Tuesday, June 28, 2016

ட்ரீட் கேட்ட இன்ஸ்பெக்டரை, சிறைக்கு அனுப்பிவைத்த காவலர்

வேலூர்: உடன் பணிபுரியும் காவலரிடம் விடுப்பு மற்றும் ட்ரீட் அளிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 15-வது பட்டாலியனில் நாயக்காக பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக பத்து நாட்கள் விடுமுறை தருமாறு தனது மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் இவர் கேட்டுள்ளார். 

அதற்கு ‘ விடுமுறை தரவேண்டுமானால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் 2 ஆயிரம்  ரூபாய் கொடுக்கவேண்டும்’ என்று  பன்னீர்செல்வம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு சமீபத்தில் நாயக்காக திருமூர்த்தி பதவி உயர்வு பெற்றார். அதற்கும் ட்ரீட் செலவுக்கு 500 கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கேட்டதாக தெரிகிறது. 

இதனால் எரிச்சலான திருமூர்த்தி பன்னீர்செல்வத்திடம் பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில் இன்று ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் கொடுத்தார்.
அதனை பன்னீர்செல்வம் வாங்கியபோது மறைந்திருந்த ஏடிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீசார் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது மற்ற காவலர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

- அ. அச்சணந்தி
- VIKATAN

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval