Friday, July 1, 2016

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
கொலையாளி பொறியியல் பட்டதாரி
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த பண்பொலி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரே சுவாதியை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் பதுங்கியிருந்த ராம்குமாரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து இன்று (ஜூலை 1ம் தேதி)நள்ளிரவில் கைது செய்ய முயன்றனர்.
கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
இதனிடையே, ராம்குமாரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது அவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. கழுத்து அறுபட்ட நிலையில், ராம்குமாரை மீட்ட போலீசார் செங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஒருதலைக் காதலால் நிகழ்ந்த பயங்கரம்
நெல்லையில் பிடிபட்டுள்ள ராம்குமார், மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சூளையில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
8 நாட்களில் பிடிபட்டான்
இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இளம்பெண் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மர்மநபர் ஒருவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலை சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் உருவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றியிருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இதன் அடிப்படையில் அவனது உருவத்தை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டனர். இந்நிலையில், கொலை நடந்து 8 நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளி நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval