Thursday, December 15, 2016

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை

Image result for alcohol bottleபுதுடெல்லி,நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.5 லட்சம் விபத்துகள்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தமிழகத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் இந்த பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.இந்த மதுக்கடைகளை மூட வழிசெய்யும் வகையில் கலால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசுக்கு அறிவுறுத்துமாறும் அதில் கோரப்பட்டு இருந்தது.குடித்து வாகனம் ஓட்டுவதால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்ததாகவும், அதில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், இதைவிட 3 மடங்கு அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரமும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.மேல்முறையீட்டு மனுக்கள்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பஞ்சாப் மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தன. இதை எதிர்த்து பஞ்சாப், அரியானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தன.இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 7–ந்தேதி தீர்ப்பை நிறுத்திவைத்து இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–உரிமம் நீட்டிக்கக்கூடாது

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வருகிற மார்ச் 31–ந்தேதிக்குள் மூட வேண்டும். அவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள உரிமத்தை மார்ச் 31–ந்தேதிக்குப்பின் நீட்டிக்கக்கூடாது. தற்போது இருக்கும் உரிம காலம் வரை மட்டுமே இந்த மதுக்கடைகள் செயல்பட வேண்டும். புதிய கடைகளுக்கு உரிமம் எதுவும் வழங்கக்கூடாது.நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். 500 மீட்டருக்கு அப்பால் உள்ள மதுக்கடைகளுக்கு செல்லவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தனியாக வழி அமைக்கக்கூடாது.விளம்பரங்களுக்கு தடை

நெடுஞ்சாலைகளில் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அருகில் உள்ள மதுக்கடைகள் தொடர்பாக வைக்கப்பட்டு இருக்கும் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த தீர்ப்பில் உள்ள அம்சங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒரு மாதத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.பஞ்சாப் அரசுக்கு கண்டனம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பது குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்ட பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, ‘மதுக்கடைகளுக்கு நீங்கள் (பஞ்சாப்) எவ்வளவு உரிமங்களை வழங்கியுள்ளீர்கள். ஏனெனில் மதுபான ஆலை உரிமையாளர்கள் மிகுந்த அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கலால் துறை, கலால் மந்திரி, மாநில அரசு அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர். மதுவால் ஒருவர் உயிரிழந்தால் வெறும் ரூ.1½ லட்சம் மட்டும் இழப்பீடு வழங்குகிறீர்கள், அவ்வளவுதான். இதில் சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒரு நிலைப்பாட்டை நீங்கள் நிச்சயம் எடுக்க வேண்டும்’ என்று கோபமாக உரைத்தனர்.நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பதற்கு மாநில அரசுகளால் தகுந்த காரணம் எதுவும் கூற முடியாது என்று கூறிய நீதிபதிகள், சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் சுமார் 1½ லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மது விற்பனையை தடை செய்யும் நோக்கில் மாநில அரசுகள் தங்கள் அரசியல் சாசன கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

முன்னதாக தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி பா.ம.க. சமூக நீதிப்பேரவை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2012–ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு கடந்த 2013–ம் ஆண்டு உத்தரவிட்டது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டும் மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே சுப்ரீம் கோர்ட்டு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


--தினத்தந்தி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval