Sunday, November 15, 2015

அடையாள அட்டையில்லாமல் ஐகோர்ட்டில் இன்று முதல் யாரும் நுழைய முடியாது

Madras High Court
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று முதல், அடையாள அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது. ‘சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு பொறுப்பை, சி.ஐ.எஸ்.எப்., வசம் ஒப்படைக்க, 16 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு, தமிழக அரசு செலுத்தியது. அதன்படி, உயர் நீதிமன்ற பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப்., படை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய என்.எஸ்.சி. போஸ் சாலையில் சென்னை பார் அசோசியேஷன் ‘கேட்’ மற்றும் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலில் ஒரு வழி திறந்து விடப்படுகிறது.
பிரதான நுழைவாயில்களில், ‘மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர்’ வசதிகள் உள்ளன. எந்தெந்த வழியாக, யார் யார் வரலாம் என்பது குறித்து, உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யாராக இருந்தாலும் அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது.
வழக்கறிஞராக இருந்தால், பார்கவுன்சில் அடையாள அட்டை அல்லது வழக்கறிஞர் சங்க அடையாள அட்டையை காட்ட வேண்டும். நீதிமன்ற ஊழியர்களும், அடையாள அட்டை காட்ட வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் என்றால், அவர்கள் வழக்கறிஞர்களின் கடிதம் மூலம் நுழைவாயிலில் அனுமதி சீட்டு பெற்று, பின்னர் உள்ளே வர வேண்டும்.
நீதிமன்றத்துக்குள் வர, மூன்று வழிகள் உள்ளன. மேலும், இரண்டு வழிகளுக்கு ஏற்பாடு செய்கிறோம். ஆண்கள், பெண்களுக்கு என தனி ‘பூத்’கள் இருக்கும். அடையாள அட்டை இருப்பவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொருட்கள், பைகள் சோதனை செய்யப்படும். விமான நிலைய நடைமுறை, இங்கும் பின்பற்றப்படும். மூன்று ‘ஷிப்ட்’ அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், நேற்று முதல் பாதுகாப்பு பணியினர் உயர் நீதிமன்ற பாதுகாப்பை தங்கள் பொறுப்பில் கொண்டு வந்துள்ளனர். இன்று முதல் அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval