Sunday, November 12, 2017

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் மனைவி மிட்டல் மற்றும் 8 வயது மகன் ஜெய்யுடன் வசித்து வந்தவர் ஆகாஷ் தலாதி (வயது 40). இந்தியரான இவரது பூர்வீகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரம் ஆகும். இவர் வடக்கு கரோலினாவின் பிரட்வெல் சாலையில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு கொள்ளையர்கள் சிலர் இவருடைய விடுதிக்குள் நுழைந்தனர். அப்போது ஆகாஷ் தலாதி மற்றும் சில ஊழியர்கள் அங்கு இருந்தனர். கொள்ளையர்கள் விடுதியில் இருந்த பணத்தை திருட முயன்றபோது ஆகாஷ் தலாதி அவர்களை தடுத்தார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டார்.

இதில் ஆகாஷ் தலாதி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் ஊழியர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு கரோலினா மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆகாஷ் தலாதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று அங்கு குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy;Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval