Friday, April 24, 2015

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி

Madras High Courtதமிழகத்தில் உள்ள 1,567 காவல் நிலையங்களிலும் 5 ஆண்டுகளில் சிசிடிவி கேமராக்கள் (கண்காணிப்புக் கேமராக்கள்) பொருத்தப்படும் என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை டிஜிபி சார்பில் ஐ.ஜி (நிர்வாகம்)டேவிட். தேவாசீர்வாதம் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், “முதல் பகுதியாக 251 காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது புதிய திட்டம் என்பதால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர, போலீஸ் படையை நவீனப்படுத்துவதற்கு வழங்கப்படும் நிதியை மத்திய தற்போது குறைத்துள்ளது. இருந்தாலும் கிடைக்கும் நிதியை வைத்து தமிழக அரசு அந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. மீதமுள்ள காவல் நிலையங்களில் ஆண்டுக்கு 263 காவல் நிலையங்கள் வீதம் ரூ.6.3 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “காவல் துறையை நவீனப்படுத்துவதற்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. நவீனமயமாக்கல் என்பது இன்று அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுக்கவும், சட்ட-ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறை நவீனமயாக்கல் செய்யப்பட வேண்டும். எனினும், காவல்துறை ஐ.ஜி தாக்கல் செய்துள்ள பதில் மனு திருப்தியளிப்பதால் இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ், ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் ‘பாடம்’ நாராயணன் ஆகிய இருவரும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
அதில், “விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகின்றனர். இதில் சிலர் இறக்கவும் செய்கின்றனர். இது போன்று சம்பவங்களை தடுக்க காவல் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய கண்காணிப்புக் கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.


இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, “1,567 காவல் நிலையங்களில் தற்போதுதான் 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 6-ல் ஒரு பங்கு ஆகும். இதற்கே மூன்று ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று மீதமுள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைய 18 ஆண்டுகள் ஆகுமா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval