Thursday, August 10, 2017

ஒரு எச்சரிக்கை தகவல்

பெண் நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் பிரபல மேட்ரிமோனியல் தளங்களில் பதிவு செய்துவிட்டு தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தனர், அவரும் அவ்வப்போது Login செய்து தனக்கு வந்துள்ள வரன் விண்ணப்பங்களை ஆய்வு செய்த வண்ணம் இருந்திருக்கிறார், அதில் இருந்த ஒரு விண்ணப்பம் பிடித்து போக பெற்றவர்கள் அனுமதியுடன் அதற்க்கு பதில் அனுப்ப, பதிலுக்கு மிக பணிவாக அசர வைக்கும் ஆங்கிலத்தில் பதில் வர தொடர்ந்து இணையத்தில் இந்த சம்பாஷணை தொடர்கிறது, எதிர்புறம் தன்னை லண்டனில் ஒரு மிகப்பெரிய வேலையில் இருப்பவன் என்றும் பெண் நண்பரை தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிகவும் பிடித்திருக்கிறது எனவும், ஜாதகமும் பொருந்துகிறது என அடுக்கடுக்காய் அன்பு கணைகள் தொடுக்க உருகி போன இவர் உரையாடலை வாட்ஸப்பில் வரவேற்று தொலைபேசி அழைப்புகளில் தொடர்ந்திருக்கிறார். ஒரு சில நாட்களிலேயே இந்த உரையாடல்கள் காதலாய் மலர இவரை பார்ப்பதற்காக இவர் பெற்றோர்களை பார்த்து பேசுவதற்காக லண்டனில் இருந்து இந்தியா வருவதாக தெரிவித்தவன், இவருக்காக ஒரு விலையுயர்ந்த நெக்லஸை பரிசாக கொண்டு வருவதாகவும் வாட்சப்பில் புகைப்படம் அனுப்ப, ஏற்கனவே லண்டனில் இருந்து மாப்பிளை வாறார் என அகமகிந்து அவசர கோலத்தில் வீட்டையெல்லாம் ரெடி பண்ணி காத்திருந்த பெற்றோரும் பெண்ணும் இந்த நெக்லஸ் போட்டாவை பார்த்து ‘நெக்’குருகி போனார்கள்.
அந்த மாப்பிளை மவராசன் இந்தியா வரும் தினமும் வந்தது, இவர்களும் காத்திருந்தனர், ஆனால் சொன்ன நேரத்திற்கு ஆளும் வரவில்லை, போனும் வரவில்லை, கால் செய்தாலும் யாரும் எடுக்காததால் முதலில் பதறி போன பெண் பொறுமையிழந்து தொடர்ந்து கால் செய்ய, பல முயற்சிகளுக்கு பிறகு போனை எடுத்த லண்டன் மாப்பிள்ளை சற்றே கலவர குரலில் "ஹனி, சம் ப்ராப்லம் ஹியர், நான் திருப்பி கால் பண்றேன் என வைக்க முயல, பதறி போன பெண் "என்னடா ஆச்சு சொல்லு, ஐ வில் ஹெல்ப் யூ" என வெள்ளந்தியாய் கேட்க, இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்த லண்டன் லார்டு தன் மோசடி மூட்டையை அவிழ்க்க துவங்கினான், 'மும்பை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் செக்கிங்கில் இருக்கிறேன் என்றும் விலையுயர்ந்த நெக்லஸ் மற்றும் அதிக அளவில் பவுண்டு பணம் கொண்டு வந்த காரணத்தால் பிடித்து வைத்து கொண்டு லஞ்சம் தந்தால் தான் அதை எடுத்து போக அனுமதிப்போம் என கஸ்டம்ஸ் அதிகாரிகள் முரண்டு பிடிப்பதாக தெரிவித்தவன், அவர்களுக்கு கொடுப்பதற்கு தன்னிடம் இந்திய ரூபாய் எதுவும் இல்லை , அக்கவுண்டில் செலுத்துகிறேன் என்றாலும் வெளிநாட்டு வங்கியில் இருந்து தங்களுக்கு பணம் வந்தால் எங்களுக்கு பிரச்னை என அவர்கள் மறுத்துவிட்டதாகவும் செய்வதறியாமல் நான் இங்கு நிற்கிறேன் என கதற,அதிர்ந்து போன பெற்றோரும் பெண்ணும், "இந்த இந்தியாவே இப்படித்தாங்க, லன்ச் சாப்பிடறதே லஞ்சத்திலதான், நீங்க கவலைப்படாதீங்க மாப்ள, போன அந்த ஆஃபிஸர் கிட்ட கொடுங்க, நாங்க பேசிக்கிறோம்" என சொல்ல,
போனை வாங்கி சலித்த குரலில் பேசிய ஆபிசர் , "சார் கஸ்டம்ஸ் ஆக்ட் படி ஆண் 50000 பெருமானம் உள்ள நகை பொண்ணுங்கன்னா 100000 பெருமானம் உள்ள நகை தான் வெளிநாட்லருந்து கொண்டு வரலாம், உங்க மாப்பிள்ளை வச்சிருக்கிற நெக்லஸ் மட்டும் ஒரு ஆறு லட்சம் வரும், அது போக பவுண்டு பணம் மட்டும் நம்ம ரூபா மதிப்புக்கு ஒரு 30 லட்சம் இருக்கும் சார், கஷ்டம் சார், லா பிரகாரம் இதெல்லாம் சரி வராது, பெனால்டி போட்டா எகிறிடும், அதான் ஒரு 5 லட்சம் பார்த்து செய்ய சொல்லுங்க , விட்ரலாம், என்ன சொல்றீங்க ?" என போனில் பேரத்தை ஆரம்பிக்க, இடையில் மறித்து போனை வாங்கிய லண்டன் மாப்பிள்ளை, "அங்கிள், இவங்க பொய் சொல்றாங்க நான் இந்தியன் கஸ்டமஸ் ஆக்ட் படிச்சுட்டு தான் பணம் கொண்டு வந்தேன், வெளிநாட்டு பணம் கொண்டு வர லிமிட் கிடையாது, கஷ்டம்ல்ஸ ஜஸ்ட் டிகிளேர் தான் பண்ணனும், இவங்க வேணும்னே பண்ணறாங்க, டோன்ட் பே தேம் அங்கிள், தீஸ் ஆஃபீசர்ஸ் ஆர் சீட்டிங்" என பொய்க்கண்ணீர் வடிக்க. "மாப்பிள்ளை இங்க எல்லாம் இப்படித்தான், நாங்க பாத்துகிறோம், நீங்க போனை ஆபிசர் கிட்ட கொடுங்க என பெண்ணின் பெற்றோர் சொல்ல, பொய் கோபத்துடன் போனை வாங்கிய ஆபிசர் "சார், இதெல்லாம் வேலைக்காவாது, டிபார்ட்மென்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிரும், நீங்க ஒழுக்கமா பெனால்டி கட்டி எடுத்துட்டு போக சொல்லுங்க" என எகிற, "சார், சாரி சார் ..உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க, இன்னொரு அரை மணிநேரத்தில் பணம் அனுப்புறோம், அவரை விட்டுருங்க சார் ப்ளீஸ், பொண்ணை பார்க்க மொத மொதல்ல வாறார், அபசகுனமா நினைச்சுக்க போறார், பார்த்து செய்யுங்க" என கெஞ்ச, "சரி பெரியவரே, கல்யாண மேட்டர், அதனால ஒத்துக்குறோம், இந்த அக்கவுண்டுக்கு பணத்தை பிரிச்சு போடுங்க" என மூன்று நாலு வங்கி கணக்குகளை தர அத்தனையும் நோட் பண்ணிக்கொண்டு பெண்ணின் குடும்பம் போனை வைத்த மறுநொடி பணத்தை போட பேங்கை நோக்கி ஓட துவங்கினர்.
அப்போது எதேசையாக நண்பருக்கு நான் போன் பண்ண விஷயம் தெரிந்து அதிர்ந்து விட்டேன், நண்பரித்தில் மிக தெளிவாகவே சொன்னேன், இது ஒரு ஏமாற்று வேலை, நீங்கள் பணத்தை இழக்க போகிறீர்கள், பொறுமையாக நான் சொல்வதை கேளுங்கள் என இந்த மோசடி பற்றிய இணைய செய்திகளை அவருக்கு அனுப்பினேன், படித்து நண்பரின் குடும்பம் சற்று கலவரமானாலும், "தம்பி மாப்பிளை ரொம்ப நல்லவர், இங்க வந்தவுடன் பணத்தை கூட திருப்பி தரேன்னு சொன்னார், நீங்க சொல்ற விஷயங்கள் உலகத்தில நடந்திருக்கலாம், ஆனா இவர் பாவம் அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க" என என்மீது கோபப்பட்டனர், சற்று மன வருத்தம் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கடின உழைப்பு, சேமிப்பு வீண் போய்விடக்கூடாது என மனதில் பட்டதால் தொடர்ந்து அவர்களிடத்தில் பேசி இந்த மோசடியை விளக்கினேன். “தம்பி, அப்ப அந்த கஸ்டம்ஸ் ஆஃபீசர் பொய் , இந்த மாப்பிள்ளை பொய் , ஏர்போர்ட் பொய் , எல்லாமே பொய் னு சொல்றீங்களா என்ற கேள்விக்கு "நிச்சயமாக,...வேண்டும் என்றால் உங்க மாப்பிள்ளைக்கு கிட்ட சொல்லி லண்டன்ல இருந்து அவர் இப்ப வந்திருக்கிற விமான டிக்கட்டை வாட்சப்ல அனுப்ப சொல்லுங்க, ஏன்னு கேட்டா ஒரு சில காரணத்துக்காக பேசஞ்சர் லிஸ்ட் செக் பண்றோம் னு சொல்லுங்க" என்றேன், இவர்களும் கேட்டிருக்கிறார்கள், முதலில் என்ன நம்ப மாட்டேங்கிறீங்களா என பொய் கோபம் காட்டிய மாப்பிள்ளையும், சார் டைம் இல்ல என அவசரம் காட்டிய ஆபிசரும் தொடர் கேள்விகளுக்கு பிறகு நிரந்தரமாக ஸ்விட்ச்ச் ஆப் ஆகிவிட்டனர்.
இந்த மோசடி கும்பலில் பெண்களும் இருக்கிறார்கள், அர்த்த ராத்திரி ஆன்லைன் சாட்டிங் கனவான்கள் தான் இவர்கள் குறி, அதே டெய்லர் அதே வாடகை போல , இவர்களிடத்தில் அதே காதல், அதே ஏர்போர்ட் , அதே கஸ்டம்ஸ் தான், வழிசலுக்கு எற்றவாரு ஒரு அமவுண்டை மொத்தமாக வழித்துவிட்டு கொண்டு சுவிட்ச் ஆப் ஆகிவிடுவார்கள். நல்ல காதலையே வெட்டி கொன்றுவிடும் நம்ம ஊரில் இந்த கனவான்கள் கள்ள காதலில் தான் ஏமாந்த கதையை யாரிடத்தில் சொல்வார்கள் பாவம், ஆகவே நீங்கள் யாராயிருப்பினும் இவ்வகை மோசடிகளை தெரிந்து கொள்ளுங்கள், தெளிவாக இவற்றில் இருந்து உங்களையும் உங்கள் சேமிப்பையும் காத்து கொள்ளுங்கள். நண்பர்கள் யாரேனும் இதில் அகப்பட்டுக்கொண்டிருப்பின் அவர்களுக்கும் இந்த மோசடியை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் நமக்கு தெரிந்த ஒரு எச்சரிக்கை தகவலை சரியான நேரத்தில் நண்பர்களுக்கு சொல்லாமல் மௌனம் காப்பதும் ஒருவகையில் அவர்கள் ஏமாற்றுவதற்கு துணை போவது போலத்தான். மயிரிழையில் பணம் தப்பிய மகிழ்ச்சி அந்த பெற்றோருக்கும் பெண்ணுக்கும் இருந்தாலும் தான் ஏமாற்றுபட்டுவிட்டோம் என்ற மனவலி இப்போதும் அவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது, வாழ் நாள் முழுவதும் அது இருக்கும் , So Beware and be safe friends.

Hariharasuthan Thangavelu எழுதியது.

courtesy;சமுதாய நல மன்றம்  மல்லிபட்டினம் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval