Friday, March 31, 2017

இயற்கையான தங்கபஸ்பம்... செம்பருத்தி! சித்தர்களின் ரகசியம்

செம்பருத்தி
செம்பருத்தி, செம்பருத்தி பூவப் போல பெண் ஒருத்தி...’ இது, அந்தக்கால திரைப்படப் பாடல். பெண்களை செம்பருத்திப்பூக்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பதில் இருந்தே இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்
 
செம்பருத்தி... இதை செவ்வரத்தை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இது இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் கிழக்கு ஆசியா; மலேசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. அதனாலோ என்னவோ சீனா, இது எங்களுக்குச் சொந்தமானது என்று கூறுகிறது. இதுஒருபுறமிருக்க, செம்பருத்தி என்பது வேறு, செம்பரத்தை என்பது வேறு என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. செம்பருத்தி என்பது பருத்தியில் ஒருவகை. அது இப்போது அழிந்து போய் விட்டது. செம்பரத்தை என்பதே இன்றைக்கு செம்பருத்தி என அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக்குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.
மிக முக்கியமாக இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம். 
4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். 
செம்பருத்திப்பூவை மணப்பாகு செய்து சாப்பிடலாம். இதன்  இதழ்களுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வெயிலில் காய வைக்க வேண்டும். மாலையில் எடுத்து நன்றாகப்பிசைந்து மறுநாள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் பிசைந்து சாறு பிழிய வேண்டும். அதை அடுப்பில் வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இதை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீர் சேர்த்துக் குடிக்கலாம்.
செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது. 
இவை தவிர உஷ்ணம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு அமைதியையும் தரக்கூடியது செம்பருத்தி.
செம்பருத்திப் பூ
மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகளும் சரியாகும்.
உரிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு செம்பருத்திப்பூக்களை நெய்யில் வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வந்தால் உரிய பலன் கிடைக்கும். 
செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். 
சிலர் காயவைத்த செம்பருத்திப்பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக்கொள்ளலாம்.
நரைமுடி, பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் தீர செம்பருத்திப்பூக்களுடன் இதன் இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை போன்றவற்றைச்சேர்த்து மையாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் பிரச்னைகள் தீரும். இது கண், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சூட்டினால் வரக்கூடிய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு தலைமுடி பிரச்னை பெரும்பிரச்னை. முடி அதிகம் வளர வேண்டுமென்றால் இது கைகொடுக்கும். ஆனால் முடி அதிகம் வளர்ந்து சிலருக்கு ஈறும், பேனும் வந்து மிகுந்த அவதிக்குள்ளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் செம்பருத்திப்பூக்களைப் பறித்து இரவில் தலையில் சூடிக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு, பொடுகுத்தொல்லையும் நீங்கிவிடும்.
இதன் இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.
2 அல்லது 3 செம்பருத்திப்பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வு அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குவதால் வயிற்றிலும், வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval