Friday, March 18, 2016

கலாமுக்கு ‘நோ’ சொன்ன தேர்தல் ஆணையம்: பொங்கும் பொன்ராஜ்!

ponraj1தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையொட்டி தலைவர்களின் படங்களை மறைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் படமும் தப்பவில்லை என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், அப்துல் கலாம் மீதுள்ள மரியாதையால், ‘கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்’ என்ற பெயரில் போர்டு ஒன்றை வைத்திருந்தனர். ‘இந்தப் பலகை தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது’ என்று சொல்லி, தேர்தல் ஆணைய பணியாளர்கள் சிலர், பிளாஸ்டிக் பையால் கலாம் முகத்தை மூடினர். இதனால் அதிருப்தியான ஆட்டோ டிரைவர்கள், ‘ உலகம் போற்றும் உன்னத மனிதர் கலாம். அவர் முகத்தை எப்படி மறைக்கலாம்?’ என சண்டைபோட, ஆணையத்தின் ஊழியர்களோ, ‘ கலாம் பெயரில் அவரது உதவியாளர் பொன்ராஜ் கட்சி நடத்தி வருகிறார். ஆணையத்தின் விதிப்படிதான் கலாம் முகத்தை மறைக்கிறோம்’ என பதில் கூறியுள்ளனர். இதைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள கலாமின் படத்தை மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
” கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், நீங்கள் கட்சி தொடங்கியதால் இப்படியொரு நிலை வந்துவிட்டதே?” என்ற கேள்வியை அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சியின் தலைவர் பொன்ராஜிடம் கேட்டோம்.
” இப்படியொரு சம்பவத்தைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு இது தேவையில்லாத வேலை. நோட்டீஸ் ஒட்டக் கூடாது. சுவர் விளம்பரம் எழுதக் கூடாது என்று சொன்னால் சரி. அதைவிட்டுவிட்டு உலகமே மதிக்கும் தலைவரை இப்படி பிளாஸ்டிக் பை போட்டு மறைப்பது அவசியமற்றது. காந்தி, காமராஜர், அண்ணாதுரை ஆகியோரது படங்களை மறைத்தாலும், மக்கள் மனதில் இருந்து இந்தத் தலைவர்களை அகற்ற முடியாது. அதைப்போலத்தான் அப்துல் கலாம் அவர்களும். மறைப்பதால் அது என்ன? என்ற கேள்விதான் மக்கள் மனதில் வரும்.
உலகிலேயே அதிகப்படியான போட்டோக்கள் எடுக்கப்பட்டது கலாம் கூடத்தான். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் அவரோடு படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்தப் படங்களை மறைத்துவிட முடியுமா என்ன? தேர்தல் கமிஷன் தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது” என்றவரிடம், ” தேர்தல் வேலைகள் எப்படிப் போகிறது?” என்றோம்.
“இப்போது வரையில் பத்தாயிரம் பேர் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். மிஸ்டு கால், ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். தினமும் 1,500 மிஸ்டு கால் வருகிறது. ஏப்ரல் முதல்வாரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம்” என்றார்.
இங்கேயும் மிஸ்டு காலா?

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval