Thursday, November 24, 2016

ரிமோட் டிராக்டரில் முக்கால் மணி நேர உழவு! தமிழக இளம் விஞ்ஞானியின் சாதனை

இளம் விஞ்ஞானிவிவசாயத்தில் மிகப்பெரிய சவால், தொழிலாளர் பற்றாக்குறைதான். அதைச் சரி செய்ய சின்னச் சின்ன எந்திரங்களின் பயன்பாடு அவசியமாகிறது. அந்த வகையில் நெல் சாகுபடி வயலை மட்டப்படுத்தும் வகையில் சோலார் பவரில் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய டிராக்டர் மாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார்,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசூர்யா. இவர், கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புக்காக, சமீபத்தில் டில்லியில் நடந்த குழந்தைகள் தினத்தன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் 'இளம் விஞ்ஞானி' விருதைப் பெற்றுள்ளார். விருது வாங்கிய மகிழ்ச்சியில் இருந்த சிவசூர்யாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம்.
"என் தாத்தாவும் மத்த சொந்தக்காரங்களும் தேனி மாவட்டத்துல நெல் சாகுபடி விவசாயம் செஞ்சுட்டுருக்காங்க. நான் லீவுக்கு அங்க போறப்போ வயலுக்குப் போவேன். ஒரு முறை அப்படிப் போனப்போ, மாட்டு ஏர்ல மட்டப்பலகை பூட்டி நெல் வயலை சமப்படுத்திட்டு இருந்தாங்க. அது குறித்து தாத்தாகிட்ட கேட்டப்போ... ''நெல் வயல், மேடு பள்ளம் இல்லாம் மட்டமா இருந்தாத்தான் சரியா தண்ணி நிக்கும். அப்போதான் எல்லாப்பயிர்களுக்கும் தண்ணியும் அதுல கலந்து விடுற இடுபொருட்களும் சமமாக் கிடைச்சு விளைச்சல் சீரா இருக்கும்''னு சொன்னார். நான் அங்க இருக்குறப்போ அடுத்த மூணு நாள் வேலைக்கு ஆட்கள் வராம தாத்தா கஷ்டப்பட்டுட்டு இருந்தார். அப்போதான் இதுக்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிச்சா என்னானு தோணுச்சு. அதை வெச்சுதான் இந்த எந்திரத்தை வடிவமைச்சேன்" என்ற சிவசூர்யா அக்கருவியை இயக்கிக் காட்டினார்.
"இதுல 12 வோல்ட் மற்றும் 10 வாட்ஸ் அளவு சோலார் எனர்ஜியை சேகரிக்குற அமைப்பைப் பொருத்தியிருக்கேன். பின்புறம், மட்டப்பலகை மாதிரி ஒரு இரும்பு பிளேட் பொருத்திருக்கேன். அந்த பிளேட்டை தேவையான அளவு உயர்த்திக் கொள்ள முடியும். ரிமோட் மூலமா இதை முன்னாடியும் பின்னாடியும் இயக்க முடியும். வலது இடது புறம் திருப்பவும் முடியும். இதை இயக்கும்போது பின்னால் உள்ள இரும்பு பிளேட் நிலத்தை மட்டப்படுத்தும். ஒரு ஏக்கர் நிலத்தை முக்கால் மணி நேரத்துல சமப்படுத்திட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தை மாடு பூட்டி சமப்படுத்த 5 மணி நேரம் ஆகும். இந்த எந்திரத்துல இருக்குற பேட்டரி, இரண்டு மணி நேரத்துல சோலார் எனர்ஜி மூலம் முழு சார்ஜ் ஆகிடும். ஒரு முறை சார்ஜ் ஏத்திட்டா 8 மணி நேரம் இயங்கும். இதை இயக்க ஒரு ஆளே போதும். இதைப் பெரிய அளவில் செய்யும்போது விவசாயிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்றார், சிவசூர்யா.
இக்கண்டுபிடிப்பு மாவட்ட, மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்துதான், 'இளம் விஞ்ஞானி' விருது வழங்கப்பட்டுள்ளது.

நிறைவாகப் பேசிய சிவசூர்யா, ''எரிமலை வெடிக்கிறதைக் கண்டுபிடிக்கிற கருவி, விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ற அலாரம், பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் சாதனம், காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ற கருவி...னு இதுவரை 8 கருவிகளை கண்டுபிடிச்சுருக்கேன். அடுத்ததா விவசாயிகளுக்கு உதவுற பல கருவிகளை வடிமைக்கலாம்னு இருக்கேன்" என்றார், அந்த குட்டி விஞ்ஞானி.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval