Tuesday, February 2, 2016

தனக்கே இல்லாத நிலை வரும்வரை, தருவது மட்டுமே, தானம்!


விடியற்காலை,...
ஆந்திர நர்ஸிப்பட்ணத்தில் இருந்து லம்பாசிங்கி எனும் ஊருக்கு போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசை டீக்கடையில், காலை உணவுக்காக என் பைக்கை நிறுத்தினேன். மெயின் ரோடை ஒட்டியிருந்த அந்தக் குடிசையின் வெளியெ ஒரு டேபிள் போட்டு, அதில் ஒரு வயதானவர் டீ போட்டுக் கொண்டிருந்தார்.
"ஒரு கப் டீ,... கூட எதாவது சாப்பிடக் குடுங்க..."
அந்த முதியவர் டீ போடும் பாத்திரத்தைக் காட்டி, ஏதோ சொன்னார். எனக்கு அவர் பேசிய பாஷை தெரியாது. நான், சாப்பிட எதாவது வேண்டும் என்று சைகையால் எனக்குத் தெரிந்த அளவில் காட்டினேன்.
அவர், தன் அருகே நின்று என்னை உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை நோக்கினார். அந்த மூதாட்டி, என்னிடம் அங்கிருந்த ஒரு பெஞ்ச்சைக் காட்டி அதில் உட்காருமாறு சைகையால் காட்டிவிட்டு, உள்ளெ சென்றார்.
சற்று நேரத்தில் ஒரு தட்டில் சட்டினியுடன், சுடச் சுட இட்டிலிகளை, கொண்டு தந்தார். விடிகாலை நேரத்தில் சூடான டீயுடன் ரசித்துத் தின்ன அற்புதமாக இருந்தது அது.!
தின்று முடித்தவுடன்,... "எவ்வளவுங்க தரணும்....?"
"அஞ்சு ரூவா...!" (சைகையில்)
என்னதான் இந்தியாவில் மிகவும் வறுமையான ஒரு கிராமத்தில் இருந்தாலும், வெறும் ஐந்து ரூபாய், ஒரு ப்ளேட் இட்டிலி, சட்டினி, டீக்கு மிகவும் குறைவு என்று தோன்றியது!
என் வியப்பை சைகையில் புரியவைத்தேன், அவருக்கு! அவர் மீண்டும் அந்த டீ போடும் பாத்திரத்தையே காட்டி, என்னவோ சொன்னார்!
சைகையால்,... "இந்த ப்ளேட் இட்டிலிக்கு.?"
அப்பொழுது, அந்த மூதாட்டி ஏதோ பதில் சொன்னார். அதுவும் எனக்குப் புரியவில்லை. சற்று யோசித்த பொழுது,... சட்டென உறைத்தது.! அவர்கள், வெறும் டீக்கு மட்டுமே பணம் கேட்டிருக்கிறார்கள்!
நான் உடனே திரும்பவும் அந்த பிளேட்டைக் காட்டி, அதற்கும் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தேன். இருவரும் என்னைப் பார்த்து மெலிதாய் அன்புடன் சிரித்தார்கள். அப்பொழுதுதான் என் மண்டைக்குள் ஏறியது.! அது வெறும் டீக்கடை மட்டுமே! அவர்கள் தங்களுக்கு உண்ண வைத்திருந்ததை, எனக்கு அளித்துள்ளார்கள்! கடவுளே! அப்படியானால், அவர்களுக்கு காலை உணவு குறையுமே!
ஒரு கணம் அமைதியாக, ஆழமாக, நடந்து கொண்டிருப்பதை யோசித்தேன்! சட்டென என் பர்சைத் திறந்து கொஞ்சம் பணம் எடுத்து, அந்த முதியவரிடம் தந்தேன். அவர் மறுத்து விட்டார்!
சற்று நேரம் அடம் பிடித்து, என்னென்னவோ சொல்லி, கடைசியில்,... மிகவும் கெஞ்சி,... அவரை அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள வைத்தேன்!
---------------------
லம்பாசிங்கி ஊருக்கு திரும்பவும் என் பைக்கில் அமர்ந்து பயணித்த பொழுது, அந்த வயதான தம்பதியரையே நினைத்துக் கொண்டு ஓட்டினேன். என் வாழ்க்கைக்கு ஒரு பாடம் கிடைத்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval