Wednesday, January 11, 2017

தினம் தினம் பாலியல் டார்ச்சர்...! சென்னை ஏர்போர்ட் உயரதிகாரியின் சில்மிஷங்கள்

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் விமான நிலைய உயரதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் கோமதி (மாற்றம்). இவர், சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு பணியாளராக உள்ளார். விமான நிலையத்தில் புனேயை சேர்ந்த முரளிதர் அத்வானி, உதவி பொது மேலாளராக பணியாற்றினார். இவர், கோமதி உள்பட பல பெண்களிடம் எல்லை மீறிப் பழகியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோமதி, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸாரோ முரளிதர் அத்வானிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த கோமதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த சமயத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், கோமதி, தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி உள்ளார். இதன்பிறகு நீதிமன்ற தலையீடு காரணமாக முரளிதர் அத்வானி மீது போலீஸார் எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். 
 இதுகுறித்து கோமதி கூறுகையில், "என்னுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் விமான நிலையத்தில் துப்பரவு பணி கிடைத்தது. நான் ஒரு ஊனமுற்றவர். விமான நிலையத்தில் (ஏ.ஏ.ஐ) உதவி பொது மேலாளர் முரளிதர் அத்வானியால் கடந்த ஓரண்டாக எனக்கு பிரச்னை உள்ளது.

அவருக்கு தமிழ், கொஞ்சம், கொஞ்சம் தெரியும். ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் சரளமாக பேசுவார். ஒருநாள், நான் வேலை செய்து கொண்டு இருந்த போது திடீரென என்னை பெயர் சொல்லி அழைத்தார். அவர் அருகே நான் சென்ற போது 'இந்த ரூம்கள யார் சுத்தம் செய்வா' என்று கேட்டார். உடனே சார், 'நான் உடனே செய்து விடுகிறேன்' என்று தெரிவித்தேன். மறுநாள், மீண்டும் என்னை அழைத்தார். பயத்துடனே அவரது அறைக்குச் சென்றேன். அங்கு என் குடும்பத்தை குறித்து விசாரித்தார். நான் அனைத்தையும் அவரிடம் சொன்னேன். இவ்வாறு என்னிடம் அன்பாகவும், அக்கறையாகவும் பழகியவர், திடீரென ஒருநாள் என்னை அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்ற என்னை 'உடல் வலிக்குது கொஞ்சம் மஜாஜ் செய்து விடு என்றார். நான் தயங்கினேன். ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தினார். வேலையை விட்டு நீக்கிவிடுவதாகவும் மிரட்டினார். அதற்குப் பயந்து அவரது காலை அமுக்கி விட்டேன். அப்போது அவர் என்னிடம் எல்லை மீற முயன்றார். உடனே நான் அவரைக் கண்டித்து விட்டு வெளியே சென்று விட்டேன். இதன்பிறகு சில நாட்கள் என்னை அவர் தொந்தரவு செய்யவில்லை. மாறாக எனக்கு கஷ்டமான வேலையை செய்ய உத்தரவிட்டார். வேறுவழியின்றி அதை செய்தேன். பிறகு என்னை வேலையை விட்டு நீக்குமாறு மேல் அதிகாரிகளிடம் சொன்னார். நான், வேலை செய்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று மேலதிகாரியிடம் கதறினேன்.

அப்போது என்னுடன் வேலைப்பார்க்கும் ஒரு பெண் என்னிடம் பேசினார். 'அத்வானி சாரை அனுசரித்துப் போனால் எந்த பிரச்னையும் இல்லை' என்றார். 'நான் கூட உன்னை மாதிரிதான் முதலில் தயங்கினேன். இப்போது எல்லாம் சரியாகி விட்டது' என்று சொன்னார். ஆனால் அதற்கு என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சமயத்தில் முரளிதர் அத்வானி, என்னிடம் 'உனக்கு தினமும் வேலை வேண்டும் என்றால் என் வீட்டிலும் வேலை செய்ய வேண்டும்' என்று சொன்னார். அதற்கு நான் சம்மதித்தேன். ஏனென்றால் என்னுடன் வேலைப்பார்க்கும் பல பெண்கள் விமான நிலைய அதிகாரிகள் வீட்டில் வேலை செய்வதுண்டு. கடந்த 10.6.2016ல் விமான நிலையத்தில் வேலை முடிந்தபிறகு பொழிச்சலூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருக்கும் போது என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன்.

திடீரென ஒரு ஐடியா வந்தது. 'இன்று வேண்டாம், நாளை வருகிறேன்' என்று அவரிடம் சொல்ல முயல்வதற்குள் என் முன்னால் அவர் ஆடையில்லாமல நின்றார்.  அவரிடம் மீண்டும் இன்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். நடந்த சம்பவத்தை எனக்கு மேலதிகாரியான ஒருவரிடம்  சொன்னேன். அப்போதுதான் முரளிதர் அத்வானி குறித்த முழு விவரமும் எனக்குத் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 20.6.2016ல் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் என்னுடைய புகாரை வாங்கவில்லை. இதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அதற்கும் நடவடிக்கை இல்லை. இந்த சமயத்தில்தான் விமான நிலையத்துக்கு வந்த தமிழசையிடம் விவரத்தைச் சொன்னேன். அவர் உடனடியாக பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் ஜெனிதாவின் போன் நம்பரை கொடுத்து பேச சொன்னார். ஜெனிதாவிடம் முழுவிவரத்தை சொல்லியவுடன் இதுதொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் முரளிதர் அத்வானி மீது பாலியல் தொந்தரவு புகாருக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார் கண்ணீர் மல்க 
 முரளிதர் அத்வானியால் கோமதி மட்டுமல்ல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜெனரல் ஓர்க்ர்ஸ் யூனியனின்   (சென்னை ஏர்போர்ட் கான்டிராக்ட் ஓர்க்ர்ஸ் யூனிட்) செயலாளர் தீரன் கூறுகையில், "கோமதிக்கு ஆதரவாக நான் போலீஸ் நிலையத்துக்கு சென்றதால் என்னையும் முரளிதர்அத்வானி வேலையிலிருந்து நீக்கி விட்டார். தற்போது வேலை இல்லாமல் இருக்கிறேன். மேலும் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மட்டுமே துப்பரவு பணிக்கான கான்டிராக்ட் கொடுக்கப்படும். இதற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட நபர்களிடமே வாங்கச் சொல்வார் முரளிதர் அத்வானி. அவருக்கு உதவியாக விமான நிலையத்தில் உயரதிகாரிகளும், போலீஸ் துறையில் உயரதிகாரிகளும் உள்ளனர். இதனால் கோமதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது ஆசைக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு பல வகையில் தொந்தரவு கொடுப்பார். கடைசி வரை கோமதி போராடியதால் தற்போது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அவருக்கு ஆதரவாளர்களாக இருக்கும் பெண்களைக் கொண்டு கோமதி மீதே பழி போட வைத்தார்.

அவருக்கு வேண்டப்பட்ட பெண் ஊழியரை கார்கோவிற்கு இடமாற்றி விட்டனர். உடனடியாக அவர் வந்ததால்தான் உங்களுக்கு எல்லாம் சம்பளம் என்று சொல்லி விட்டார். பிறகு அவருக்கு வேண்டப்பட்ட பெண், மீண்டும் விமான நிலையத்துக்கு பணியமர்த்தப்பட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பெண்களிடம் நீ இங்கிலீஷ், இந்தி மொழியை படித்தால் உன்னிடம் சரளமாக பேசுவேன் என்று சொல்வார். ஒவ்வொரு பண்டிகையின் போது அந்த பெண்களை ஷாப்பிங்குக்கு அழைத்துச் செல்வார். தற்போது அவருக்கு வேண்டப்பட்ட உயரதிகாரி ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் தன்னை காப்பாற்ற யாருமில்லை என்று முரளிதர் அத்வானியும் சில நாட்களுக்கு முன்பு சூரத்துக்கு இடமாறி சென்று விட்டார். அவருக்கு பொழிச்சலூரில் அடுக்கமாடி குடியிருப்பில் சொகுசு வீடு உள்ளது. அங்குதான் பெண்களை அழைத்துச் செல்வார்"என்றார். 
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, "முரளிதர் அத்வானி மீது புகார் கொடுத்த பெண் எங்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் முரளிதர் அத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். அவரிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளோம்" என்றனர். 
ஜெனிதா கோமதிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர்கள் டைட்டஸ், டி.ஏ.சி.ஜெனிதா ஆகியோர் கூறுகையில், "கோமதிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. நள்ளிரவு நேரத்தில் கோமதிக்கு முரளிதர் அத்வானியிடமிருந்து போன் அழைப்புகள் வந்துள்ளன. அப்போது அவர் பேசும் போது ஐ லவ் யூ என்று சொல்லி உள்ளார். இந்த ஆதாரத்தை போலீஸ் நிலையத்தில் கோமதி காட்டியபிறகும் முரளிதர் அத்வானிக்கு ஆதரவாக போலீஸார் செயல்பட்டுள்ளனர். மேலும் முரளிதர் அத்வானியின் அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல்களில் பேப்பர்களை ஓட்டி மறைத்திருக்கிறார். இது, பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபடும்போது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். தற்போது அவர், இடமாறிச் சென்ற பிறகு அந்த பேப்பர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. போலீஸார் முரளிதர் அத்வானி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் மூலம் மீண்டும் போராடுவோம். முரளிதர் அத்வானியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்"என்றனர். 
இதுகுறித்து முரளிதர் அத்வானியின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
courtesy'vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval