Wednesday, November 11, 2015

சொத்து பத்திரத்தில் பிழை திருத்த என்ன செய்ய வேண்டும்?

201412
மாறுபாடுகளுடன் சொத்தினை விற்பனை செய்ய தாங்கள் முயற்சி செய்யும்போது, பல கேள்விகளை சொத்தை வாங்கும் நபர் எழுப்பக்கூடும்!
என் பத்திரத்தில் பிழையா?
நோ சான்ஸ்.
இருக்கவே இருக்காது என தைரியமாக இருப்பவரா நீங்கள்?
இதோ உங்களுக்காக சில கேள்விகள்…
1. முதலில் உங்கள் பத்திரத்தில் உங்களின் முழுப் பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, வயது போன்றவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
2. அதேபோல உங்கள் சொத்தினை விற்பனை செய்தவரின் விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் ஒத்து போகின்றனவா?
3. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம் போன்றவைகள் சரியாகக் குறிப்பிடப் பட்டுள்ளனவா?
4. உங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களான சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண், மற்றும் நான்கு மால் எனப்படும் நான்கு எல்லைகள் அதன் அளவுகள் அனைத்தும் மூல ஆவணத்துடன் சரியாக உள்ளனவா?
5. உங்களுக்கு விற்பனை செய்த நபர், அந்த சொத்தினை கிரயம் பெற்றபின்பு, அந்த சொத்தின் தன்மை மாறி இருப்பின் அதன் விவரங்களோ அல்லது சொத்துக்காக புதிய விலாசம் கொடுக்கப் பட்டிருந்தால் அது குறித்த விவரங்களோ தெளிவாக உங்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
மேலே கூறப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் பத்திரம் பதிவு செய்யும் முன் கவனமாகப் பார்க்க வேண்டும். இவற்றில் எதுவும் தவறாகக் குறிப்பிடப் பட்டிருந்தால், அதனை நிவர்த்தி செய்யும்விதமாக, உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி கொடுத்த அதே நபரால் அந்தப் பிழையைத் திருத்தும் விதமாக ஏற்படுத்தி தரப்படும் ஆவணம்தான் ‘பிழை திருத்தல் பத்திரம்’ (Rectification Deed) எனப்படுகிறது.
நான் சொத்து (மனை / வீடு) வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது; வீடும் கட்டி விட்டேன். இப்போது சிறிய பிழை உள்ளதென தெரிகிறது. இந்த பிழை திருத்தல் பத்திரம் அவசியமா என்றால், உங்களுக்கு விற்பனை செய்திருந்த நபர், பிழையைத் திருத்தி பத்திரம் பதிவு செய்துதர தயாராக இருக்கும்பட்சத்தில், அந்தப் பிழையை சரிசெய்து கொள்வதுதான் நல்லது. இல்லையென்றால் பத்திரத்தின் சொத்து விவரமானது, பட்டாவுடன் பொருந்தி வராது. பத்திரமும், பட்டாவும் உங்கள் சொத்தின் அனுபவ அளவுகளுடன் பொருந்தாது.
இந்த மாறுபாடுகளுடன் அந்த சொத்தினை விற்பனை செய்ய முயற்சி செய்யும்போது பல கேள்விகள் சொத்தை வாங்கும் நபர் எழுப்பக்கூடும். சொத்தின் விலை நிர்ணயத்தில், இந்த விஷயம் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தப் பிழையானது ஆவணத் தயாரிப்பின்போது தவறான தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப்பத்தினாலோ, லே அவுட் பெயர் அதன் அங்கீகாரம் குளறுபடி களினாலோ ஏற்பட வாய்ப்புள்ளது.
சொத்து விஸ்தீரணத்தின்(அளவு) வேறுபாடு குறித்த மாற்றம் தவிர, வேறு எந்த ஒரு திருத்தத்துக்கும் அதிக முத்திரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதிக விஸ்தீரணம் மாற்றப்பட்டால், வித்தியாசப்படும் விஸ்தீரணத்தின் முத்திரைத் தீர்வையாக, அரசு நிர்ணயம் செய்துள்ள வழிகாட்டி மதிப்பீட்டின்படி (Guide Line Value) கட்டணம் செலுத்த வேண்டும்.
கண்டுபிடிப்பதில் அதிக காலதாமதம் இருந்து, அப்போதைய அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப் பட்டிருப்பின், தற்போதைய மதிப்புக் கான வித்தியாசப்படும் முத்திரைத் தீர்வையை உரிய கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.
எனவே, பத்திரம் எழுதியபிறகு கூடுதல் கவனத்துடன் படித்துப் பார்ப்பதும், மூலப் பத்திர விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று கவனிப்பதும் வீண் செலவுகளையும் அலைச்சலையும் தவிர்க்க உதவும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval