தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுதான் தீர்வு என்று சொல்லப்படுகிறது. நதி நீர் இணைப்பு குறித்து பல ஆண்டு காலமாகவே பேசப்படுகிறது. நேரு காலத்தில் பெரிய நதிகளான பீயாஸ் - சட்லெஜ் நதிகள் பெரிய கால்வாய் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. இதேபோல் சட்லெஜ் நதியையும் யமுனையையும் இணைப்பதற்காக ஹரியானா , பஞ்சாப் மாநிலங்களில் சில மாவட்டங்களில் கால்வாய் வெட்டப்பட்டது. பின்னர், காலிஸ்தான் பிரச்னையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கு பின், இந்தியாவில் இரு நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லாத விஷயமாக கருதப்பட்டது. ஆனால்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளை இணைத்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ;அதுவும் ஒரே ஆண்டுக்குள். ஆந்திராவைப் பொறுத்த வரை கிருஷ்ணா, கோதாவரி நதிகள் முக்கியமானவை. மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைத்து 1,465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. கிருஷ்ணா நதி 1,300 கி.மீ நீளம் கொண்டது. இந்த நதி மகாராஷ்ட்ரா ,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.
ஆந்திராவில் ராயலசீமா வறட்சி பாதித்த பகுதி. அதே வேளையில், தென்னிந்தியாவிலேயே கோதாவரி நதியில் இருந்துதான் அதிகமானத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி கடலில் கொண்டு சேர்ப்பது 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர். கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைப்பதால், ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். இதனால்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளையும் இணைக்கத் திட்டமிட்டார். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பட்டீசீமா பகுதியில் இருந்து போலாவரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, கிருஷ்ணா நதியில் சேர வழி ஏற்படுத்தப்பட்டது. பணிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. ஒரே ஆண்டுக்குள் அனைத்தும் நிறைவடைந்தன. பணிகள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆந்திர முதல்வர் அதனை தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவிலேயே இவ்வளவு விரைவாக ஒரு நதி மற்றொரு நதியுடன் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.
கடந்த 2015 மார்ச் 29ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்தத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தற்போது இந்த சாதனை 'லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோதாவரி நதியில் இருந்து கடலில் கலக்கும் 80 டி.எம்.சி தண்ணீரை ஆந்திரா மிச்சப்படுத்தியுள்ளது.
vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval