Friday, August 26, 2016

பஸ் பாஸூக்கு ஆதார் அவசியமா?


ல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு வேலை தேடி வருபவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது, சென்னை மாநகர் பேருந்தின் ஒருநாள் பயணச்சீட்டான 50 ரூபாய் பஸ் பாஸ் ஆகும். இந்தப் பயணச்சீட்டை வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் சென்னையைச் சுற்றிவரலாம்.
ஏசி பஸ்ஸை தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். இந்தப் பயணச்சீட்டானது, வேலை தேடுபவர்கள், சுற்றுலாப் பயணிகள், கூலி வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால், கடந்த திங்கள்கிழமையிலிருந்து இந்த ஒரு நாள் பஸ் பாஸினைப் பெறக் கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்தப் புதிய அறிவிப்பு, மக்களுக்குப் பயனுள்ளதா அல்லது வீண்வேலையா எனப் பொதுமக்களிடம் கேட்டோம்.
‘‘எனக்கு இந்த அறிவிப்பு வந்ததே தெரியாது. நான் தினமும் எந்த ஏரியாவுக்கு வேலைக்குச் செல்கிறேனோ, அதற்கான டிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொள்வேன். ஆனால் இனறு, நிறைய ஏரியாக்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், கண்டக்டரிடம் ஒருநாள் பாஸான 50 ரூபாய் பாஸ் கேட்டேன். அவர், என்னிடம் ஆதார் கார்டு கேட்டார். நான் இல்லை என்றதும் கண்டக்டரும் பாஸ் தர மறுத்துவிட்டார். ஒன்டே பஸ் பாஸ் வாங்குவதற்குக்கூட ஆதார் அட்டை அவசியம் என்பது தேவையில்லாதது’’ என்றார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரபு.
‘‘இது ஒரு முட்டாள்தனமான அறிவிப்பு!’’
பூபாலன் - குப்பு தம்பதியினர், ‘‘இது ஒரு முட்டாள்தனமான அறிவிப்பு. எல்லாரும் எல்லா நேரத்துலயும் அடையாள அட்டையை எடுத்துட்டுப் போக முடியுமா? மாதாந்திர பாஸ்-க்கு அடையாள அட்டை கேட்கலாம், தப்பில்லை. ஆனால், ஒரு நாள் பஸ் பாஸுக்கு ஆதார் அட்டை கேக்குறதுலாம் ரொம்ப தப்பு. நாங்க ஆதார் அட்டை எழுதிக்கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. இன்னமும் வரலை. நானும் என் மனைவியும் அடிக்கடி மருத்துவமனைக்கு செக்கப்புக்காகப் போக வேண்டியிருக்கு. எப்போதும் ஒரு நாள் பாஸ் எடுத்துக்கிட்டுத்தான் போவோம். இனி, எப்படி பாஸ் வாங்குறது? அரசாங்கம் போடும் அறிவிப்பு எல்லாம் மக்களுக்குப் பயனுள்ளதா இருக்கணும். ஆனா, இப்ப வர அறிவிப்பு எல்லாம் அப்படியா இருக்கு’’ என்று ஆதங்கப்பட்டனர்.
‘‘ஏற்கெனவே, இந்த ஒருநாள் பாஸ் 30 ரூபாய்தான் இருந்தது. இப்ப 50 ரூபாயா ஏத்திட்டாங்க. பஸ்ல போறவங்களாம் யாரு? அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும்தான். இவங்ககிட்ட போயி ஆதார் அட்டை வேணும், வோட்டர் ஐ.டி வேணும்னு சொன்னா அவங்க எங்கே போவாங்க? இப்படி எடுத்துட்டு வரச் சொல்லி அது எங்கயாவது தொலைஞ்சி போச்சுனா என்ன பண்ண முடியும்? எங்கேயோ, எவனோ ஒருத்தன் டிக்கெட் எடுக்காம ஏமாத்திட்டுப் போறான். எல்லாருமா ஏமாத்துவாங்க? அப்படியே இருந்தாலும் டிக்கெட் எடுக்காம போகணும்னு நினைக்குறவன், கண்டிப்பா டிக்கெட் எடுக்கமாட்டான். முடிஞ்சா அவனைக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே? எதுக்கு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணணும்’’ என வெடிக்கிறார் செல்லபாண்டி.
‘‘கவர்மென்ட் பண்ற காமெடி!’’
இன்டர்வியூக்குச் சென்ற பிரபாகர், ‘‘இது வரவேற்கத்தக்க மாதிரி இல்லை. இதோட முக்கியக் காரணம், ஒருத்தவங்க பாஸ, இன்னொருத்தவங்க பயன்படுத்துறாங்கன்னு சொல்றாங்க. காலையிலே வேலைக்கோ அல்லது இன்டர்வியூக்கோ போறவன் நைட்லதான் வீட்டுக்கு வர்றான். அப்படி இருக்கும்போது, அந்த நேரத்துல இன்னொருத்தவங்க எப்படிப் பயன்படுத்த முடியும்? தீவிரவாதச் செயல்களைத் தடுக்குறதுக்குதான் இந்த மாறித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்காங்கனு கண்டக்டர் சொன்னார். தீவிரவாதச் செயல் செய்யுறவன் பஸ்லயா போவான்? கவர்மென்ட் பண்ற காமெடிக்கு வரவர அளவில்லாம போய்கிட்டு இருக்கு’’ என்றார்.
‘‘போக்குவரத்து நிர்வாகம் ஆலோசனை செய்யவேண்டும்!’’
இதுகுறித்து பணிமனை ஐ.சி.டி.யூ தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை நிர்வாகி தயானந்தம் ஆகியோர் பேசினோம். ‘‘இந்த அறிவிப்பால், டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஒரு பயணி, தான் எடுக்கும் பாஸ்ல கையெழுத்துப் போடாம, வேற ஆளுகிட்ட பாதி விலைக்கு வித்துட்டுப் போறாங்க. இது மாதிரியான தவறுகளைக் குறைக்கவும், சென்னையில் நடக்கும் சில வன்முறைச் செயல்களைத் தடுப்பதற்காகவும் அடையாள அட்டை அவசியமாகிறது. தற்போது ஏதாவது ஒரு ஐ.டி இருந்தால் போதும். போக்குவரத்து நிர்வாகமும் இன்னும் கொஞ்சம் ஆலோசனை செய்து மக்களுக்கு அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்’’ என்றனர்.
தற்போது ஏதாவது ஒரு ஐ.டி இருந்தால் போதும். போக்குவரத்து நிர்வாகமும் இன்னும் கொஞ்சம் ஆலோசனை செய்து மக்களுக்கு அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்
‘‘இந்த அறிவிப்பு தேவையே இல்லை!’’
இதுதொடர்பாக மாநகரப் பேருந்து நடத்துநர் ஒருவர், ‘‘உண்மையிலேயே இது ஒரு வீணாபோனா அறிவிப்பு. எங்க அதிகாரிங்க எங்களை பலிகடாவா ஆக்க இதுபோல அறிவிப்பை வெளியிடுறாங்க. கூட்டம் அதிகமா இருக்கும்போது, டிக்கெட்டே கொடுக்க முடியலை. இதுல எப்படிப் பயணிகள்கிட்ட ஐடி கார்டு கேட்டு செக் பண்ண முடியும்? இதனால எங்களுக்கும், பயணிகளுக்கும் சண்டைதான் வருது. அப்படியே ஐடி கார்டு வாங்கி பாத்துட்டு டிக்கெட் கொடுக்கிறதுல என்ன பயன் இருக்கு? பாஸ்ல, பயணிகளோட பெயரும் எழுதமாட்டோம். ஐடி கார்டோட நம்பரும் எழுதமாட்டோம். வெறும் முகத்தை மட்டும் பார்த்துட்டு பாஸ் கொடுக்குறதால என்ன பிரயோசனம்? செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் ஒழுங்கா வேலை பாத்தாலே போதும். இந்த அறிவிப்பு எல்லாம் தேவையே இல்லை’’ என்று கொந்தளித்தார்.
இதுதொடர்பாகப் பேசப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஓ-விடம் தொடர்பு கொண்டோம். அவர்கள் போனை எடுக்கவே இல்லை.
ஓர் அறிவிப்பை, மக்களுக்காக அரசாங்கம் சொல்லும்போது உண்மையிலேயே அது, மக்களுக்குப் பயனுள்ளதா அல்லது மக்களுக்குத் தொல்லை கொடுக்குமா என்பதை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
courtesy'vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval