Thursday, November 2, 2017

கோபம் எதனால் வருகிறது

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். 

ஒருவர் கூறினார்

நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. 

நான் ஒன்று சொன்னால், 
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

மற்றொருவர், 

யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். 

அடுத்தவர், 

நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். 

இன்னொருவர், 

சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். 

வேறொருவரோ, 

நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். 

இப்படி ஒவ்வொருவரும் 
தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். 

இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.

அது சரி...

நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? 
என்றதற்கு, 

அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். 

கோபம்னா என்ன? 

கோபம் என்பது 
அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு 
நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

அதுமட்டுமல்லாமல் 

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் 

இதே கோபத்துடன் செயல்பட்டால் 

நட்பு நசுங்கி விடும். 
உறவு அறுந்து போகும். 
உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? 

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. 

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. 

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. 

இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, 
ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. 

இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். 
இதே நிலை நீடித்தால் 
ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல. 
சத்தியமான உண்மை இது. 

இதெல்லாம் நீங்க சொன்னீங்க...
உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு 
நீங்க சொல்றதும். 

அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... 
அப்படி வாங்க வழிக்கு. 

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். 

முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. 

அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. 

அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... 

ஈகோ பார்க்காதீங்க. 

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. 

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. 
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.
அப்படி இல்லைன்னா 
அந்த இடத்தை விட்டு நகருங்க...

தனியா உக்காந்து யோசிங்க. 
அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். 

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. 

அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். 
என்ன நடந்துருச்சு பெருசா. 
என்னத்த இழந்துட்டோம். 
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. 

அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. 
எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. 

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் 
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. 

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. 

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க 
அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. 
ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். 
இதில் ஆறாவது அறிவை 
அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...

கோபம் வரவே வராது. 

நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். 

வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

என்னங்க நான் சொல்றது சரியா?
என் மேலே கோபம் இல்லையே!.....
தகவல் K.M.S.சகாப்தீன் 
மலேசியா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval