப்பபை பெறுவதில்லை. வைத்தியரின் உதவியையும் இடைநிறுத்தி விடுகின்றனர். சிறுநீரில் காணப்படும் அசாதாரண நிலை குறித்து (உ+ம்:அல்பியுமின், செங்கலங்கள் க சிந்தித்து நோயை இனம் கண்டு அதை குணப்படுத்த நடவடிக்ககை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு முதிர்ச்சியடைததாய் இருந்தால் அதை தடுப்பது முடியாத காரியமாகும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval