Tuesday, September 27, 2016

பிளாஸ்டிக் கப்களால் பிரமிடு உருவாக்கி கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்!


உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்திருக்கின்றன. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பிரமிடுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். நம்மூரிலும் ஒரு மாணவன் பிரமிட் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார். ஆச்சர்யமாக உள்ளதா? இவர் உருவாக்கியது பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட். டெல்லியைச் சேர்ந்த குஷ்கர தயாள் (Kushagra Tayal), தலைநகரில் கல்லூரி மாணவர். சிறுவயதில் இருந்தே கின்னஸ் சாதனைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்டவர். லைப்ரரியிலும், நெட்டிலும் இதைப் பற்றித் தெரிந்துகொள்வதோடு தானும் ரெக்கார்டு படைக்கவேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பார்.

சாதனைப் படைப்பதற்காக, அதிகநாள் தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசிக்கலாம் என்று முயற்சித்தார் ஆனால் முடியவில்லை. அடிப்படையில் குஷ்கர தயாள் பேட்மின்டன் வீரர் அதனால், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பேட்மின்டன் விளையாடி சாதனைப் படைக்க நினைத்தார், அதிலும் தோல்விதான் பரிசாய் கிடைத்தது. ஆனாலும் சோர்ந்து விடவில்லை. மூன்றாம் முயற்சியாய், பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு பிரமாண்டமான பிரமிட் எழுப்பி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கத் திட்டமிட்டார் குஷ்கர தயாள். சக மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு 25 அடி உயரத்தில் 57,000 பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு மூன்றுநாடகளில், பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட்டை உருவாக்கினார்.



இந்த வித்தியாசமான ஐடியா குஷ்கர தயாளுக்கு தோன்றியதே ஒரு வேடிக்கையானது. ஒருநாள் கல்லூரியில் உள்ள கேன்டீனில் காஃபி குடித்துவிட்டு அந்த கப்பை விட்டெறிந்து விளையாடிக்கொண்டிருந்தபோது உருவானதே இந்த ஐடியா. வீட்டுக்குச் சென்று பிளாஸ்டிக் கப்பைக் கொண்டு யாராவது சாதனை செய்திருக்கிறார்களா என்று தேடினார். மெக்ஸிகோவில் 43,000 பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு பிரமிட் உருவாக்கியிருந்ததுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடிப்பது எப்படி என யோசித்தார். அதற்கு உதவியாக, முதலில இரண்டு நண்பர்களை தன்னுடன் சேர்த்துகொண்டார். ஆனால் பிரமாண்டமான பிரமிட் உருவாக்க இரண்டு பேர் போதாது என்று நினைத்த தயாள், தன்னுடன் படிக்கும் சில மாணவர்களை தன் குழுவில் இணைத்துகொண்டார். மொத்தம் 24 பேர் குழுவாக சேர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்தக் குழு, இம்மாதம் 17-ம் தேதி இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

சாதனைப் படைக்க வேண்டும் குஷ்கர தயாளின் கனவு நிறைவேறிய வருடமாக 2016 அமைந்துவிட்டது. இன்னும் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval