Saturday, June 14, 2014

சிக்னல்


சிக்னலில் நாம் காத்திருக்கும்போது , நம்மைச் சுற்றி நிற்பவர்கள் வெறும் மனிதர்கள் மட்டும் அல்ல..பலவித உணர்வுகளின் எதிர்பார்ப்புகளின் எண்ணங்களின் சங்கமங்கள்... 

புதிதாக வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்பவர்களுக்கு , சிக்னலைப் போல் குழப்பமும் பயமும் கொடுப்பது எதிரில் வரும் லாரி கூடக் கிடையாது..sp;


ஒரே எண்ண ஓட்டத்தில் பலவித முரண்பாடுகளை உள்ளடக்கியது இந்தச் சிக்னல் காத்திருப்பு.. 


இந்தச் சிக்னலைத் தாண்டி அந்தப் பக்கம் போனால் பிரிந்து வேறு வேறு திசையில் சென்று விட வேண்டி இருக்கும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் , சிக்னலைத் தாண்டிப் போய் , தான் கடன் வாங்கியவரிடம் வட்டிக்குத் தவணை சொல்லக் காத்திருப்பவருக்கும் , இந்தச் சிக்னல் இன்னும் கொஞ்சம் நேரம் நீள வேண்டும் என்று தோன்றி இருக்கக்கூடும்.. 


அன்றே முதன் முறையாகத் தன் காதலைச் சொல்லக் காத்திருப்பவனுக்கும் , விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் தன் குழந்தையைக் காண மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு இருப்பவனுக்கும் , இந்தச் சிக்னலின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றி இருக்கக்கூடும்.. 


ஐந்து நிமிடம் முன்னாடி வந்து இருந்தால் , தன் தாயிடம் இறுதியாய் இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கலாம்' என்று , தன் தாயின் உடலைப் பார்த்துத் துடிக்கும் மகனின் தவிப்பு , எப்போதுமே அந்தச் சிக்னலுக்குப் புரியப் போவதே இல்லை.. 


முண்டியடித்து முன்னால் சென்று நின்று விட வேண்டும் என்பதே ஒரே லட்சியமாகக் கொண்டு , நெருக்கித் தள்ளிக் கொண்டு குறுக்கே செல்பவனை ஏசிக் கொண்டு , ஏன் இப்படி மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்கிறான் ' என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு முன்னால் சென்று வண்டியை நிறுத்துபவர் கூட , ஒரு ஆம்புலன்சின் சைரன் சத்தம் ஒலிக்கும்போது , ஓரமாகப் போய் ஒதுங்கி நின்று
வழிவிடுவது , நெகிழச் செய்யும் நிகழ்வு.. 


சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கப் போகுது , பாத்துங்க' என்று பக்கத்து வாகனப் பெண்மணி எச்சரிக்கும்போது , சின்ன நட்பொன்று உருவாகி மறையும்.. 


பல நேரங்களில் , நாம் தொலைத்து விட்ட நம் பழைய நட்பைக் கண்டுபிடிக்கும் இடமாகக் கூட அமைந்து விடுகிறது இந்தச் சிக்னல் காத்திருப்பு.. 


சமயங்களில் , இலட்சியங்கள் உருவாகும் இடமாகக் கூட மாறி விடுகிறது இந்தச் சிக்னல் , அது சிறியதோ பெரியதோ.. 


முன்னால் நிற்கும் பெண்ணின் புடவையைப் பார்த்து , 'சே எவ்வளவு அழகான புடவை , நாமும் இதே மாதிரி ஒரு புடவையை எப்படியாவது தேடித் புடிச்சு வாங்கிரனும்' என்று ஒரு அக்கா முடிவு செய்து இருக்கக் கூடும்.. 


முன்னால் நிற்கும் அந்தப் பெரிய காரைப் பார்த்து , 'அப்பா நாமும் இதே மாதிரி கார் வாங்கலாம் பா' என்று சிறுவன் கேட்கும்போது , 'நிச்சயமாய் வாங்கலாம் கண்ணு' என்று சொல்லும் தந்தையின் மனதில் அந்தப் பெரிய கார் , ஏக்கமாகவும் இலட்சியமாகவும் பதிந்து போகும்.. 


சிக்னல் விழுவதற்குள் தாண்டிப் போய் விடவேண்டும் என்று அவசர அவசரமாய்க் கடக்கும்போது சர்வசாதாரணமாக , கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூர விபத்தொன்று நடந்து முடிந்து விடும்..உயிரை விட்டு விடவும் தயாராய் இருக்கும் சிலர் , ஒரு நிமிடம் பொறுத்திருந்து செல்லத் தயாராய் இருப்பதே இல்லை..அன்று நடந்து போன ஏதோ ஒரு சம்பவமாய் , ஒரு செய்தியாய் அது அன்றோடு மறந்தே போகும்.. 


நேரத்தைக் கடத்த மட்டுமே ஊரைச் சுற்றும் சிலருக்கு , முன்பு இருந்த அரை மணி நேரம் போல் , இது மற்றுமொரு 'ஒரு நிமிடம்' அவ்வளவே.. 


சிக்னலில் காத்திருக்கும் அனைவருமே , அந்தச் சிக்னலைத் தாண்டி அந்தப் பக்கம் விரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றைத் தேடியே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.. 


பலரது சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் , தனக்கேத் தெரியாமல் காரணமாகி விடும் அந்தச் சிக்னல் , தன்னந்தனியாய் ஒளித்துக் கொண்டு இருந்தது , சாலையில் யாருமே இல்லாத அந்த ஒரு நிமிடத்திலும்...!!! 


- கிருத்திகா தாஸ்...

பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval