Monday, November 2, 2015

தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் !?


தமிழு எப்டி இருக்கீங்க பிரதர்.! ஹவ் ஆர் யு... உங்கள இப்பவல்லாம் அதிகமா பாக்கவே முடியல.? ரொம்ப பிசியாக்கும்.!?


ஏன்டா தம்பி இங்கிலீசு என்னைய பாத்தா உனக்கு இலிச்சவாயெனா தெரியுதா. ஏன்டா வெறுப்பேத்துரே... நீ வந்துதான் என்னய ஜனங்க ஒழுங்கா பேசவுடாம நசிக்கிப்புட்டியே !

அட ஏன் பிரதர் கேக்குறே...இங்கமட்டும் என்னா வாழுதாக்கும். உன் ஆளுங்க வந்து என்னய நுனிநாக்கால பேசுறதா சொல்லி என்னட வார்த்தைய செதச்சி என்னட கௌரவம், மரியாதைக்கே வேட்டு வச்சிடுவாங்க போலிருக்கே. காலேஜி போய் பெரியபெரிய படிப்பெல்லாம் படிக்கிறாங்க என்னய சரியா பேசத்தெரிய மாட்டேங்குதே பிரதர். என்னய முழுசா தெரிஞ்சிகிட்டு மொறயா பேசுரவங்களவிட அரகுறையா தெரிஞ்சிகிட்டு ஸ்டைலுக்காக பேசுறவங்க தான் அதிகமா இருக்காங்க பிரதர்.

நீ என்ன சொல்றே நெஜமாவா சொல்றே. நாகூட என்ன நெனச்சேன்டா காலம்போர போக்கப்பாத்தா நம்மள மட்டும் பேசக்கத்துக்கிட்டு ஒலகத்துல எங்கேயும் போயி பொலைக்க முடியாது. சரி ஒன்னையும் சேத்து கத்துகிட்டு போவட்டும்ண்டு நெனச்சேன். நீ என்னடாண்டா இப்புடி ஒரு குண்டெ தூக்கி திடீர்ன்டு போடுறே ! அப்போ இந்த மக்களுங்க ரெண்டுங்கெட்டத்தனமாத்தான் இருக்காங்களா.?

ஆமா பிரதர் உங்க ஆளுங்க நெறையபேருக்கு எம்மொழிய பிழையில்லாம சரியா பேசத்தெரிய மாட்டேங்குது. சும்மா பாக்குறவங்க கவர்ச்சிக்காக பப்ளிக்ல பந்தாவுக்காக என்னய அள்ளி ஊத்தி உடுறாங்க எனக்கு தாங்கமுடியல. என்ன செய்றதுண்டு ஒன்னும் புரியல பிரதர்.

என் நெலமையே விட ஒன்நெலமெ ரொம்ப மோசமாவுல தெரியுது. என்நெலமெ என்னடாண்டா என்னுடைய பழைய வார்த்தைகள் எதுவுமே இப்போ உள்ள தலைமுறைக்கு சுத்தமா எதுவுமே தெரியாம போச்சு. சின்ன சின்ன வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் தெரியாம தமிழையே தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லவேண்டியதா இருக்கு. அந்த பழைய வார்த்தைகள யாரும் சொல்லிக் கொடுப்பதாதெரியல.. இதைவிட எனக்குவந்த கொடுமைய என்னத்த சொல்றது.

எனக்கு உன்னய நெனச்சா பரிதாபமாத்தான் இருக்கு பிரதர். உன்னய எல்லாரும் நல்லாவெ ஏமாத்துறாங்க பிரதர். தமிழு தமிழுன்னு ஒம்மேல பாசங்காட்டுறதா நடிச்சிகிட்டு அவங்க வீட்டு கொழந்தைங்கள ஏம்மொழிய கத்துக்கத்தான் ஏம்மொழி சொல்லிக் கொடுக்குற ஸ்கூல்ல சேத்து விடறாங்க.

என்னய என்னா பண்ண சொல்றே.! எல்லாம் ஊருக்குதான் உபதேசம் பண்றாங்க. ஏம்மேல உண்மையான அக்கறை யாருக்குமே இல்ல. அவங்க அவங்க வயறு நெறஞ்சா போதுமுண்டு நெனக்கிறாங்க. என்னய வச்சி ரொம்ப அரசியல் பண்றாங்க. நான் ரெண்டுங்கெட்டதனமா நல்லா மாட்டிக்கிட்டேன். எனக்கு ஒரு வழி சொல்லேன்.

உனக்கு... ஒரு வழி சொல்லவா பிரதர்... பேசாம என்னோட வந்து சேர்ந்துடுங்க பிரதர். நாம ஒரு கூட்டணி மொழியா ஆரம்பிப்போம். ரெண்டு மொழியையும் கலந்து பேச சொல்லி மக்கள்ட்டே எடுத்து சொல்வோம். நாம ரெண்டுபேருக்குமே மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்ப்பு இருக்கு. என்ன பிரதர்உங்களுக்கு சம்மதமா.?

நீ என்ன விளையாடுரியா.? கொஞ்சநஞ்சம் எம்மேல இருக்குற மரியாதைக்கும் நீ வேட்டு வச்சிடுவே போலிருக்கே..? நீ சொல்ற மாதிரி செஞ்சா மக்கள் என்னய காறிதுப்பமாட்டாங்க.!? அப்பறம் நா எதுக்கு செம்மொழிண்டு பேருவாங்கணும்.! அப்புடி ஓங்கூட கூட்டு வச்சிதான் என்னய காப்பாத்திக்கனும்ண்டு எனக்கு ஒன்னும் அவசியமில்லே. இன்னக்கி இல்லேன்னா ஒருநாள் எம்மக்கள் என்னய புரிஞ்சிப்பாங்க. அப்பொ என்னய விட்டுக் கொடுக்காம நடந்துக்குவாங்க அதுக்குமேலே என் தலைவிதி எப்புடியோ அப்புடி நடந்திட்டு போகட்டும். ஆனா நா என்னா கேட்டுக்கிர்றேன்னா என்னய பரப்பலேன்னாலும் பரவாயில்லே. தயவுசெய்து என்னயவச்சி யாரும் அரசியல் பண்ணாம இருந்தால் சரி.

சரி பிரதர் மனசெ தேத்திக்குங்க. நா கிளம்புறேன்.

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval