Saturday, January 21, 2017

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மெரினா எழுச்சியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

 ஜல்லிக்கட்டு போராட்டம்ரஹாரி கிராமம், 1897-ம் ஆண்டில் ஒரு காலைபொழுது. இன்றைய நாளில் சரஹாரி பாகிஸ்தானுக்கு சொந்தம். இந்தக் கிராமத்தை குலிங்க்ஸ்டன், லாக்போர்ட் என்ற இரண்டு பெரிய கோட்டைகள் அரணாகப் பாதுகாத்து வந்தன. இந்தக் கிராமம்தான் ஆங்கிலேயர்களின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கியது. இங்கிருந்துதான் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய தகவல்கள் எடுத்துச் செல்லப்படும்.  அன்றைய நாளில் 10000-க்கும் அதிகமான ஆப்கன் படை வீரர்கள் இந்தக் கிராமத்தை தாக்குதல் நடத்தத் துணிந்தனர். கோட்டைகளைச் சுற்றி வெறும் 21 சீக்கியர்களே பாதுகாவலர்களாக இருந்தனர். இந்தப் பாதுகாவலர்களை கடந்தால்தான் கோட்டைகளை முற்றுகையிட்டு அந்தக் கிராமத்தை கைப்பற்றமுடியும். தாக்குதல் தொடங்குகிறது. அதிகாலைப்பொழுதில் ஆரம்பித்த தாக்குதல் மதியம் கடந்து இரவு வரை நீடிக்கிறது. அந்த இரவின் முடிவில் அனைத்துப் பாதுகாவலர்களும் கொல்லப்பட்டு ஆப்கன் படையினர் கோட்டையைக் கைப்பற்றினர். அடுத்தநாள் காலை போர் இழப்புகள் பற்றி கணக்கு எடுத்தபின் ஆப்கன் படைத்தளபதி அனைவரையும் பார்த்து இப்படிச் சொல்கிறார். அந்த 21 பாதுகாவலர்களைக் கொல்வதற்கு நாம் 600 படைவீரர்களை இழந்துவிட்டோம். அப்படியானால் அவர்கள் பலமானவர்களா? அல்லது நாம் பலவீனமானவர்களா? என்று. இந்த விளைவு நாடுபிடிக்கும் ஆசையில் வந்தது. அந்த பாதுகாவலர்கள் போற்றப்படவேண்டியவர்கள். 
இப்போது இந்த நிகழ்வை தமிழர்களின் இன எழுச்சிக்காக கொஞ்சம் மாற்றிச் சிந்திப்போம். நமது தமிழ் கலாச்சாரத்தையும், இயற்கை விவசாயத்தையும் அழிக்க வந்த 500-க்கும் மிகச் சொற்பமான அமைப்பினரைக் கொண்ட இந்த பீட்டாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற நாம் பல லட்சபேர் பல நாட்கள் போராடி வருகிறோம். இப்போது சொல்லுங்கள் நாம் பலவீனமானவர்களா? அல்லது பீட்டா பலமானவர்களா? நிச்சயம் அவர்கள் பலம் வாய்ந்தவர்கள். இல்லையென்றால், இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய நாட்டை, 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டை தன் விருப்பபடி செயல்பபட வைப்பது சாதாரண காரியமா? ஒரு இனத்தின் மேன்மையைச் சிதைக்கும் நோக்கத்தில் செயல்படும் இந்த பீட்டாவை இந்தியாவைவிட்டே வெளியே துரத்த தற்போது நாம் பலநாள் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். உணவு, தூக்கம், சந்தோஷம் அனைத்தையும் மறந்து நமது கலாச்சராத்தைக் காக்கப் போராடி வருகிறோம். ஒரு விதத்தில் இந்த பீட்டாவுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். ஏனென்றால் ஜாதியாலும், அரசியலாலும், மதத்தாலும் பிரிவினைப்பட்டுக் கிடந்த அனைவரையும் 'தமிழன்' என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஒன்று சேர்த்துவிட்டது. இதுநாள் வரை நூறு பேர் ஒன்றிணைவது மட்டும் தான் ஒற்றுமை என நினைத்திருந்த நாம், இப்போதுதான் உண்மையான ஒற்றுமையை உணர்கிறோம். ஒற்றுமையின் பலம் என்ன என்பதையும் உணர்கிறோம். 
போராட்டத்தில் குழந்தை
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், சிறியவர் முதல் பெரியவர்வரை குடும்பம் குடும்பமாக ஒரு மாபெரும் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இதில் எவ்வித சலசலப்பும் ஏற்ப்படக்கூடாது. அரசியல்வாதிகள் யாரும் உள்நுழையக்கூடாது என மிக பெரிய இளைஞர் பட்டாளம் தீவிரக் கண்காணிப்பில் இருக்கின்றனர். தமிழகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தால் இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் அரண்டுபோய் உள்ளனர். போராட்டம் என்றால் கலவரம் மட்டும்தான் வழி என நினைத்திருந்த இந்திய தேசத்துக்கு, உண்மையான காந்தியத்தை இப்போது இந்தியாவுக்கு பறை சாற்றி வருகிறோம். உலகமே தமிழக மக்களைத் தலைநிமிர்ந்து பார்க்கிறது. இதுவே இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 
இளைஞர்களுக்கு எப்போதும் 'அனுபவம் குறைந்தவர்கள், முன்கோபம் அடைபவர்கள், வன்முறைக்கு ஏங்குபவர்கள், போராட்டத்தின் வழியைச் சரியாக நிர்ணயிக்கத் தெரியாதவர்கள்' என்ற பட்ட பெயர்கள் நிறைய உண்டு. மெரினாவின் சாலையில் லட்சகணக்கான மக்கள் திரண்டிருப்பதால் அங்கு பொதுமக்களே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர பலமணி நேரங்கள் ஆகிறது. அப்படி இருக்க வாகனங்கள் மட்டும் எப்படி கூட்டத்தில் விரைவாக செல்கிறது? சாதாரண நாட்க்களிலேய ஒரு ஆம்புலன்ஸ் எம்.ஜி.ஆர். சமாதியிலிருந்து கலங்கரை விளக்கத்துக்குச் செல்ல குறைந்தது 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், போராட்டக்களத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஒரு ஆம்புலன்ஸ் எப்படி 5 நிமிடத்தில் அந்தத் தொலைவைக் கடந்து செல்லமுடிகிறது. இப்படி ஒரு அனுபவமும், கலாச்சார அக்கறையும் இளைஞர்களுக்கு எப்படி வந்தது?
பாதுகாப்பு பணியில் இளைஞர்கள்
இதையெல்லாம் விட ஒரு காட்சி பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு தன்னார்வலர் போராட்டகுழுக்கு உணவளிப்பதற்காக தென்மாவட்டத்திலிருந்து மினி லாரியில் உணவுப்பொருட்களை ஏற்றி வந்திருக்கிறார். வண்டியை சாலையில் நிறுத்தி பொருட்களை போராட்டக்குழுவுக்கு கொடுக்கமுடியாத நிலை. ஏனெனில் உணவுப்பொருட்களை அதிகளவில் கொண்டு வந்திருந்தார். அதனால் வண்டியைப் போராட்டக்குழு அருகில் தான் எடுத்து செல்லவேண்டும். அங்கு அமர்ந்திருக்கும் பெருங்க்கூட்டத்திடம், "சற்று வழி விடுங்கள் உணவுப்பொருட்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு வண்டியை அங்கேய நிறுத்தி விடுகிறேன் போராட்டம் முடிந்த பின்பு வண்டியை எடுத்துக் கொள்கிறேன். மக்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்" என்றார். ஆனால், எவராலும் எழமுடியாத நிலை, நிச்சயம் வழிவிடமுடியாத நிலையும் கூட. இங்கிருந்த தன்னார்வலர்கள், வண்டி இந்தக் கூட்டத்தில் போகமுடியாது எனகூற வந்தவருக்கு உடனே கோபம் ஏற்பட்டுக் கத்த ஆரம்பிக்கிறார். அவருடன் வந்தவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சலசலப்பு அதிகமாகிறது. வயதான பெரியவர்கள் பலர் வந்து கூறியும் சலசலப்புத் தொடர்கிறது. உடனே சில இளைஞர்கள் வந்தார்கள். அனைவரும் அமைதியாக உட்காருங்கள் எனச் சொல்லி உணவுப்பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம், "அண்ணா உங்களின் கோபம் நியாயமானது, உங்களின் உதவும் மனதையும், இன எழுச்சியையும் மதிக்கிறோம். ஆனால் இந்தக் கூட்டத்தில் வண்டி செல்லமுடியாது. பொருட்களைக்  கொண்டு போக   நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்" என்றனர். உடனே அங்கு நின்றிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக உடக்கார வைக்கப்பட்டனர். மக்கள் கூட்டத்துக்கு இடையிடையே இளைஞர்கள் நின்றார்கள். உணவுப்பொருட்கள் அனைத்தும் இளைஞர்களின் கையில் தாவி தாவி சாப்பிடமால் இருந்த போராட்ட இளைஞர்களின் கைகளுக்குச் சென்றது. அரை மணி நேரத்துக்குள் அனைத்து உணவுப் பொருட்களும் அனைவருக்கும் சென்றது. பிரச்னை முடிந்தது. 
தன்னார்வலர்
ஆரம்பத்தில் சிறு விதையாக வந்து இன்று மரமாக நிற்கும் பீட்டாவை வெட்டியெறிய நாம் அனைவரும் களம்புகுந்து இருக்கிறோம். அந்த மரத்தை வெட்டி எறிவது கடிமான வேலைதான். ஆனால் நம்மால் கண்டிப்பாக வேரோடு வெட்டி எறிந்து விடமுடியும். இப்போது தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பயந்துபோய் இருக்கிறார்கள். பீட்டா மட்டும் நமது நோக்கமல்ல. தப்பு செய்யும் அரசியல்வாதிகளைப் பிடுங்கி எறிவதும் நம் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு நல்ல அரசியல் தலைவன் நமக்கு இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்னைகளை நமக்கு வர விட்டிருக்க மாட்டார். தப்பு செய்யும் அரசியல்வாதிகளை எதிர்த்து இதைப்போல கேள்வி கேட்டு அவர்களை ஜெயிலுக்குள் தள்ள மக்கள் முன்வர வேண்டும். போராட்டத்தின் கரு என்ன என்பதை சரியாகப் புரிந்துக்கொண்டு, என்ன செய்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால்.  தவறு செய்யவே அஞ்சும் நிலை ஏற்படும்.  
போராட்டத்தில் தமிழக மக்கள்
இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதையும் மீறி, தமிழனின் தன்மான பிரச்னையாகவும் மாறிவிட்டது. இதே வேகத்தில் நல்ல அரசியல் உருவாக, விவசாயம் காக்க, மரம் வளர்க்க, தண்ணீர் தட்டுப்பாடை தவிர்க்க, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க, நாம் உறுதி கொள்வோம் எனில் தமிழன் உலகத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாவன். இது எப்படி சாத்தியமாகும் என நீங்கள் நினைப்பீர்களாயின்..!
courtesyvikadan







No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval