Thursday, February 26, 2015

வெளிநாட்டு மாப்பிள்ளையும், இளவுகாக்கும் பெண் கிளியும்


MUSLIM-Couples-wallpaper-image-pics-2-[heart-touching-wallpapers ...திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அணைவரும் 
1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.( அனைவரின் மனதும் ஒரு கணம் குமுரும்)

சுமார் 4 வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…...

“உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,
அயல்நாட்டில் வேலைசெய்பவனை கட்டிக்கொடுத்தார்கள் உறவுகள்!
அவள் மனதாய் நான்”

திரும்பி வந்துவிடு என் கணவா….
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

என்மகளின் மாப்பிள்ளை வெளிநாடு ஒன்றில் 
பெரியபதவியில் இருக்கிறார் 
என்று பெருமை பேசுபவர்களிடம் 
சொல்ல முடியாதவைகள் 
நிறையவே இருக்கிறது கணவா!!

கணவனோடு ஒரு மாதம்…
கனவுகளோடு பதினொரு மாதமா….???
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்……..
வருடமொருமுறை மட்டும் எனக்குக் கணவன்…

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது எனக்கான வரமா….? சாபமா….?
கண்ணாடிமுன் நின்று 
மெய்யாய் முகச்சாயம்பூசி
பொய்யாய் புன்னகைக்கும்போது 
என்கண்ணீரை கண்ணாடி தடுக்கவில்லையே கணவா 
இது வரமா? சாபமா?

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்,
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,
கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
அழுவதும்… அணைப்பதும்…
கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
இடைகிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா
“அடி கள்ளி “.
இவையெல்லாம் ஒரு மாதம் தந்துவிட்டு…
எனைத் தீயில் தள்ளி
வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாயே…
என் கணவா…!

கணவா – எல்லாமே கனவா?

நான் தாகத்தில் நிற்கிறேன்,
நீ கிணறு வெட்டுகிறாய்….!!
நான் மோகத்தில் நிற்கிறேன்,
நீ விசாவை காட்டுகிறாய்.
நியாயமா….???

முப்பது நாள் சந்தோசத்தில்
மூன்றுநாள் மதவிலக்காய் கழிந்துபோக
மீதிநாட்கள்,
ஆடம்பர வாழ்க்கை,
உல்லாச உறவு,
சுருக்கமாய் சில உறவுகளோடு மட்டும்
சுகம் விசாரிக்கும் பாசாங்கு வாழ்க்கை
எனக்கு புளித்து விட்டது கணவா….!!

தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா…?

எப்போதாவது வருவதற்கு நீ என்ன 
கரடிகாணும் பிறையா…??
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?

E-Cash வரும், பாசம் வருமா…?
பணம்தரும் ATM, முத்தமாவது தருமா….???
நீ இழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிகமாகிவிட்டதால்,
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?

பாலைவனத்திலும் AC யினுள் நீவாழ,
மார்கழியிலும் வறண்டது
என்வாழ்வு மட்டுமே கணவா….!

திரும்பி வந்துவிடு என் கணவா,
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…!!
விட்டுக்கொடுத்து….
தொட்டுப்பிடித்து…
தேவை அறிந்து…
சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து…
எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு…
தூங்குவதாய் உன் நடிப்பு…
விழித்துவிடு கணவா!
விழித்து விடு…!!

வார விடுமுறையில் பிரியாணி….
காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படிக் காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்,
என் கணவா….!!

ஈச்சமரம் சாய்ந்து நீ அனுப்பிய புகைப்படம் 
அந்தமரமாய் நான் இருக்கவெண்ணி 
வெதும்பும் என்மனம்..!!

வந்துவிடு கணவா வந்துவிடு….
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே என் கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல்,
விவாக ரத்து செய்துவிட்டுப்போ…!!!

நானும் கண்ணகியாகவேண்டும்
ஊர்ஊராய் எரிப்பதற்கு அல்ல….!!!

நாடுநாடாய் சென்று 
கடவுச்சீட்டு காரியாலயங்களை 
மட்டும் எரிப்பதற்கு….!!!
சுமார் 4 வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval