Tuesday, November 22, 2016

இப்படியும் ஒரு தாய் கடத்தல் நாடகம் அம்பலமானது

வறுமையில் மகளை வளர்க்க முடியாத தாய், அவரை கோயிலில் தவிக்கவிட்டுவிட்டு போலீஸ் நிலையத்தில் தன்னுடைய மகளை யாரோ கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் அந்தத்தாய் தெரிவித்த தகவல் நாடகம் என்று அம்பலமாகியுள்ளது. 
 திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நெல்லை மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த முருகன், வேலை விஷயமாக திருச்சி சென்றார். அப்போது மாரியம்மாளுக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாரியம்மாளையும், மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு முருகன், கல்லிடைக்குறிச்சிக்கு வந்துவிட்டார். இவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த சமயத்தில் இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டியது. குழந்தைகளை வளர்க்க முடியாமல் மாரியம்மாள் தவித்தார். இந்த சமயத்தில் மாரியம்மாள் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்துக்கு மாரியம்மாள் இன்று வந்தார். தன்னுடைய 8 வயது மகளுடன் கல்லிடைகுறிச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் பஸ்சில் மாரியம்மாள் வந்ததாக தெரிவித்தார். பஸ் நிலையத்தில் நின்ற   நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணிடம் தன்னுடைய மகளை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு பாத்ரூம் சென்றதாகவும், பிறகு மகளையும், அந்த பெண்ணையும் காணவில்லை என்றும், இதனால் அவர்  தன்னுடைய மகளை கடத்தி விட்டதாகவும் மாரியம்மாள், போலீஸிடம் பதற்றத்துடன் தெரிவித்தார். இதனால் மாரியம்மாளின் மகளை கடத்திய அந்த நடுத்தர வயதுடைய பெண்ணை தேடினோம். 

 இந்த சமயத்தில் பாபநாசம் கோயிலில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் விஜி என்பவர் தனிப்பிரிவு எஸ்.ஐ செந்திலுக்கு போனில் ஒரு சிறுமியை கோயில் வாசலில் நின்று அழுது கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். போலீஸ் எஸ்.ஐ இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் சொன்னார். உடனடியாக அம்பாசமுத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோஜா, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டார். அவரிடம் விசாரித்த போது 'தன்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இன்று காலை சண்டை வந்தது. இதனால், தன்னை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வந்த அம்மா, என்னை இங்கே தவிக்கவிட்டு சென்றுவிட்டார். அவரது பெயர் மாரியம்மாள், கல்லிடைக்குறிச்சி' என்று தெளிவாக சொன்னார் அந்த சிறுமி
. இதனால், அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ரோஜா, மீண்டும் மாரியம்மாளிடம் விசாரித்தார். அப்போதும் அவர், தன்னுடைய மகளை கடத்தியதாக தெரிவித்தார். இதனால் போலீஸார், மாரியம்மாளிடம் சிறுமி சொன்ன தகவலை தெரிவித்ததும் அவர் கதறி அழுதார். தன்னுடைய 'குட்டு' வெளிப்பட்டது தெரிந்ததும் போலீஸாரிடம் மாரியம்மாள் மன்னிப்பு கேட்டார்
  இதையடுத்து வறுமையில் மகளை கோயிலில் விட்டதாக  மாரியம்மாள் தெரிவித்தார். அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணத்திலேயே இந்த செயலில் ஈடுபட்டதாக மாரியம்மாள் போலீஸிடம் சொன்னார். இதன்பிறகு மாரியம்மாளை எச்சரித்த போலீஸார், மகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்" என்றனர். 
 வறுமையின் காரணமாக மகளை விட்டு பிரிய நினைத்த அந்த தாயின் நிலைமையை எண்ணி அனுதாபம் மட்டுமே வந்தது. அதே நேரத்தில் அந்த தாய் தெரிவித்த தகவல் இன்று அம்பாசமுத்திரம் போலீஸரையே பதற வைத்துவிட்டது.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval