Friday, November 6, 2015

தாஜ் டிஜிட்டல்

இந்து ,பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே.மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான ,சரிசமமற்றவேறுபாடுகளுக்கு ,சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் .
பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் ,வன்முறைகள்,தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து , அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும் ,தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர் .
கிறித்தவர்கள் இந்த கூட்ட்டமைப்பில் சேர்ந்த பொழுது ,மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர் . அவர்களை இஸ்லாம் 'People of the book' (Bible )என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது .
ஒரே ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வன்முறையை முன்னிருத்தாதவர் . மெதினாவிலிருந்து மெக்காவுக்கு தனது மக்களோடு உயிருக்கு ஆபத்தான சூழலில் நிராயுதபாணியாகச் சென்று போரில் வெல்லமுடியாத மெக்கா மக்களை வென்றெடுத்தவர்.
வன்முறையை அல்ல அமைதியை ,பேரன்பை ,கருணையை ,சமதர்மத்தை முன்னிருத்தியவர் . ஜிகாத் -புனிதப்போருக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை .
பெண்களுக்கான சுதந்திரத்தை,கல்வியை ,சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர் . எளிய வாழ்வையும் ,சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது . ஏழை ,பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive ) இருக்கிறது .
இன்று மத அடிப்படை வாதிகள் முன்னிருத்துகிற இஸ்லாத்துக்கும் ,உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . தாலிபான்களும் ,ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடூரமான அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும் ,அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .
உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது . அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மதஅடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது .
இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது.
இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது . மதத்தை (எந்த மதமானாலும் )அரசியல் ,பொருளாதார சுயநலனில் இருந்து விடுவிப்பதிலே தான் இந்த உலகின் அமைதி அடங்கியிருக்கிறது தாஜ் டிஜிட்டல்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval