Monday, April 17, 2017

இனி இந்தியில் மட்டுமே உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர்!

இனி இந்தியில் மட்டுமே உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர்!
குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த உயர் அதிகாரிகள் இந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற அரசு மொழிக்கான குழு குடியரசுத் தலைவருக்கு அளித்திருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வலுவான பிணைப்பு பாலமாக திகழும் வண்ணம் இந்தியை எப்படி மேலும் பிரபலமாக்குவது உள்ளிட்டவை குறித்த 117 பரிந்துரைகளை 6 ஆண்டுகளுக்கு முன்பு இக்குழு அனுப்பியிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையை சேர்ந்த அனைவரும் இந்தியில் பேசிவரும் நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலால் ஜூலை மாதம் புதிதாக பதவியேற்கவுள்ள குடியரசுத் தலைவர் இந்தியில் உரையாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

விமானங்களில் இந்தி செய்தித்தாள்களை வைப்பதுடன், விமான டிக்கெட்களிலும் இந்தியில் அச்சிடக் கோரிய பரிந்துரையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 8வது முதல் 10வது வரை இந்தியை கட்டாயப் பாடமாக்கும் முறையை நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுத்துறை பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களில் இந்தியில் பெயர் எழுத வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், அனைத்து அரசு மற்றும் அரசுடன் கூட்டிணைவு அடிப்படையில் நடைபெற்றுவரும் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் பெயர்களை இந்தியிலும் எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பணிகளை பெற குறைந்தபட்ச இந்தி மொழியறிவு அவசியம் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

2011ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின் மீது குடியரசுத் தலைவர் தற்போது முடிவெடுத்துள்ளார்.
News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval