Monday, February 2, 2015

வைராக்கிய பெண்மணி பிரியா ஷாம்வாலுக்கு ஒரு சல்யூட் ....!

நாட்டிற்காக எதிரியுடன் நடைபெற்ற சண்டையில் இறந்து போன இளம் ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர், கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளில் கடுமை யான பயிற்சி எடுத்துக் கொண்டு அவரும் ஒரு ராணுவ அதிகாரியாகி இருக்கிறார். நடந்த சோகங்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியும் ராணுவ அதிகாரியாகி இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறையாகும். இந்த வைராக்கிய பெண் மணியின் பெயர் பிரியா ஷேம்வால்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர், கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது அமீத் ஷர்மா என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். அமீத் ஷர்மா ராணுவத்தில் ராஜபுத்திர பிரிவின் தலைவராக இருந்தார். பிரியா ஷேம்வால் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்துவிட்டு டேராடூனிலேயே கோச்சிங் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பகுதியில் எதிரிகளோடு நடைபெற்ற சண்டையி இளம் அதிகாரியான அமீத் ஷர்மா இறந்து போனார்.
அப்போது பிரியா ஷேம்வாலுக்கு வயது 24 தான். துக்கம் விசாரிக்க வந்த ராணுவ அதிகாரி, பிரிய விரும்பினால் ராணுவத்திற்கு அவரது சேவையை வழங்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால் பிரியா தெளிவாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுத்தார் தானும் ராணுவத்தில் சேரவேண்டும் என்று. இதற்கு முக்கிய காரணம் கொஞ்ச காலமே வாழ்ந்தாலும் கணவர் நிறைய பேசியது ராணுவத்தைப் பற்றிதான். இதை எல்லாம் யோசித்து ராணுவத்தில் சேரும் முடிவை தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டார். சாதாரண பிரியா ஷேம்வாலாக உள்ளே நுழைந்தவர் எல்லாம் நல்லபடியாக முடிந்து லெப்டினன்ட் பிரியா ஷேம்வாலாக பெருமையுடன் பட்டயம் பெற்றார்.
இன்னும் சில நாட்களில் சேவையை தொடர நாட்டின் ஏதோ ஒரு எல்லையில் பணியாற்ற போகிறேன்,என் பெற்றோருடன் குழந்தை நன்றாக படித்துக்கொண்டு இருக்கிறாள் ஆகவே அவளை பிரிந்துதான் வேலை பார்க்கவேண்டும் பராவாயில்லை என்னைவிட, என் குழந்தையைவிட, நாடு பெரியதல்லவா என்றார்.
வைராக்கிய பெண்மணி பிரியா ஷாம்வாலுக்கு ஒரு சல்யூட் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval